ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வா கள்ளனே

மழை தடுக்க மலை தூக்கி
குடையாக்கிய குழலாதவனே
மயிற்பீலி தலையில் சூடி
மயக்கமுறக் கொல்லும் மாதவனே
பின்னிடை பிடித்து தன்னிலை மறக்க
மாயம்புரியும் வாசுதேவனே
கண்ணிடையில் கன்னியரை
காதல் பெருகச்செய்திடும் கண்ணனே
மென்நீலமேக தேகமீது மீளா நேசமிகு
மோகமது தந்திடும் கோபாலனே
நின் பாதம் பற்றும் பாமரனின் பாவம் தீர்த்து
பலமருளும் பரந்தாமனே
என் பாடல் யாவிலும் பாவித்திருக்கும்
என்னில் பாதியான கிருஷ்ணனே
நல் கீதையது நாளும் விடியும் காலையது
காதினில் ஓதிட வா வா கள்ளனே ~~~



-வித்யாசன்

கடவுள்

காம தூசு தட்டியக் காதலில்
கட்டியமற்று காட்சியளிக்கிறார்
கடவுள் ~~~


( கட்டியம் - புகழ்மொழி )


- வித்யாசன்

முத்தக் கவிதை

என் எண்ணக்காட்டில்
கன்னங் கிளை அமர்ந்து
இச் ... இச் .... எனக் கத்தும்
இப்பைங்கிளியின் பசியாற
இப்பொழுதே உண்ணத்தருகிறேன்

என் முத்தக் கவிதைகளை ~~~

 


- வித்யாசன்

சுழலிகள்

மன ஆடை கழற்றிய நிர்வாணத்திலும்
அரூப முத்தத்திலும் தித்தித்தே திளைக்கிறது
நினைவுக் கண்ணாடியில்
நிறையா பேராசை சுழலிகள் ~

கண்ணா

வீணாய் பொழுதது கழியுது
மீனாய் விழியது தேடுது
வேம்பாய் வார்த்தைகளானது
வீம்பாய் காக்கவைத்தலாகாது
நேராய் இங்கே வாராய் கண்ணா ;


கடும் நோய்விடக் காதல் கொடியது
அதைவிடக் காத்திருத்தல் கடினமது
பெருந்துன்பம் தாராது பொறுமை போதாது
வெறுமை முழுவதுவுண்டுவிடப் பாராது
எங்கேப் போயொழிந்தாய் கண்ணா ;

பாவை உடலின்று பனையென மெலியுது
பாம்பினது தலைமீது நடமாடும் பாதவடிவது
பூவெல்லாம் மயக்கும் புல்லாங்குழலிசையது
பூலோகம் ஓரடி அளந்த புன்னகை முகமது
காணாது வாடினேன் வந்தணைக் கண்ணா ;

கூடிய நினைவுகள் ஒன்றுகூடியே நகைக்குது
கைகோர்த்து ஆடிய மனதின்று நீரற்ற ஆறானது
பேடிருளில் எனை பேதமைச் செய்யலாகாது
பெரும் காமத் தீ தள்ளி; நீ தள்ளி நிற்க நியாயமாகது
பேரன்புடையோனே அழைக்கின்றேன் வா கண்ணா ;

கோவமடையும் வரை வேடிக்கைப் பார்க்காது
கொந்தளித்தே குறை கூறி அழவைத்தல் ஆகாது
மாயங்கள் புரிந்தென்னை சோதனை செய்திடாது
மார்மீது சாய்த்து மனச்சாந்தி தந்திடவே
கார் மேகமென விரைந்தே வந்திடுவாய் கண்ணா ~~~

- வித்யாசன்

நம் நேசமே












நேசமுறக் கலந்ததும்
நேசமுதிரக் கலைந்ததும்
காரணம் - நம் நேசமே ~~~~


- வித்யாசன்

கலக்காத

கூட்டத்தில் கலக்காத கருங்குயிலொன்று
கூவும் ஓசை அழகு நயம் கண்டு
சோலையில் வீற்றிருந்த மலரிலை யாவும்
தலையசைத்து, தரை வீழ்ந்து
தத் தரிகிடதோம் ; தத் தரிகிட தோம் என
கைதட்டி, நடனமாடுது அது
பறந்து செல்லுமுன்
பாரடி என் தோழி ~~~ 





