செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கடிதம்

தூரங்கள் துயரங்களானது
பாசத்தை விற்று பணம் ஈட்டுவதால்

எல்லா வசதிகளும் இங்குண்டு
உன் மடியில் தலை சாய்த்து
தூங்க மட்டும் முடியாது

புயல் வேகத்தில் பறக்கும் வாழ்க்கை;
புழுதி உடுத்தியதால் நீ அடித்த
அந்த நாட்கள் போலில்லை

சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு

வித விதமாய் புத்தாடை;
மழை சொட்டும் நேரதத்தில் நீ மூடும்
கிழிந்த முந்ததனையின் சுகம் இதிலில்லை

எடுப்பு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்‡ எனை
இடுப்பில் தூக்கிக் கொண்டே‡நீ
அடுப்பில் வேலை பார்த்த அதிகாரம் இன்றில்லை

விஞ்ஞான வளர்ச்சியில்
மின்அஞ்சல், அலை பேசி நம் இடைவெளியை
குறைத்தாலும், கனத்த நெஞ்சோடுதான் நாளும்

அம்மா...
உனை அழ வைக்கவே எழுதுகிறது இந்த கடிதம்

இப்படிக்கு
உன் மனசு .

மு.வித்யாசன் 

புதுமை

காலத்தின் பரிசு
தேடலின் பதில்

ஆசையின் விளைவு
எல்லோருக்குள்ளும் நுழைவது

கனவுகளின் பிம்பம்
ஒவ்வொரு கணமும் நிகழும்

மாற்றத்தை விட்டுச் சென்று
நம்மிடையே ஏக்கத்தை ஏற்படுத்துவது

புதுமை !!
 


மு.வித்யாசன்
பண்பாளர்
 

காதல்

சொல்லி, சொல்லி
சுவைக்க கூடிய சுவை

அள்ளி, அள்ளி
பருக கூடிய பானம்

இதிகாச கதைகளின்
அச்சாணி

இனம், மதம், ஊனம்
தாண்டிய உன்னதம்

உணர்வுகளை நெய்யும்
ஆயுதம்

உருவமில்லாது உலவும்
அற்புதம்

மூடனையும் கவிஞனாக்கும்
முள்ளையும் ரசிக்க வைக்கும்

பட்டாம் பூச்சி முதல்
தூசு வரை நுழைந்து பார்க்கும்

நூலாம்படையில் கூட
நூலகம் தேடி பிடிக்கும்

அறவியல் கண்டுபிடிக்க
முடியாத அதிசியம்

ஆதாம், ஏவாலின்
ஆதி ரகசியம்

காதலை..
எழுதிவிட்டனர்
கவிஞர்கள் கோடி...

ஒவ்வொரு நிமிடமும்
கவிஞர்களை கருதரிக்கிறது
காதல்
உடலுறவின்றி !!


மு.வித்யாசன்

பயந்து போன துண்டு

என் தாத்தா சொன்னது போல்...

ஒற்றைக் கால்
வானத்தை தொடும் உயரம்
பத்துக்கும் மேற்பட்ட கைகள்
அந்தரத்தில் தொங்கியபடி கருவிழி

நான் பயந்து போன துண்டு
எனது கிராமத்து.

தென்னை மரங்களை பார்த்து !!
(குட்டி பைய்யனா இருந்தப்ப)

மு.வித்யாசன்

கனவு

தலையனை திரைக்குள்
பதிவு செய்யப்படாத காட்சி

இமைகளின் கதவுகள் சாத்தியதும்
நினைவுகள் சொல்லும் கதை

விழித்ததும் கலைந்து போகும்
புரியாத விடுகதை


மறந்த போன கனவு
நினைவுக்கு வருவதுண்டு


எப்போதாவது அது
நிஜமாகும் பொழுது!!


 மு.வித்யாசன்

கோடையில் மழை

கோடிட்ட இடங்களை
நிரப்ப வருமா ?

கோடையில்
மழை !!
 

அனுமதி

சிரிப்பது என்றால்
என் இதழ்களும்


அழுவது என்றால்
என் இமைகளும்


என்னவோ...

உன்னை மட்டும்
பக்கத்தில் அனுமதிக்கிறது
!!

மு.வித்யாசன்

தாங்கும் பிரிவை தா



பள்ளி விடுமுறை காலத்தில்
துள்ளி குதித்த மனது...


அலுவலக பணி முடிவடைந்ததும்
ஆர்ப்பரித்த இருதயம்...

உன்னை பிரிய நேர்ந்ததும்
ஏனோ ...

முன்னே சொன்ன காலத்தை
நோக்கி பின்னே செல்கிறது


தாங்கும் பிரிவை தா என்று !!



மு.வித்யாசன்

தடங்களை நோக்கி

பிறப்பு இளமை நோக்கி
இளமை முதமை நோக்கி
முதுமை இறப்பை நோக்கி
இறப்பு இன்னொரு பிறப்பை நோக்கி
விநோத வாழ்க்கை பயணத்தில்
பெறுவதும், இழப்பதும்
ஞாபக தடங்களை நோக்கி !!

