வியாழன், 28 ஜனவரி, 2016

எண்ணும் இன்பம்

நின்னை எண்ணும் இன்பம் இன்னும் வேண்டுமடா
அது இல்லை என்றாயின் எந்தன் மூச்சு நின்றிட வேண்டுமடா
கண்ணை இமை மூடாது உன்னை காண வேண்டுமடா
சிறு காட்சியிலும் நின் உருவமில்லையென்றால் நான் மண்ணைச் சேர்வேனடா
கண்ணா~~~


- வித்யாசன்

தெய்வீக நேசமன்றோ

உனை எண்ணும் எனை தொக்கடம்போடுதல் தகுமோ ;
தொக்கமற்ற நினைவுகளை எள்ளி நகையாடுதல் முறையோ ;
தொகை யிடையினிலே நீ யிருக்க தொடர்ந்துனை நான் நோக்க தொக்குநிற்றல் ஞாயமோ ;
தைவாதல் புரிந்திடும் விரலதனை தைவகரும மிடுதல் நலமோ ;
தேறுகடை அன்பு வைத்ததன் மீது தேற்றமற்ற சிந்தனை கொண்டு தூற்றலாகுமோ ;

தேவார்ப்பணம் காதலிது எந்நாளும் விட்டொழிந்து தேலுத லாகாது
தெய்வீக நேசமன்றோ~~~


- வித்யாசன்

#பராசக்தி தீட்டானாள்~~

பெண் என்பவள்
#பராசக்தி
பின் ஏன் ?
அந்த மூன்று நாட்கள்
#தீட்டானாள்~~~

வா & போ

என் வனமெங்கும் பறந்து வா
அடர்ந்து வளர்ந்திருக்கும் நின் நினைவு மரங்கள் யாவிலும் அமர்ந்து போ~~~


- வித்யாசன்

வடிவேலவன் வந்தானே


கந்தனைக் காணாது

எந்தன் உயிர் வாழாது
ஆறுமுகனை எண்ணாது
எந்தன் மனம் அமைதியாகாது
சிந்தனை செய்தேனே
சுந்தரத் தமிழ் தந்தானே
செவ்விதழ் சிரிப்பினிலே
சேர்த்தெனை அனைத்தானே;

வேதனைகள் தீர்ந்திடவே வடிவேலவன் வந்தானே
சோதனைகள் நீங்கிடவே சேவற் கொடியோன் நின்றானே
பன்னிரு கரங்கள் கொண்டு பெரும் பலம் தந்தானே
பரம்பொருள் பாதம் பணிந்திடவே பாவம் களைந்தானே ;

நெற்றி கண் நெருப்பிலிருந்து தாமரையில் மலர்ந்தோனே
கார்த்திகை பெண்கள் அறுவரிடம் முருகனாய் வளர்ந்தோனே
சக்தியின் அனைப்பினில் ஒருவனாய் ஆனோனே
ஓமெனும் மந்திரத்தை தந்தைக்கு ஓதியோனே ;

ஔவையின் தமிழுக்கு அழகன் தனை மறந்தானே
பழம் ஒன்றுக்கு பழனி மலை தந்தோனே
பிரம்மனை சிறை வைத்த சிங்காரனே
முத்தமிழை முன்னிருந்து காத்துவரும் கதிர்வேலனே ;

தீரா தவத்தினிலே தெய்வானை மணந்தவனே
வேடனாய் வனத்தினிலே வள்ளியை கவர்ந்தவனே
மா மயிலேறி எம் மனக் கண் முன் தோன்றியோனே
மண்டியிட்டு வணங்கினேன் நின் திருக்கோலம் கண்டவுடனே~~~

- வித்யாசன்

நின்றேன்

பெரு பூத உடல் கொண்டேன்
அதிலென் ஆன்மா எங்கும் கண்டேன்
சொல் வீழ மதி தனை ஆண்டேன்
மாண்ட பின்
மாளா எழுத்தாய் நின்றேன்...


- வித்யாசன்

மார்

மிதக்கும் மார்பினில்
சுரக்கும் பாலினில்
பசி ஆறுகிறது
#இரவு~~~


- வித்யாசன்

கண்ணன் முகமே காண்பது சுகமே

கண்ணன் முகமே

காண்பது சுகமே
எண்ணம் யாவும் - அவன்
நீல வண்ணமே ;

காலை கதிராவான்
கருமை நிறமாவான்
காண்பது யாவிலும் - பெரும்
காதல் கொள்வான் ;

இரு விழி திறப்பான்
இதயம் வதைப்பான்
இதுவும் போதாதென
இறுக இரு கை அனைப்பான் ;

மாலை சோலையில்
மனமது தேடையில்
மரமது பின்னே
மறைந்தே என் முகம் ரசிப்பான் ;

மான் விழி காணாது
மழையென கசிந்திட
மனமது மாறியே - புது
மாலையாய் தோளினில் சாய்வான் ;