- வித்யாசன்

நான் - நீ

வெள்ளை
காகிதமாய் - நான்


ஒட்டிக் கொண்ட
கவிதையாய் - நீ

- வித்யாசன்

அன்பு



உன் விரலின் நகம் போல - நான்
அதிகம் வளர்ந்ததும்
அழகாய் வெட்டிவிடுவாய்

நான் அழுவதில்லை

அடுத்த கணம் தொடங்கிவிடுவேன்
வளர ~~~
கூடு விட்டு கூடு பாயும் வித்தை
யாருக்காவது
தெரிந்திருந்தால் சொல்லுங்கள்;

என்னவன்
இருதய கூட்டில்
குடியிருக்க ,,,

- வித்யாசன்
வெறும் விதையாய் இருந்த இதயத்தில்

நீ விழுந்த கணத்தில் துவங்கியது



காதல்
வேர் விட !!

சுதந்திரமாய்
சுதந்திர கொடி பறக்கிறது
விண்ணில்

சுதந்திரமாய்
சுரண்டல் நடக்கிறது
மண்ணில்

அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

- வித்யாசன்
எங்கே செல்லும்
இந்த பறைவை
யாரிடம் சொல்லும்
ஊமையின் மொழியை
கிளைகள் இல்லா மரமுமில்லை
சிறகு இல்லாதுபோனால் அது பறவையுமில்லை;

தூரம் செல்லும் மேகம்
தாகம் கொண்டால் வானம் அழுகும்
தேகம் நோகும் நேசம்
மீறும் நேரம் வந்தால் கண்ணீர் வழியும்
விதிபோடும் பாதையில்
நம் பயணம் செல்ல
விடை தேடி அலைகிறது
நம் சுவடுகள் மெல்ல ;
உன்னை வெறுக்கும்
அதே கணத்தில்தான்

ஆரம்பிக்கிறேன்
அதிகமாய் நேசிக்க


- வித்யாசன்

முத்து

வானம் - பூமி
சிப்பிக்குள்
சிக்கிய
முத்து

நிலா

- வித்யாசன்

தந்துவிடு

யாரிடம் நான் பேச
நீயின்றி என் உயிரே;
எங்கேதான் நான் செல்ல
நீயின்றி தனிமையிலே ;
காயங்கள் பட்டாலும்
உன் பார்வை மருந்தாகும்;
கண்ணீராய் வடிக்கின்றேன்
கை விரலாய் நீ எங்கே;

நேரங்கள் போகிறது
நீ எங்கே வந்துவிடு.... தந்துவிடு

நடைபாதை வழிதனிலே
உன் நிழலை தேடுகிறேன்;
உன் பெயரை நான் எழுதி
என் உயிரை பார்க்கின்றேன்;
அதிகாலை பொழுதெல்லாம்
அடங்காமல் அழுகிறதே;
இரவெல்லாம் உன்போலே
பிடிவாதம் கொள்கிறதே... கொல்கிறதே

நிலவுண்டு; நீயில்லை
இருள்கிறதே என் வாழ்க்கை;
அலையுண்டு; நீயில்லை
காய்கிறதே என் உள்ளங்கை;
உன் ஸ்வாசம் தேடித்தான்
என் ஆயுள் நீள்கிறது;
உன் நினைவை எண்ணித்தான்
என் உலகம் சுழல்கிறது;

நேரங்கள் போகிறது
நீ எங்கே வந்துவிடு.... தந்துவிடு

- வித்யாசன்

விபச்சாரி.

தயவு செய்து
இப்போதாவது
தனியாக
படுக்க விடுங்கள்;

பலர்
படுத்திருக்கும் இடத்தில்
புதைத்து விடாதீர்கள்;

விபச்சாரி.

