புதன், 22 ஜூன், 2011

புரிகிறது


என் கனவுகள் நிரம்பி வழிகிறது
உன் விழி பார்வையில்

இன்னும் நிமிடங்கள் நீள கேட்கிறது
உன்னுடன் இதயம் உடைகையில்

விண்ணுலகம் வாசல் திறக்கிறது
உன் பெண்ணுலகம் நுழைகையில்

உயிர் துளி மெல்ல கசிகிறது
உன் விரல் நுனி உலா வருகையில்

இரு விழி கடலாகிறது
உன் இதழ் படகாய் கவிழ்கையில்

ஐம் புலன்களும் ஆவியாகிறது
உன் அழகில் மூழ்கையில்

மரணங்கள் மயிலிறகாகிறது
உன் மடி மீது தலை சாய்கையில்

உணர்வுகள் புத்தகங்களாகிறது
உன் பாத தடங்களின் அலமாறியில்

நினைவுகள் களவாடுகிறது
உன் பிம்ப நிழல் ஊஞ்சலாடுகையில்

அடடா...
ஆதாம் ஏவால் அர்த்தம் புரிகிறது
நீ அடுத்தடுத்து என்னை உடுக்கையில் !!

செவ்வாய், 21 ஜூன், 2011

புது புது

விலையில்லா தருணம்
உன்னோடு உரையாடும் நிமிடம்

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் பாதையில்

தனிமையில் களவாடல்
உன் நிமிடங்களோடு நகர்தலில்

மெளனங்களிடம் மன்னிப்பு
உன் இதழ் விரிப்பின் காத்திருப்பில்

உலகத்தின் வனப்பு
உன் விரல் கோர்கையின் நிமிடத்தில்

காயத்தில் தேன்
என் கண்ணீர் கடலில் துடுப்பாய் உன் விரல்

சோகத்தில் தாலாட்டு
சாய்ந்து கொண்டது என் நெஞ்சம் உன் தோளில்

மரணத்தின் முன்னோட்டம்
துளி தருணத்தில் உள்வாங்கினேன் உன் பிரிவில்

சருகாய் இதயம்
உன் முகவரியை தேடிபோதெல்லாம்


அலை அலையாய் சுகம்
நீ அருகினில் இருக்கும்போது வரும்


மழை மழையாய் பொழியும்
நீ கணம் கோபித்தாலும் என் விழியில் நிகழும்

மலை மலையாய் மனம்
உன் உறவு உதயமானதால் வளரும்

பிழை மட்டுமே கவிதையாய்
நீ... இதழ் கடித்து படிப்பது என்றால் !!

அம்மா - சும்மா

எத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா
 

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என்தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன 

காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!

புதன், 8 ஜூன், 2011

எல்லாம் - நீயே

பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்