மு.வித்யாசன்.

குடைகள்

 மு.வித்யாசன்

ஓவியங்கள்

விரல்களும் இல்லை
துரரிகையும் இல்லை
விண்ணில் வித விதமான
ஓவியங்கள்...
வரைந்து பழகுகிறது மேகங்கள் !!
மு.வித்யாசன் 

தோழமையோடு

ஏதோ இனம் புரியாத நேசம்
எனக்குள் எல்லையில்லாத இன்பம்
உனக்கும், எனக்கும் உண்டான பாசம்
தூரத்தில் நாம் இருவர் இருந்தாலும்
தூய்மையான அன்பு துணை நிற்கிறதே
தூயவளே....
எப்பொழுதும் நாம் நாமாக இருப்போம்
தாய்மையின் பாசம் மாறாது தோழமையோடு !!
மு.வித்யாசன்

உனதாகிறது

என்னை சுற்றி நடப்பது
எதுவாகினும்

எல்லாம்
உனதாகிறது...

உன்னைச் சுற்றி நிகழ்வது
எனதாவதால் !!

நீ இல்லாததால்



நீ படிக்க கவிதையானது

என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது

வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது

மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது

சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது

பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது

முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது

நீ இல்லாததால் !!






மு.வித்யாசன்

நீயும்

தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்

கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்

சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்

தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை

என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்

அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!

மு.வித்யாசன்

கொடுமையானது

உளிகள் வாங்கும் வலிகளை விட
கொடுமையானது...

என் மீது விழும் 
உனது விழிகளின் அடிகள் !!

மு.வித்யாசன்

நமக்கு மட்டும் புரிந்த ஒன்று

எப்பொழுதும் உன்னோடு இருக்கவே
ஆசைப்படுகிறது என் பயணம்


உன் மடிமீது துயில் கொள்ளவே
பிரியப்படுகிறது என் இமைகள்

உனக்குள் புதைந்து புதுப் புது
பிறவி எடுக்க தவிக்கிறது என் மனது


உன்னை தீண்டும் தென்றலையும்
தடைவிதிக்க நினைக்கிறது என் கனவு


உன்னோடு கழியும் பொழுதுகளை
மட்டும் அனுமதிக்கிறது என் காலம்


இந்த உலகத்தில்
நீயும். நானுமாக வாழ்வதையே
எதிர்பார்க்கிறது என் உலகம்


யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாத
நேசம் என்னோடது என்று நமக்கு
மட்டும் புரிந்த ஒன்று !!
 

இன்னும்

யாரும் ...
அழைத்து விடாதீர்கள்

உணவு பஞ்சம் இல்லாத உலகத்தில்
எனது உறக்கம்

இன்னும்...
கொஞ்சம் காலம்தான் !!

இன்று

மனதுக்குள் இன்று இனிக்கும்
பூக்களின் வாசம்

மழை பொழிந்தும் ஒரு துளி கூட
நனையாத புது மயக்கம்


ஏனோ இடம் மாறி தோனறியது
இயற்கையின் வழக்கம்


ஒரு குடையாக மாறியதாய்
வானம் மெய்மறக்கும்

முதல் முறையாக
அன்பில் சிறகு விரித்து பறக்கிறது
இதயம் முழுக்கும் !!


மு.வித்யாசன் 

தாய்மை


ஆண்கள் அடைய முடியாத
அற்புதம்

மனித இனத்தை உருவாக்கும்
கருவறை


சுமைகளில் சுகம் காணும்
சூத்திரம்


சொர்க்கம் தங்கிபோகும்
உலகம்


பெண்மையின் தன்மைக்கு
இலக்கணம்

கணவனுக்கு மனைவி அளிக்கும்
மாபெரும் பரிசு

உணர்வுகளுக்கு மட்டும் கிட்டும்
பேரின்பம்

மண்ணில் பெண்மை எழுதும் உயிர்மை
தாய்மை !!



மு.வித்யாசன்

உயர்ந்த புத்தம்

ஒரு நூலகம் கையில்
புத்தகம்

ஒரு இலக்கணத்தின் விரல்களில்
அகப்பட்ட வார்த்தை

பூவின் மடியில்
ஒற்றை இதழ்

கவிதை படித்து பார்க்கும்
காகிதம்

உலகத்தில் இதை விட ஏதுண்டு
உயர்ந்த புத்தம் !!



மு.வித்யாசன்

முன்னோட்ட கோலம்


மின்னி மறையும்
வெள்ளை நதிகள்

இலையதிர் காலத்தை காட்டும்
வானத்தின் கிளைகள்
பூமியை புகைப்படம்
எடுக்கும் கேமரா

மேகம் அணிச்சமாக செல்லும்
வெளிச்ச சாலை
வானமும்.மேகமும் உரசியதால்
உண்டான தீப்பொறி

முத்த மழை தொடுக்க விண்ணின் தேகத்தில்
தென்படும் நரம்பு

ஒரு கணத்தில்,வான் கன்னத்தில்
முத்தமிட்டு மறையும் தழும்பு

புவியை தொட்டு விளையாடும்
வான விரல்கள்

மழை எனும் புள்ளி வைக்க
வானம் இட்ட முன்னோட்ட கோலம்
மின்னல் !!