- வித்யாசன்

அதிசய முட்டை

இரவு
அடைகாக்கும்
அதிசய முட்டை

நிலா

- வித்யாசன்

உன்னை விடுவதா

என்...
உயிரை விடுகிறேன்;

அணையட்டும்
சா (தீ)


வித்யாசன்
அவளும்
நீயும்
ஒன்று;


நெருங்கி வந்தால்
தூரம் செல்வாய்

இரவு வணக்கங்களுடன்

- வித்யாசன்

ம்.. ம்... ம்... ம்...


அது வேண்டும்
இது வேண்டுமென்று
அடம்பிடித்து கேட்பாள்;

பிஞ்சு விரல்களை நீட்டியபடி
வீதிக் கடையிலிருக்கும்
பொம்மைகளை எல்லாம்;

செல்ல மகளுக்கு அள்ளி கொடுக்க
சில்லரையில்லாது ஆயினும்
கவலை கொள்வதில்லை;

காரணம்...

எந்த கடையிலும்
விற்பதில்லை;

என்னை போல
ஒரு பொம்மை !!

- வித்யாசன்
நடக்காததை
நினைக்கின்ற
பொழுதுகளுக்கு மத்தியில்;

நடக்கும்
என்ற நம்பிக்கையில்
நகர்கிறது;

உனக்கும் எனக்குமான
புது உறவு

- வித்யாசன்
தீண்டிடும் உன் நினைவினை
தாண்டிட மனம் விரும்பவில்லை;
வாடிடும் பொழுதினிலே
தேடிடுதே மனம் உன் தோளினையே;
எது வரை என் பயணமோ
அது வரை உன் நிழல் வருமோ...

தேய்ந்திடும் வாழ்க்கையில்
தேடிடா வந்த தேவதையே;
தேவை நீ என்று அழைக்கையில்
வெயில் கானலாய் ஆனதே;
இடம் விட்டு போகலாம்
இதயம் விட கூடுமோ;
உடல் விட்டு போகலாம்
தேடல் விட்டு போகுமோ....

காற்றடித்து பூக்கள்
காயமடைவதில்லை;
சருகுமிதித்து பூமி
கோபம் கொள்வதில்லை;
நீ பிரிந்து நான்
வாழ்ந்தும் ஏதுமில்லை;
நாமிருந்த நாட்களுக்கு
ஈடு ஏதுமில்லை...

- வித்யாசன்
ஆளுமில்லை
துடுப்புமில்லை
அழகாய்
நீந்துகிறது

ஆகாய வெண்ணிலா

- வித்யாசன்
உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
நிரப்புகிறது


நம்
நினைவுகள்

- வித்யாசன்
இருட்டு எனும்
அழுக்கு வேட்டி
வானம் விட்டு கிழியட்டும்;

வெளுப்பு எனும்
ஆடை கட்டி
கிழக்கு முட்டி விடியட்டும்;

- வித்யாசன்
தனிமையில் சிரிக்கின்றேன்
முதன் முதலாக என்னையே ரசிக்கின்றேன்;

நகம் கடித்து பழகுகின்றேன்
தனி அறையை தேடி அலைகின்றேன்;

கண்ணாடிக்கு தோழியானேன்
தாவணி சூடி பார்த்து மகிழ்கின்றேன்;

அடிக்கு ஒரு முறை களவு போகின்றேன்
பின் தொடரும் நிழலை துரத்தி விடுகின்றேன்;

வெளிச்சம் இருந்தும் இருட்டை நாடுகின்றேன்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் உரைகின்றேன்;

அர்த்தம் தெரிந்தும் அறியாததாய் நடிக்கின்றேன்
உறக்கம் வந்தும் இமைகளை திறந்து வைக்கின்றேன்;

கடந்த நிமிடங்களிடம் எதையோ தேடுகின்றேன்
கண்ணில் பட்டால் காற்றாய் மாறிவிடுகின்றேன்;

காரணம் என்னவென்று
நீ
புரிந்து கொள்வாயடா...

- வித்யாசன்
இலை விழுந்தாலும்
தாங்காத வேரே...