இதழினை ருசிப்பான்
இடையினை பிடிப்பான்
இரவது இமை மூடாது
இன்பக் குழலது இசைப்பான் ;

ஆடை அவனாவான்
ஆசை அழகாவான்
ஆயுள் முழுதும் அழியா
அன்பை பொழிவான் ;

தாயாய் மடி சேர்ப்பான்
சேயாய் பிடிபடுவான்
நேசனாய் அடிபடுவான்
வேசமிடுவோர்க்கு தானே கள்வன் என்பான்;

கோகுலம் சுழல்வான்
கோபியர் கொஞ்சுவான்
கோபம் உடைப்பான்
கோதையின் நெஞ்சினில் விரல் கோலமிடுவான் ;

ராகவன் வருவான்
தீரா காதல் தருவான்
வேரெனக் கேட்பேன்
மாயவன் அவனே மீரா மையல் தீர்ப்பான்~~~

- வித்யாசன்

நமதன்பு


சட சட வென காற்றினில் பற்றி எரியும் அக்னியானது~~~

நமதன்பு

- வித்யாசன்

**நட்சத்திரம்**


ஒவ்வொரு முறையும் உண்மை இப்படித்தான் தன் கழுத்தை இறுக்கி கொல்கிறது ;

சமமற்ற தராசின் நடு முள் குத்துவாள் ஆவது எப்போதும் நியாயத்தின் மார்பு கூடுகளுக்கே ;

தனித்த பறவையின் சிறகுகளில் திணிக்கப்படும் பாரங்கள் சிலுவையின் சாயலாகுதல் சாத்தியமே ;

மலம் கழிப்பதும், சிறு நீர் திறப்பதும் ஒன்றென ஆன பின்
பேதமென பார்க்கிறது தரமற்ற நினைவுக் கண்;

சாமானியக் கனவு சாம்பலில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யங்களின் சுவர்களில் ஒவ்வொரு செங்கலும் கல்லறையே ;

பிறப்பு மட்டுமே அடையாளமாகும் அவமான உலகில்
எந்த ஒரு ஆடையாலும் மன நிர்வாணத்தை மறைக்க இயலாது ;

இன்னும் அரங்கேற காத்திருக்கும் வரிசையின் நீளத்திற்கு ஏற்ப
கொலை யாவற்றுக்கும் சூட்டப்படும் பெயர் தற்கொலை ;

இங்கே நாங்கள் பிய்த்து எரியப்பட்ட வெற்றுக் காகிதம்
என்றபோதும்...
அங்கே நாங்கள் ஜொலிக்கும் **நட்சத்திரம்**

- வித்யாசன்

ஜிம்மி

#எதுவும் பேசாது
உன்னையே ஓயாது பேச வைக்கும் இவ் இரவு தனிமையாகி குரைக்கிறது இருளெங்கும் நின் முகமாய்~~~


#ஜிம்மி

எனை மன்னிப்பாயா ?


பெரும் ப்ரியம் என் மீது கொண்ட நீ...
சட்டென பிரிந்தது சரியன்றோ ?
உன் அளவு எனை புரிந்தவர் வேறு எவருமில்லை. உன் இருதய பாசை அறிந்தவன் நான் அன்றோ...

நம்பிக்கை அற்ற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம்... எள் அளவும் எப்போதும் குறையா நம்பிக்கை என் மீது வைத்தது நீயல்லவா...

வீட்டு கேட்டினில் நீ தலை நீட்டி அப்படி என்னதான் பார்ப்பாய்... நான் அதை ரசிப்பேன் உன்னைப் போலவே இனி நீயின்றி ....

என் பேச்சு கேட்கும் உன் பேச்சு நின்றதில் மயான நிசப்தம் என் உலகில். அதிகாலை நின் ப்ரிய முகத்தினை தரிசிக்க இவ்விழிகளுக்கு இனி பாக்கியமில்லை...

எப்படி எனை விட்டு பிரிய துணிந்தாய். என் கால்களை சுற்றி சுற்றி நான் உனதான பூமி என்பதை சொல்வாயே. என் சிநேகம் சிதையாது தேகம் நுகர்ந்து நாவால் வருடும் பேரின்பம் கிட்டாது எனும் போது பெரு நீர் விழியாகிறது...

இறுதியில்... எனைத் தேடி தள்ளாடி ஓடோடி வந்தாய்.. சில நொடியில் துடிதுடித்து பரிதவிக்கப் பறந்தாய்...

நீவி விடும் விரல்கள் யாவும் தேடுகிறது. இன்னும் உன் சப்தம் என் காதுகளை துளைக்கிறது. எல்லாம் முடியும் எனும் நம்பிக்கை உன் முடிவில் சிறகொடிந்தது...

எந்நாளும் எனை காத்த உனை காக்க இயலா கரங்கள் கொண்டு மண் மூடி உனை மறைத்தேன். மறக்க இயலுமோ .... என் மனக் குழி யாவும் நின் நினைவு வால் ஆட்டியே எனை அழ வைக்கிறது.

