புதன், 22 செப்டம்பர், 2010

அதிசய உலகம் நீ மட்டுமே

ஏதேதோ பேசிக் கொண்டே
உன்னையே பார்ப்பேன் நான்
ம்ம்... என்று சொல்லிக்கொண்டே
குழந்தையாக என்னையே பார்ப்பாய் நீ...

நீ தூங்குவதை நான் பார்க்க விழித்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
நான் தூங்கும் அழகை
நீ ரசித்த இரவுகள்தான் அதிகம்...

உனக்காக செய்யும் எல்லாவற்றிலும்
எனக்கானதை நான் மறந்துவிடுவதுண்டு
எனக்காக நான் எதை தேர்வு செய்தாலும்
அது உனக்கு பிடித்திருக்கவே ஆசைபடுவதுண்டு...

வீட்டின் நாட்குறிப்பேட்டில் உள்ள
தினங்களில் சிகப்பு நாட்களை
மட்டுமே நான் நேசிக்கிறேன்
உன் விடுப்பு தினம் அது என்பதால்.....

அலுவலக நெருங்கும் நேரம்
நீ அரக்க, பறக்க கிளம்பும் தருணம்
அழுக்கு படிந்த முக வியர்வையை புடவையில் மறைத்து
கதவோரும் நானிருந்து இமைக்காது கையசைப்பது சுகம்...

நெடுந்தூரம் உன்னோடு நான் பயணிக்கும் வேளையில்
இது அதுவென்று, அது இதுவென்று
என்று சாலையில் விவரிப்பாயே அப்போது
உன் தோள் சாய்ந்து கேட்பது இதம்...

உனக்காக காத்திருக்கும் எண்ணற்ற
உலகத்துக்கு மத்தியில்
நமக்காக வாழும் போதும்
எனக்கான அதிசய உலகம் நீ மட்டுமே !!

 பாடகன்

--------mvidhyasan@gmail.com