பிளை விழுந்ததோ
கிளை கிளையாய்
கண்ணீர் விடுகிறாய்...

நிலை மாறும் உலகில்
எதை எண்ணி வாடுகிறாய்...

கதையாகிப் போகாது
விதைத்தாலும் முளைக்காது
சிதையாத சீதையடி பூ- வே...

- வித்யாசன்
உனக்கும்
எனக்குமான
நினைவுகளை
தடம்பதிக்கிறது என் உதடுகள்
நீ அளித்த தேனீர் அலையில்

- வித்யாசன்
அவளும், நானும் உரையாடல் - 6

அவள்
என்ன இன்று இந்த பக்கம்

நான்
எப்போதுமே உன் பக்கம் தானே

அவள்
எதை பற்றி இன்றைய படைப்பு


நான்
உன் நகம் பற்றிய படிப்பு

அவள்
நகத்த பத்தியா ? அதுல்ல என்ன இருக்கு ?

நான்
தெரிந்ததை சொல்கிறேன் கேட்க விருப்பமா ?

அவள்
ம்ம்ம்......


நான்

வளரும் வைரம்
நீளும் கோபுரம்
கண்கள் விளையாடும் 20 சதுரங்கம்
வெட்ட வெட்ட எழும் பளிங்கு சுவர்
ரசம் பூசப்படாத கண்ணாடி
திறக்க முடியாத அழகிய பெட்டி
அசைபோடாத பற்கள்
கைப்பிடியில்லா கத்தி
விரல்களின் மூக்குத்தி
தூக்கம் ஏங்கும் தலையனை
கனவு புரளும் படுக்கை
உயிர் உள்ள பனிக்கட்டி
இருதயம் வெட்டும் மண்வெட்டி (மம்பட்டி)
உடையாத முட்டை ஓடு
அதிசய பொட்டல் காடு
ஒட்டி வைக்கப்பட்ட கதவு
தென்றல் இளைப்பாறும் இருக்கை
பேச தெரியாத குட்டி நாக்கு
கற்பனை நிறைந்த வெற்று காகிதம்
பாதம் படாத ஒற்றை படி
நிலா நின்று பார்க்கும் மொட்டை மாடி
அசையாது எரியும் தீபம்
அசையும்ஆமை கூடு
வெள்ளை நிற வழுக்கு பாறை
விரல்களின் மகுடம்
விளக்க முடியாத வரைபடம்
உனது நகம்


அவள்
எப்போது இப்படி எல்லாம் என் நகத்தை பார்த்தீங்க

நான்
நீ அடிக்கடி நகம் கடிப்பாய்
அப்போதெல்லாம் நான் அதில் பாடம் படிப்பேன்

அவள்
நல்லாதான் படிக்குறீங்க

நான்
அப்ப மதிப்பெண் என்ன ?

அவள்
இந்த மதி (போன்ற) பெண் உங்களுக்குதான்

நான்
ம்ம்ம்......

- வித்யசன்

அவளும் நானும் உரையாடல் - 5


அவள்
என்னை மறந்து விட்டீர்களா ?

நான்
என்னை எப்பொழுதும் நான் மறப்பதில்லை

அவள்
நான் என்னை கேட்டேன்

நான்
நானும் அதைத்தான் சொன்னேன்

அவள்

ம்ம்ம்...