உறங்கா உன் தூக்கத்தின் மொத்த கனவும் நானாவேன்...
எனை மன்னிப்பாயா ?

உருளும் கண்ணீர் உனதான பிழையற்ற ப்ரியம்...

ஐ லவ் யூ
ஐ மிஸ் யூ

யார் தடுக்க

பேரன்பு திமில் பிடித்து விலகாது நானிருக்க
யார் வந்து தடை சொல்லி
நம் உறவை தடுக்க~~~


- வித்யாசன்

நீ


#

நீ
அதிகாலை மலர் என்பதை நானறிவேன்
ஆகையினால்....
உன்னிதழில் ஒட்டிக் கொண்ட பனித்துளியானேன்~~~


- வித்யாசன்

காத்திருப்பேன் * பார்த்திருப்பேன்


நீ ஒதுக்கிய கரையில் உனக்கென காத்திருப்பேன்
ஒவ்வொரு அலையும் நீயென பார்த்திருப்பேன் ~~

- வித்யாசன்

யாருண்டு ?


ஏருண்டு

நீருண்டு
எங்கும் நிலமுண்டு
வீரமிகு தோளுண்டு
அதைக் கொண்டு

உழுதுண்டு வாழ
இங்கு யினி
யாருண்டு ?

காடுண்டு
நதிக்கரை யுண்டு
காணும் எங்கிலும் மணலுண்டு
நல் காலுண்டு
அதைக் கொண்டு
வயலினில் இறங்கிட
இங்கு யினி
யாருண்டு ?


- வித்யாசன்

கண் மூடி


அசலை தொலைத்துவிட்டு
நகலாய் வாழும் இவ் வனத்தினில் எத்தனை வண்ண முகமூடி ...
கழற்றிவிட எத்தனிக்கின்றேன் கண் மூடி~~~

- வித்யாசன்

ஆதி ஆகிடாது

டப்பா, தகரம் இன்னபிற தட்டினால் சப்தம் வரும்...
ஆக அதுவெல்லாம்
ஒருபோதும் அதிரும் ஆதி #பறை ஆகிடாது~~~



- வித்யாசன்

மழைத் துளி

கடல் மீது விழும் மழைத் துளி
அது போல் கலந்தேனே இல்லை இடைவெளி ;
மன அலை மீது ஆடும் சிறு கொடி
கரை தாண்டி வந்தேனே நின் விருப்பப்படி ;
சிறு பிழை தாங்கா பருவக் கிளி

சிறை நீங்கி வானம் பறந்ததடி ;

மெல்ல உலாவும் நிலாவும் நம் வழி நெடுக உடன் வருவதென்ன ;
சொல்லக் கேட்காத நம் உரையாடலை நிழல் தொடர்ந்து பதிவதென்ன ;
இருள் ஒளியினிலே....
இமை அழகினிலே....
இன்னும் ஓர் கனாவின் காட்சி நினைவாவோம் ;

முகம் பார்த்து பேச
இரு விழியும் ஒருசேர அலைவதென்ன ;
விரல் கோர்த்து தனி உலகில் நடந்திடவே அடம் பிடிப்பதென்ன ;
மயக்கத்தின் மடியினிலே விடிகிறதே...
தயக்கத்தின் முடிவினிலே ஆசை பிறக்கிறதே...
பிரியாத ப்ரியம் ஒவ்வொன்றாய் நாம் செய்வோம்~~~

- வித்யாசன்

திக்கு தெரியவில்லையே

திக்கு தெரியவில்லையே - சகியே

வார்த்தை சிக்கித் தவிக்கிறதே ;

வாழ்வின் அர்த்தம் புரியலையே - சகியே
இவ்வுலகில் வாழ்தல் எளிதில்லையே ;

பேசும் யாவும் உண்மையில்லையே - சகியே
அதை உணர்தல் உள்ள த்திற்கு அகப்படவில்லையே ;

பொய்மை சீரணமாவதில்லையே - சகியே
மிகு நேர்மை வழி நடத்தல் துன்பமில்லையே ;

காண்பதாவும் இன்பமாவதில்லையே - சகியே
கொண்ட அன்பெல்லாம் கொல்லும் காதலில்லையே ;

மாண்டது என்றபோதும் மறைவதில்லையே - சகியே
மண்ணில் வாழ்வதனால் யாவரும் உயர்வில்லையே ;

கொண்ட கோலமது நிரந்தரமில்லையே - சகியே
ஆதலால் என்மீது கொண்ட கோவமது நீக்கிட டீ~~~

- வித்யாசன்

மச்சம் நீ

மிச்சமின்றி இரவை திண்ணும்
அழகிய வெள்ளை மச்சம் நீ~~~
இரவு உண்டியலில்...
மெல்ல விழும் வெள்ளி நாணயம்~~

- வித்யாசன்



- வித்யாசன்

நிலா மேனி~

உன்னை எண்ணி...
உள்ளங்கை வானில் வைத்தேன் பச்சை புள்ளி
ஒவ்வொன்றாய்....
பிய்த்தெறிந்து பார்த்தேன் உலா வந்தது சிவந்த நிலா மேனி~~~

வித்யாசன்

தேன் குளம்

வெடித்துச் சிதறும் இதழ்களிலிருந்து உதிரும் மணமெங்கிலும் பரவிக்கிடக்கிறது தேன் குளம்~~~

- வித்யாசன்

பராபரமே

கொலை பாதக நினைவுகளில் நின் கொலுசொலி எழுந்து...

சுடர்விட்டெரியும் என் மலை கோபமதன் மீதேறி மா மழையாய் நின்றாடிட...

மனமது மறந்தே

யாவையும் துறந்தே
இரு கரம் உயர்ந்தே
தொழுதேன்
பராபரமே~~~


- வித்யாசன்

இன்னுயிர் நீத்தேன்


பெரும் நேசம் வைத்தேன்
அது சிறு பேதமையால் சிதறுவது கண்டே
நெஞ்சம் துடித்தேன் ;

தீரா ஆசை வளர்த்தேன்
அத்தணல் தீர்ந்திங்கு சாம்பலாவது கண்டே
சித்தம் தவித்தேன் ;

ஓயா அலையென அன்பது சமைத்தேன்
அஃதிங்கே ஓய்ந்து ஒதுங்குவது கண்டே
உள்ளம் பதைத்தேன் ;

மாயா நினைவதனை மனமெங்கும் சுமந்தேன்
ஆக யிறுதியலது மறந்திங்கு மாய்வது கண்ட பின்னே இன்னுயிர் நீத்தேன்~~~

- வித்யாசன்

** உற்று கவனி **

சொற்களின் எல்லா புறங்களிலிருந்தும் வலி வழிந்தோடுகிறது
சொல்ல முடியாததும் சொல்லில் முடியாதவையும் கட்டித் தழுவியபடி ;

அனாதையாக தனித்து விடப்பட்ட வார்த்தைகளின் அழுகைக்கு
நிதானமான நின் விழிகளின் விசாரிப்பு வாசிப்பே நிரந்தர காப்பகமாகும் ;

பிழை திருத்த முடியாது தவறிய எழுத்தினை தத்தெடுக்க மறுக்கிறாய்
பிழைத்திருக்க இயலாது கண்ணீரில் தத்தளித்து கரை தேடி அலைகிறது ;

குழப்பங்களை பிசைந்து கொடுக்கும் நிமிடங்களிடம் கிறுக்குகிறது விரல்கள்
குறுக்கு நெடுக்கு கோடுகளின் இடையில் வந்தடையும் வழி எங்கே துவங்குகிறது ;

வளைந்து நெளிந்து வடிவம் கூடி வரையும் முனைகள் யாவிலும்
ஒரு சந்திப்பும் அடுத்த பிரிவும் அருகருகே அவிழ்ந்து சிதை மூட்டுகிறது ;

சல்லடையிட்டு சலித்து வகுத்தனுப்பிய உணர்வுக் கோடுகளின் கீழிருந்து
சமாதான உருளைகளை நீக்கிவிட்டு ஓங்கி வீசுகிறாய் கத்திகளை ;

மொழி வழியாக ஒலிகளை திறப்பதற்கான சாவி செய்கின்றேன்
சாத்தப்பட்ட கதவு துவாரத்தின் நீளகலத்தை நிமிடமொருமுறை மாற்றுகிறாய் ;

நின் வெண் பாதமெங்கிலும் சிரம் குவிந்து வரம் வேண்டி வருடுகிறேன்
இடுவது ஒவ்வொரு முறையும் முற்றுப்புள்ளி அல்ல உற்று கவனி ;

** இது அடையாள வடு **



- வித்யாசன்

சராசரி & சரிபாதி


நான் உன்னில் உறங்கும்
சராசரி
நீ என்னில் புகுந்த
சரிபாதி~~~


- வித்யாசன்
feeling crazy.