நான்
ம்

அவள்
போதும், போதும் இன்று என்ன வருணனை

நான்
எனது கவிக்காக காத்திருக்கும் உன் செவி பற்றி

அவள்
ம்ம்... கேட்க காத்திருக்கு என் செவியே

நான்

ஒரு பக்க சிப்பி
ஒட்டி வைக்கப்பட்ட இரட்டை ரோஜா இதழ்
வண்ணத்து பூச்சியின் ஒற்றை சிறகு
தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விக் குறி ?
குடைந்து செதுக்கப்பட்ட குகை
இரண்டாக நறுக்கப்பட்ட மாதுளை
ஒலிகள் நடந்து செல்லும் சாலை
பறவைகள் கட்ட துடிக்கும் கூடு
முழுமையடையாத கருவறை
ஊர்ந்து செல்ல முடியாத நத்தை
கடலில் கிடைக்காத சங்கு
முளைக்காத விதை
மெல்லிய மேக இலை
வண்ணமில்லாத மயில் தோகை
படமெடுத்தாடும் நாகத்தின் தலை
அழியாத கால் தடம்
நாண்ஏற்றாத வில்
ஆணவம் கொள்ளும் ஆங்கில எழுத்து 2,21
காற்று ஏங்கும் அழகிய விசிறி
நான் மட்டும் நீந்தி குளிக்கும் குளம்

அவள்
அடடா செவிக்கு இத்தனை அர்த்தம் உண்டா?

நான்
நான் கண்டது குறைவுதான்
உன் செவி கொண்ட அழகு கோடிதான்

அவள்
ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்களே

நான்
ம்ம்ம்... கண்டுபிடித்து விட்டாயே

அவள்
அது என்ன ? என்ன ? சொல்லுங்க !

நான்
வழியும் துளி
அதன் நுனியில் ஆடி, பாடுது தோடு எனும் தோழி

அவள்
ம்ம்ம்....

நான்
ம்ம்ம் என்றால்

அவள்
ம்ம்ம்ம்ம்ம்ம......... தான் !


- வித்யாசன்


உன்
கண்களை கண்டால்
போதும்
கவிதைகள்
கள் குடித்ததுபோல்
தள்ளாடி விழும்


- வித்யாசன்
இரும்பு காதலி
**************
கதவு காது அணிந்து கொள்ளும்
கனத்த தோடு...

கறுப்பு பணத்தை காவல் காக்கும்
கருப்பசாமி...

சுதந்திரம் இருக்கி அனைத்தப்படி
தொங்குகிறது இரும்பாக...

சாமி சாக்கரதையா இருக்க அர்ச்சகர்
பூட்டும் கதவு விலங்கு...

வீடு, அலுவலக வாயிலில் விழித்துக் கொண்டிருக்கும்
ஒற்றைக் கண் காவல்காரன்...

பலகோடி இதயங்களை பத்திரப்படுத்தும்
பயமறியா பயில்வான்...

குடிசை மீது ஏறி நிற்கும் பங்களாவை
விழுங்கும் குட்டி நாக்கு...

திருடர்களின் விரல்கள் தொட்டதும்
நெஞ்சை நிமிர்த்திடும் மா வீரன் ....

ஒருவனை மட்டும் தொடவிட்டு
இதய அறையை திறந்து காட்டும்
இரும்பு காதலி
பூட்டு !!


வித்யாசன்
அவளும்-நானும் உரையாடல்- 4

அவள்
என்ன வெகு நாட்களாக காணவில்லை

நான்
கரை கடந்து கரைந்து கொண்டிருந்தேன் உன் நினைவில்

அவள்
ம்ஹீம்.....

நான்
நீ என்ன செய்தாய்

அவள்
ரசிப்பவர் எப்போது வருவார் என்று உள்ளங்கை ரேகையில் தேடிக் கொண்டிருந்தேன்...

நான்
ம்ம்.....

அவள்
இன்று என்ன ?