ப்ரிய பிடரி


எனது பிடரி யாவும்
ப்ரியமன்றி வேறொன்றுமில்லை
பிழை பொறுப்பாயா~~~

- வித்யாசன்

மார்கழி இசைத்தட்டு

இது மார்கழி
இசைத்தட்டு
கேட்கிறதா
பறவைகளின்
~~~பாட்டு~~~


- வித்யாசன்

பேரின்பமம்மா


இன்னும் எத்தனை காலமம்மா
என்ற ஏக்கத்தில் காத்திருக்கலாமா ;
இன்னும் பக்கத்தில் நீ வாம்மா
நின் முகம் பார்த்தல் பேரின்பமம்மா ;

சற்று தூரமும் சோகமம்மா - எனில்
விட்டுப் பிரிவதென்றால் உள்ளம் தாங்கிடுமா ;
உன் மீது நேசம் வைத்தேன் பைத்தியமா
நீ அதை வேசம் என்றால் நெஞ்சம் சகித்திடுமா ;

தொட்டால் கோபம் வருமா
(உனை...)
வேண்டாமென எனைத் தட்டி விடுதல் நியாயமா
சுட்டாலும் தங்கம் மாறுமா
(தீயில்...)
என் சுடர் நிலவே நீ யில்லாது இந்த வான் வீணம்மா ;

சிறு குற்றம் செய்தலால் ஊடல் பிறக்கலாமா
அது சட்டெனத் தீராது பனை யென வளரலாமா
விட்டெனை மறந்திடு எனக் கூறலாமா ( நீ... )
அதை விட நின் விரலினில் நல் விஷம் தந்திடம்மா ;

முட்டாளாய் எனை நீ எண்ணலாமா
உனை வேரெவரும் பங்கிட விடுவேனாமா
கட்டாயம் கைவிட லாகாதம்மா
என் காதல் வீழ்ந்தாலும் உதிக்கும் செங்கதிரம்மா ;

இன்னும் எத்தனை காலமம்மா
என்ற ஏக்கத்தில் காத்திடலாமா
இன்னும் பக்கத்தில் நீ வாம்மா
நின் முகம் பார்த்தல் பேரின்பமம்மா~~~

- வித்யாசன்

கண்ணம்மா...


உண்மைக் காதல் மாறுவதுண்டோ
கண்ணம்மா....
அது காரண, காரியம் தேடுவதுண்டோ ;

இதற் கிங்கு வேறெதும் நிகருண்டோ
கண்ணம்மா...
நீ வேரன ஆனபின்
வேறென ஆவதுண்டோ ;

என் சித்தத்தில் வேறு எண்ணமுண்டோ
கண்ணம்மா...
பாயும் ரத்தமதற்கு ஓய்வுண்டோ
அது நின்னதன்றோ ;

விழி பார்த்திடும் யாவிலும் பேதமுண்டோ
கண்ணம்மா...
காணும் காட்சிகள் எதனிலும்
நின் உருவமன்றோ ;

எழும் சப்தத்தில் பிரிவேதுமுண்டோ
கண்ணம்மா...
நான் கேட்கும் ஒலி யத்தனையும்
நின் மொழியன்றோ ;

விண்ணகத்தில் சொர்க்கமுண்டோ
கண்ணம்மா...
நானறிவேன் அது மெய்யில்லை
என் பக்கத்தில் நீயருக்க அது உண்மை யன்றோ ;

நீ என் முழு சக்தியின் மூச்சன்றோ
கண்ணம்மா...
நீ இல்லை என்றால் நான் மூர்ச்சையன்றோ~~~

- வித்யாசன்

ஆமென்


பாவ மன்னிப்பு சுடர்
பரம பிதாவாய் உதிக்க
பரிசுத்த ஆவியெங்கிலும்
#ஆமென்~~~

குசேலனாய்


அவ்வளவு அன்பும்...
அவல் சுவையாய் மின்ன
நானுனக்கு ஆனேன் குசேலனாய்~~~




- வித்யாசன்

சுதந்திரம் இல்லை~~~


பதினாறு வயதுக்கு முன் பாலியல் பலாத்காரம் குற்றமில்லை

சிவப்பு விளக்கில் அமரும் விட்டில் பூச்சிகள் சாவதில்லை

கழிவறைக்குச் சென்றவள் மலம் வெளியேறும் வரை கற்பு நீடிப்பதில்லை

மாதவிடாய் வலியில் பிசுபிசுக்கும் ரத்தம் தீட்டாகையில் தேகம் சுத்தமில்லை

பேருந்து பயணமும் பலாத்காரமும் நிச்சயம் வேறில்லை

உடல் போக பாத்திரமாக புற்றாய் பாம்புகள் நெளிய இரவுகளின் கதறல் கேட்பதில்லை

கணினி யுகத்திலும் பெண் சிசு கரு கலைப்பு குறையவில்லை

உறுப்புகளை கூறு போட்டு விற்கும் கூட்டத்திற்கு வேலியே துணை

இன்னும் பல கொடுமைகளை வெளியில் சொல்ல முடியவில்லை

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை~~~

- வித்யாசன்

கண்ணன் எங்கே ?

கண்ணன் எங்கே ?

கண்கள் அங்கே
கண்ட போதே காதல் கொண்டது நெஞ்சே ;

மார்கழி எங்கே ? மாதவன் அங்கே
மயங்குகிறாள் மைவிழியாள் இங்கே ;

தென்றல் எங்கே ?
புல்லாங்குழல் அங்கே
ஓசை கேட்டு எழுந்தோடினாள் நங்கே ;

சாமரம் எங்கே ?

மயிற்பீலி அங்கே
மார்பினில் சாய்ந்தே யாவையும் மறந்தே ;

இரு விழி காட்டி
இதழினில் புன்னகை கூட்டி
தினம் எனை வாட்டி
காதல் திண்ணம் ஊட்டி
உயிர் கலந்தே நின்றான் கள்வன் எனும் பெயர் சூட்டி ;

மாதுளை இதழலால் புது முத்தம் தொடுப்பான்
மாலை நேரத்து மழையென உள்ளம் நனைப்பான்
மார்கழி குளிராய் நடுங்க வைப்பான்
இவன்...
மாயவன் அன்றோ...
மனதினில் அனையா ஆசை தீ வளர்ப்பான் ;

தேம்பி அழுதால் சேயென வாரி அனைப்பான்
கை இரு சேவித்தால் தீரா துன்பங்கள் நீப்பான் ;
வானென உயர்ந்தே தலைகனம் அழிப்பான்
வாமனனாய் வந்து உலகினை அளப்பான் ;

அதிகாலை சூரியன் இவனென சிரிப்பான்
அதிலெங்கும் பறக்கும் சிறகாய் மிதப்பான் ;
கறுநிறமெங்கும் திருஉருவாய் காட்சியளிப்பான்
நீலக் கடல் துளிரிலை யென வண்ணமும் ஆவான் ;

ஞானம் உரைக்கும் குருவும் இவனே
மானம் காக்கும் நாமமும் இவனே
சேமம் வழங்கும் நற் சேவகன் இவனே
ஆதி ஷேசனை உடுக்கும் அன்பனும் இவனே ;

பாவையர் கொஞ்சும் கோகுலனே
நின் பாதம் ஒன்றே பேரானந்தமே
ஆயர் குலத்து ஆதவனே
நின் நெஞ்சம் ஒன்றே தஞ்சமே ;

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்ட போதே காதல் கொண்டது நெஞ்சே ;

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மயங்குகிறாள் மை விழியாள் இங்கே~~~

- வித்யாசன்

சகியே


நேசம் பேசுதடி சகியே
அது நேரம் பாராது தூக்கம் கெடுக்குதடி சகியே ;

மோசம் செய்வாரடி சகியே
அவர் பகல் வேசக் காரரடி சகியே ;


நிதம் ஆசை வளர்ப்பாரடி சகியே
அதில் அளவுண்டு என்றென்னை அழ வைப்பாரடி சகியே ;

தேவதை என்பாரடி சகியே
தேன் குடித்ததும் மறந்திடா வண்டென்பாரடி சகியே ;

பெரும் பாசம் வைப்பாரடி சகியே
அது பழுதாகின் பொய் கோவம் கொள்வாரடி சகியே ;

என் சுவாசம் என்பாரடி சகியே
சொன்ன சொல் யாவும் இன்று ஏன் மறந்தாரடி சகியே ;

அதன் காரணம் கேட்டிடுடி சகியே
என் காதல் பரி பூரணமடி சகியே~~~


- வித்யாசன்

பெருங் குருடு

முகம் காட்டா கண்ணாடியை உடைக்க
தெறித்துச் சிதறிய சில்லெங்கிலும் பெருங் குருடு~~~


- வித்யாசன்

சவப்பெட்டியல்ல

கொலை செய்ய ஒப்புக் கொண்ட இரவின் வாயிலில்
நிர்வாணம் கதறாது செதுக்கப்படுகிறது

பாம்புகள் நெளியும் படுக்கை அறை சவப்பெட்டியல்ல

அது....
பிரேதப் பரிசோதனைக் கூடாரம்~~~


- வித்யாசன்

பெருங் காடு

சிறு கூடுடைத்து
பெருங் காடு பற~~~


- வித்யாசன்

எட்டா வட்டம்

ஆல்கஹால் உயரத்தின் பிடி தளர்ந்த நரம்பு கூட்டில்
தள்ளாடும் வார்த்தைகளின் உள்ளங்கையில் பெரும் காய்ப்பு ;

பதிலற்ற பாதரச பார்வையில் உருளும் எண்ணங்களில்
ஒட்டாத நிஜங்களின் நினைவில் படிந்திருக்கும் பாசியின் நிறம் கறுப்பு ;


ராக்கெட் வேக சிந்தனையின் வால் புகை அழியும் அழகியலாய்
உருமாறும் ஆசையின் மேக பின்னலில் வானம் தன் வடிவம் இழப்பதில்லை ;

துப்பாக்கியின் துளை கக்கும் தோட்டா முனையின் கூர்மையாய்
இருதயம் கிழிக்கும் ஞாபகத்தின் ஊதுபத்தி அனைவதில்லை ;

இலையில் துளிர்விடும் செடியாய் இயற்கை மாறுகையில்
மண் வாசம் நாசி வாசல் நுழைகையில் மழை மலராகிறது ;