நான்
என்னை தேடிக் கொண்டிருந்த உனதுள்ளங்கை பற்றி

அவள்
ம்ம்ம்.... சொல்லுங்க

நான்
நான் மட்டும் நடந்து செல்லும் சாலை
மீன்கள் நீந்த துடிக்கும் நதி
இலைகள் இல்லாத கிளை
மின்னி மறையாத மின்னல்
அழியாத அழகிய கோலம்
இசை மீட்டும் தந்தி
பூக்கள் கட்டிக் கொள்ள ஏங்கும் நார்
வண்ணத்து பூச்சி பொறமை கொள்ளும் நூலிழை
இளவம் பஞ்சு இளையாறும் படுக்கை
காற்று வந்தமரும் இருக்கை
விதையில்லா வேர்
விழிகள் விளையாடும் சதுரங்கம்
சிலந்தி பூச்சி கட்ட முடியற்சிக்கும் கூடு
முகம் காட்டாத ஒட்டி உடைந்த கண்ணாடி
குறுக்கு, நெடுக்காக கட்டப்பட்ட கோபுரம்
வண்ணங்கள் ரசிக்கும் ஓவியம்
வற்றாது பாயும் நீர்வீழ்ச்சி
மணல் இல்லா பாலைவனம்
சிதறி கிடக்கும் சிப்பி ஓடு
மிதந்து உறங்கும் அதிசய கோடு
இயற்கையால் பின்னப்பட்ட கயிறு
உதிராத மரப்பட்டை
மிகப் பெரிய இறகு
மேகம் உரச தவமிருக்கும் முகடு
கூட்டல், பெருக்கல், வகுத்தல் காட்டும் கணக்கேடு
ரசிக்க வைக்கும் ரகசிய கிறுக்கல்
ஒவ்வொரு தடங்களும் புதுமை
ஆயிரம் உவமைகளை ஒலித்து வைத்திருக்கிறது
உனது உள்ளங்கை!!


அவள்
ம்ம்.........

நான்
குறைவாக சொன்னதை அறிவேன்
நிறைவாக இன்னொரு நாள் சொல்கிறேன்
இப்போது விடை பெறுகிறேன்...


அவள்
அடுத்து எப்போது ?

நான்
சந்திப்பு நடக்கும்போது !!

- வித்யாசன்

உன் வருகைக்காக
******************

வழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை


திசை எல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை


உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை
நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை


திசுக்கள் ஆனது குளிர் ஓடை
பொசுக்கென்று வா நீயே என் ஆடை


காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை
காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை


உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை
உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!

- வித்யாசன்
நான்...
தேடுவதில்லை
உன்னை

எப்போதும்

நீ...
தென்றலாய்
என்னோடிருப்பதால்

- வித்யாசன்
கொட்டிய மழை
எட்டிச் சென்ற பின்னும்
ஒட்டிய துளிகள்
வழிகிறது
கொலுசு மணியாய்
மர இலையில்

- வித்யாசன்
இரவில்
முகம் பார்க்கின்றன
நிலவில்
மர இலைகள்....!!

- வித்யாசன்
நீ...
எதற்காகவும் மாறாதபோதுதான்;
உனதாகிறது
யாவும்...!!

- வித்யாசன்
நமக்கு
மட்டுமே
தெரிந்த ஒன்று
தேய்வதின் அர்த்தம்...!!

- வித்யாசன்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்

நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்

நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்

அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்

நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு

நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி

வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
வேர் விட்டிருக்கும் விதை
சிரித்து சிதைக்கும் சோவி
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை
நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
புகைப்படம் எடுக்கும் கேமரா
தனக்குத் தானே வீசும் விசிறி
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்

அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்

நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை

அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?

நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!

(-தொடரும்...)

- மு.வித்யாசன்

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்
என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---
கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்

அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!

-வித்யாசன்

நீ...
கேட்கும்போதுதான்;

நான்

எது ....
சொன்னாலும்

அது...
கவிதையாகிறது...!!!

- வித்யாசன்


அவளும்-நானும்-உரையாடல்-1 (உதடு)


அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்
உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...


அவள்
என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது

அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[/color]


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது
இதழ்.....


அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !

-வித்யாசன்


இரவு தூங்கும் வேளையில்
மேகப் போர்வை-யை நகர்த்தி
மோகப் பார்வை-யை வீசுகிறது
வானத்து வெண்ணிலா...!!

-வித்யாசன்

உன்னோடு பேசும் பொழுது எல்லாம்
என் வார்த்தைகளுக்கு சிறகு முளைக்கிறது;

உன் இமை எனும் கிளையில் அமர்ந்து
இந்த உலகை ரசிக்க...!!!

- வித்யாசன்

மரணம் ( June 12 - 2013)

(இன்று எனது அலுவலக நண்பரின் தந்தை மரணம். அந்த தருணம்.)