கள்ளிச் செடியின் விசமருந்தும் காம்புகளுக்கு
ஒருபோதும் நிகழ்வதில்லை கருகலைப்பு ;

தீப்பெட்டி முத்தங்களில் தெறிக்கும் ஒளிச் சிதறலின் முகமதனில்
வெளிச்ச வகுடின் முதுகுத்தண்டின் கடைசி புள்ளி இருள் ;

கனவுகளை கழுவி ஊற்றும் அந்தியின் கைப்பிடியில்
மின்னும் விழிகளின் வழியெங்கும் துணையாகிறது எட்டா வட்டம்~~~


- வித்யாசன்

இனிப்பு காடு

சுற்றிவைக்கப்பட்ட நினைவு கூட்டில்
தேனொழுகும் ஞாபக பிசுபிசுப்பில்
சிக்கிக் கொண்ட சிறகின் கிறுகிறுப்பில்
பறத்தல் பலவீனமாகி சுவைக்கையில்
இறகெங்கிலும் இனிப்பு காடு~~~


- வித்யாசன்

முத்தங்களின் வரிசையில்

முத்தங்களின் வரிசையில் அமர்ந்து கொண்ட இதழின் அசைவில் ஆதாம் ஆப்பிள் ஏவாளாய் ;
கிளையின் வகுடெடுக்கப்பட்ட பச்சை நரம்பில் பெருங் கூந்தலை உலர்த்தி ரசிக்கிறது காற்று ;
ஈரம் வடிந்த விழியில்
அப்பிக் கொண்ட வறட்சியில்
இறகின் வீரியம் வானம் நீவுகிறது ;

பாதையெங்கிலும் சிதறிக்கிடக்கும்
மெளன நாக்கின் சுழியத்தில்
கேள்விகள் கிசுகிசுக்கிறது ;

இது சட்டென்று எனை
தீண்டியும் விஷமேறா சர்ப்பத்தின் தலை~~~


- வித்யாசன்

தேடும் விழியில் மது

வார்த்தையை பூட்டிவிட்டு
சாவிகளை குலுக்கிப் போடுகிறாய்
திறப்பதற்கான நுணியைத் தடவுகையில் விரல் இதழாகிறது ;


தேர்ந்தெடுப்பதற்காக மறைக்கப்பட்ட சீட்டில்
எழுதப்பட்டிருக்கும் வாசகம் முன்பாகவே
அதனில் சுவாசம் சுழியமிடுகிறது ;


கள்ளி செடி முற்கள் பரிசாகினும்
அதன் அழுத்தமானது ரத்தமாவதில்லை
பிசுபிசுக்கும் ஆசிர்வாதமாகும் ஆமென் ;


பிராய்டுவின் வழியில் தொலைந்த நினைவுகள்
பிரெய்லியில் அசையும் பெல்லியாகையில்
மனதுக்குள் ஜெல்லி ஃபிஷ் ஆக்டோபஷ் அளவில் நீள்கிறது ;


நியூட்டன் விதி தலை கீழ் தவறாகையில்
ஆதாம் ஏவாள் ஆப்பிள் கசக்க
மம்மிகளின் பிரம்மீடுகளில் வரையப்பட்ட ஓவியமாய் காதல் ;


மணல் குடுவையில் வழியும் காலமாய்
மரங்கொத்தி துளையிடும் காயமாய்
அழிந்து ஒளிரும் தொலைதூர டார்ச்சாகும் நிலவின் சாயல் ;


பிகாஷோ வளைவுகளின் மெளனங்களில்
பியானோவை அதிர வைக்கும் ரகசியம்
அழகின் கொடு அவலம் ;


படுக்கையில் சட்டை உரிக்கும் சர்ப்பமாகிட
இருள் ஊட்டும் நினைவுக் கசையடியில்
ஒழுகும் ஓங்காரத்தின் நாமம் நீர்மம் ;


நுழைய முந்தும் அமீபாவின் ரேகையில்
ஜீன்களின் பரம்பரை முதுகுத்தண்டு தாங்கிட
முகவெட்டின் சாயலைத் தேடும் விழியில் மது கோப்பை தெறிக்கிறது ;


சாத்தானின் சமாதானப் பேச்சுகளை
தட்டிவிடும் உணர்வு நரம்புகளின் முடிச்சானது
மயான பலிபீடத்தில் சமாதியாகிறது தெய்வமாய் ~~~


- வித்யாசன்

முண்டாசு முகம்

ஐய்யம் வந்தென்னை அனுகிட
அச்சமயம் அச்சம்கொண்டு
நானுன்னருகில் வந்தமர்ந்திட
வீரம் பொங்கிடும் விழிகள் கனலாகிட


துன்பம் வந்தென்னை துளைத்திட
துணிவற்று நொந்திட
நின் எழுத்தினை வாசித்திட
விசமென தீண்டியது இன்பமென என் வசமாகிட


கண்டதாவும் மீது மனமது ஆசையில் தாவிட
அது வெறும் கனவாகிட
முண்டாசு முகம் தனை நினைந்திட
அக்கணம் எண்ணியது மீறாது என் கை வசமாகிட 


சொல்லது தடுமாறி பொருளது உருமாறிட
வல்லதென யாவும் ஆகிட
நின் நெஞ்சுறுதி சிந்தையிலே நின்றாட
சிதறி விழும் வார்த்தையெல்லாம் சந்தமாகிட


வஞ்சகர்கள் சூழ்ந்தே தினமென்னை வதைத்திட
வலியது தாங்கது கசிந்திட
நின்னது வாஞ்சை மொழி கேட்டிட
வன்துயர் வான் பறவையாய் பறந்திட


சோம்பலது சதையாகி சோர்ந்தே வீழ்ந்திட
ஆகுவது இனியேதுமில்லை அடிமையாகிட
அக்னி குஞ்சென்று நீ பாடிட
சாய்ந்த சாம்பலில் புது சக்தி பிறந்திட


இப்பூதவுடல் வீண் பாரமென்று ஆகிட
யாருமில்லை உடனென்று நேர்ந்திட
நின் சத்திய வார்த்தைகளை நினைவு கூர்ந்திட
நான் செத்தே போயினும் பிளைப்பேன் பூமி வியந்திட


அதன் காரணம்
யாரெனக் கேட்டிட
பாரதி உன் மீதுள்ள
தீராக் காதல் என்பேன்
யாவரையும் விட~~~


- வித்யாசன்

அழகனே... முருகனே....

சேவற் கொடியோனே
நல் செய்தியது தருவோனே

காலன் அழிப்போனே
பெரும் காதல் கொள்வோனே


எண்ணக் கொடியதை வதைப்போனே
மாயப் பிடியினை அறுப்போனே

வேலதனில் வெல்வோனே
வேத நாயகனே

முத்தமிழ் ஆறுமுகனே
வித்தையில் தகப்பனே

பழம் வேண்டிய ஆண்டியே
ஞான பலம் தேடிய பழநியே

சினம் கொண்ட சுவாமியே
எம் சிந்தை யாவும் நீ நிரம்பியே

வண்ண மயில் மீது மனமிறங்கியே
வள்ளி,தெய்வானையுடன் காட்சி நேரில் தந்தாயே

தலை வணங்கினேன் அய்யனே
எங்கள் தலைவனே தென் தமிழ் கடவுளே

அழகனே...
முருகனே....


- வித்யாசன்

முயன்று பார்...


முனுமுனுக்கும்
உதடுகளுக்கு முற்று புள்ளி கிடைக்கும்;

தடை உடைத்து பார்...
தடங்களாய் தெரிந்தவைகள் அத்தனையும்
வழி விட்டு வரவேற்கும்;

உழைத்து பார்...
உறங்கிய கனவுகள் ஒவ்வொன்றாக
விழிக்க ஆரம்பிக்கும்;

தோற்று பார்...
தோல்விகளை தட்டிக் கொடு
வெற்றிகள் தோள்களில் விழும்;

மன்னித்து பார்...
நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக் கொள்
நாளைய உலகம் உன்னை நம்பியே;

உருவாக்கி பார்...
உனக்காகாததை தேடுவதை விட்டுவிடு
உடனே உருவாக்கு தனியே;

இத்தனையில்...
ஏதாவது ஒன்றை இன்றே செய்து பார்;

உனக்கான வாசல் திறக்கும்
வாழ்விற்கான புது அர்த்தம் பிறக்கும்...!


-வித்யாசன்

நந்தகோபாலா

நம்பிக்கையின் மனப் பாத்திரத்தை கழுவி கவிழ்த்திய பின்...
நின் நினைவு பசி வதைப்பதைக் கண்டு
ஆற்ற முடியா வக்கசியாய் ஆனேன்

எனை
சமைத்திட சொல்லாதே
சபித்திடு
நந்தகோபாலா~~~


- வித்யாசன்

** வரலாறு காணாத ம(பி)ழை**

காறித் துப்பிய நிலமெங்கும்
களவாடலின் கையறு நிலை

துளி துளியாய்
தலை வாசல் உடைக்கப்பட்டன

முத்தமிடப்பட்டவை முள்ளானது
முழுவதுமாய் மூழ்கி தவிக்கிறது

வகுக்கப்படாத சட்டங்களின் ஓட்டைகளில்
வடிய மறுக்கும் நீதியின் பெரும் ஈரம்

மக்க முடியாதவற்றை விதைத்தோம்
மீள இயலாத துயரை அறுவடை செய்கிறோம்

வழி அடைத்த குற்றம் மறந்தோம்
வலி அகலாது இடம் பெயர தத்தளிக்கின்றோம்

கட்டிடங்களை கண்ணீரில் மிதக்கவிட்டு
இருள் அப்பிய தருணங்களில் வெறுமை நடுங்குகிறது

சிம்மாசன சில்லரை அதிகாரம்
சீழாய் கசிய குலுங்குது தலை நகரம்

இது பின்னொரு நாளில் பயங்கர கதையாகும்
துன்பம் துளைக்கையில் மதமற்று மனிதம் ஓங்கும்

குடை பிடிக்க மறுக்கும் சூரியன்
தனதானதை இன்னொரு நாள் கற்பிக்க காத்திருக்கு ?

கனவு பெட்டகங்களை தேடிய சாலையில்
இன்று உணவு பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகிறது

ஆம்....
இது வரலாறு காணாத மழைதான்
காரணம்...
மனிதன் செய்த பிழைதான்~~~

- வித்யாசன்