அழுகையின் சப்தங்களில்
அதிரும் உணர்வுகள்

விழிகளின் நீர் பிசுபிசுப்பில்
உருண்டோடும் நினைவுகள்

கதறும் உதடுகளின் வார்தைகளில்
முகம் தேடும் ஏக்கங்கள்

எரிந்த பின்னும் கரைந்த திரியாய்- நீ
உருகி வழியும் மெழுகாய்-நான்

கடைசி நகர்தலில் நாலாக
பல நாள் கலந்தது நீயும்- நானுமாக

அருகருகில் இருந்தும் தொலைதூரமாய்
மறுபடியும் பேசியதாய் அந்த சில வார்த்தைகள்

தெருவெங்கும் வெறும் உடலாய் நீ
உயிருந்தும் நடந்தேன் சடலமாய் நான்

உறவை படைத்து உயிரை பிரித்த
உலகம் அறியா விந்தையாய்

எனக்கான உன் முகத்தை மறப்பேனோ
மீண்டும் விழிகள் தடவியது
கடைசி பார்வை ...

கண்ணீராய்...!!

- வித்யாசன்
இரவு உறங்க
இயற்கை இசைக்கும் குறுந்தகடு
நிலா !!

- வித்யாசன்

என்...
கண்ணீருக்கு
நீ...
காரணம் என்று தெரிந்திருந்தும்;

உன்னை மட்டும்தான்
காண ஏங்குகிறது
என்
கண்கள்...!!

- வித்யாசன்

கோவில் சுவற்றில்
உன் பெயர் எழுதியிருந்தது
அதனால்தான் கும்பிடப்போகிறேன்
தினமும்...!!

-வித்யாசன்

உனக்கு தெரியுமா ?

நீ எப்போதெல்லாம்
என் பக்கத்தில் இருக்கிறாயோ
அப்போதெல்லாம்
எப்போதும்போல் இருப்பதில்லை
நான் என்பது !!!


எப்போதும் தொலைந்தவனாய் நான்
தொலைவினில் நீ...

இப்போதும் கடல்நடுவில் நான்
கரையோரத்தில் நீ...

மறந்திருக்க முடியாத நிலையில் நான்
மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் நீ...

இழக்க நினைக்காத இடத்தில் நான்
ஏற்க முடியாத வகையில் நீ...

பிரிதல் வந்தும் பிரியாது நான்
புரிதல் தந்து விலகியது நீ...

மரணம் வருவது எப்போதென்று நான்
மறுபடியும் பிறப்போம் என்றாய் நீ...

உலகம் தாண்டியதாய் என் வாழ்க்கை
உடையாது ஒருபோதும் உன் சேர்க்கை

முடியாது என்று யார் கூறினும்
நினைவுக்கு யார் விதிக்க கூடும் தடை !!!

- வித்யாசன்

என்னை அதிகம் பேசவிட்டு
அடக்கமாய் இருக்கும்
உன் உதடுகளைத்தான்
எனக்கு அளவுக்கதிகமாய் பிடிக்கும்...!!!

- வித்யாசன்

நம்
மூன்று எழுத்து
உலகம்
அம்மா...!!


இளையராஜாவுக்கு பரிசு


இளைய ராஜா-வின் காதலர்களில் நானும் ஒருவன்...

அவருக்காக பாடல் ஒன்றை ஒரு நடு இரவில் மனதில் எழுதினேன்
நேரில் தர இது வரை வாய்ப்பில்லை.

ஆதலால்...

இன்று அவரது 70 வயதில் பிறந்த நாள் பரிசாகத் தருகின்றேன்.
எண்ணற்ற இதய தளத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இளையராஜாவுக்கு
இணைய தளத்தில்...!!

...............................
இதோ அந்த பாடல்
..............................

நான் போகும் பாதை எங்கே யாருக்கும் தெரியாது
நான் போகும் பயணம் எங்கே எவருக்கும் புரியாது
போகாத பாதை எல்லாம் போவோமே எல்லோரும்
புரியாத திசைகள் எல்லாம் அலைவோமே தினந்தோறும்
ஆஹாயம் போலே வாழ்க்கை தானடா
ஆதாரம் இல்லை வாழ்வில் ஏனடா...

என்னுலகம் எதுவென்று நான்சொல்லக் கூடுமோ
எனக்கெது வந்தாலும் அது என் தாய்க்கு ஈடாகுமோ;
மண்ணுலகம் கண்டதெல்லாம் மாயமென்று ஆகுமோ
எண்ணிலிருந்து வந்ததெல்லாம் ஈசனது நாடகமோ;

(நான் போகும் பாதை எங்கே ....)

கடலை தேடும் நதியாக - நான்
இசையைத் தேடுகிறேன் நிதம் காற்றாக;
ஓயும் இந்த வாழ்கையில் - என்றும்
ஓய்வதில்லை எந்தன் எண்ணலைகள்;

(நான் போகும் பாதை எங்கே ....)

கண்ணுறக்கம் என்பது எண்ணுறக்கமில்லையே
நான் காணும் காட்சியாவும் என் மனசாட்சியே;
வான் புகழானாலும் தான் என வாராதே
நான் படைத்த படைப்பெல்லாம் இறையருளானதே;

(நான் போகும் பாதை எங்கே ....)

எத்தனையோ
கவிதைகள் எழுதிய
என் பேனா-வுக்கு தெரியும்;

என் இதயத்தை விட
உயர்வான இடம்
அதற்கு வேறு ஒன்றுமில்லை என்று


- வித்யாசன்
சாகும் வரை நினை
நிலவு தேயும் வரை அலை

மெளனித்தே மரித்து போ
சில நிமிடங்களில் நிலைத்து வா

கவிதையாய் கட்டிப் பிடி
கண்ணீராய் கொட்டி விடு

அவ்வப்போது விலகு
முப்பொழுதும் உருகு

முன் நிகழ்ந்ததை அசைபோடு
விதியோட சமாதானம் தேடு

காற்றோடு நித்தமும் வாடு
கனவுக்குள்ளே வாழ்ந்திடு

சேர்ந்தது அழகிய நிமிடத்தோடு
பிரிந்தது யாருக்கும் புரியாத உணர்வோடு

மறவாது மறந்தேன் காலத்தோடு
தனியாகும்வேளையில் தாகத்தோடு

பிரிவுக்கு காரணம் அறியாது
அறிந்திருந்தால் நம்மில் பிரிவேது

மீண்டும் எப்போது சந்திப்பு ஏக்கத்தோடு
நிகழாதென்றிருந்தும் நிகழாதா என்கிறது மனம்

எனக்கு...
இங்கே
இன்றும்
இப்படித்தான்

உனக்கு...
அங்கே
என்றும்
இப்படித்தான்

அறிவேன்
அறிவேன்
ஆதலால்தான்
அழுகிறேன்
கண்ணீர் இன்றி...!!!

- வித்யாசன்
திறமை
என்பது
தோட்டாக்கள் போன்றது;

யார் தொட்டாலும்
வெடித்துச் சிதற
தயக்கம் காட்டுவதில்லை

- வித்யாசன்

எப்போதெல்லாம் நீ
பார்க்கிறாயோ
அப்போதெல்லாம் நான்
பூக்கிறேன்

ஒரு நிமிடம்
நீ பார்த்தால் போதும்
ஒவ்வொரு நிமிடமும்
அது வருடும்

நீ
உயர பார்க்காதே
பறவைகள்
தற்கொலை செய்து கொள்ளும்

நீ
நிமிர்ந்து பார்க்காதே
நிலா
தேய்ந்துவிடும்

எப்படிச் சொல்வது
உன் இரு விழி
என் வழியானதை

இதழ்கள் சிப்பது தெரியும்
விழிகள் சிரிப்பது அதிசயம்

குளம் இல்லை...
எப்படி பூத்தது ?
இலையின் நடுவில்
சிகப்பு தாமரை

இப்படி பார்க்காதே
இதயம் இடம் மாறுகிறது...!!