மு.வித்யாசன்

இமை

கவிழ்ந்த படகு
விரிந்த குடை


உடைந்த வளையல்
மூன்றாம் பிறை

ரோம சுடர்
யானை தந்தம்

ஒற்றை இறகு
அபூர்வ தூரிகை

எப்படி
...
எல்லாம்
கலந்து ...

புன்னைக்கிறது
உன் இமை !!

ஒவ்வொருவரும்

முடிவதும், விடிவதும்
இயற்கை

விழுவதும், எழுவதும்
வாடிக்கை

தொலைவதும்,தேடுவதும்
நம்பிக்கை

ஒவ்வொருவரும்- நாம்
யார் என்பதை அறிவதுதான்

வாழ்க்கை !!

அந்த நிமிடம்

அந்த நிமிடத்தில்தான்
எனது பயணம்


அந்த கணத்தில்தான்
எனது கவனம்

மாறிபோனது பாதைகள்
ஆயிரம்


இன்னும் மறையவில்லை
அந்த காலம்

நரை விழுந்து தளர்ந்த
பின்னும்

நுரையீரல் கரையில் வீசுகிறது
வசந்தமாக உனது நினைவலை

கல்லரைக்கு நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கும் தருணம்

இப்பொழுதும்
நீயும் நானும் கைகோர்த்து
நடந்து சென்ற பாதைகளை பார்த்து
இளைப்பாறுது எந்தன் மனம் !!

வாய்ப்பு கிடைத்ததற்காக

அனுதாபம், பரிதாபம்
இதுதான் என் பெயர்


இரைச்சலுக்கு மத்தியில் தெருவோரத்தில்
வாடகையில்லா கடை

காலடிகளை பார்த்து கொண்ட படி
ஆரம்பமாகிறது பணி

பல வேளை குடல் நூல்
பசி எனும் ஊசி கொண்டு குத்துவதுண்டு

அருந்து விடாதா செருப்பு
கடந்த போகையில் தோன்றும் நினைப்பு

சில நேரம் தேவதைகளின் காலணிக்கும்
பழுது செய்ததுண்டு


தேய்ந்து,ஓய்ந்து போன காலணிக்கும்
சேதம் பார்த்ததுண்டு

காலணிகளை செப்பமிடும் எனக்கு
கால்கள் இல்லை என்று கவலை கொண்டதில்லை

காலம் முழுக்க கால்தடங்களுக்கு
சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக !!

மு.வித்யாசன்

நம் அம்மாக்கள்

தன்னையே உருக்கி தன்னையே

உருவாக்கும் கருவறை உலகம்...

ஒவ்வொரு கட்டமும் உள்ளுக்குள் நிகழ்வதை
உணர்ந்து பெருமையடையும் உன்னதம்...
சுமைகளை சுகமாக தாங்கி கொண்டு
உலகிற்கு உயிரை அறிமுகப்படுத்த
காத்திருக்கும் தன்னலமற்ற இருதயம்...

தான் ஏழை என்ற போதும்
ஈன்றதும் வான் செல்வம் அடைந்ததாய்
உச்சி முகரும் அந்த தருணம்...

வறுமையின் பட்டினி பிடியில்
தன் பிள்ளை பசியாற்ற மார்பில்
பால் சுரக்கச் செய்யும் அட்சயபாத்திரம்...

கட்டிலுக்கும்,தொட்டிலுக்கும்
இடையில் கசங்கி சருகான போதும்
எதிர்பார்ப்பின்றி உழைக்கும் ஓவியம்..


அடுப்படியே அடிப்படை உலகமாய்
அயராது புரியும் பணிவிடையே பாடமாய்
அன்றாடம் கரைகிறது வீடதோறும் ஒரு மெழுகு...

எதிர்கால பூந் தோட்டதிற்காக
எல்லோராலும் செதுக்கப்பட்டு உளியின்
வலி தாங்கி வழி காட்டும் சிலை...

விழிகளில் ஒளி மங்கிய பின்பும்
செவியின் அறை பலமிலந்த பின்னும்
தெரு முனையில் வரும் காலடித் தடங்களில்
தம் பிள்ளைகளின் ஸ்வாசம் வருடம் தெய்வம்...

முதியோர் இல்லங்கள் பெருகிய காலத்திலும்
தனிக் குடுத்தனங்கள் தலைவிரித்தாடும் யுகத்திலும்
இன்னமும் மட்டுமல்ல என்றெனறும்
இடுப்பில் சுமக்குதம் பிள்ளைக்கு வியர்க்குமென்று
தம் முந்தானை கொண்டு முகம் மூடுவதுண்டு
நம் அம்மாக்க
ள்!!
 


 மு.வித்யாசன் 

சுமக்க


என் இருதயம் கண்ணாடியாகவே
இருக்க ஆசைபடுகிற
து ..

வெறுத்து
நீ உடைத்தாலும்...

சிதறி விழும் துண்டுகளில்
உன் உருவத்தை சுமக்க !!

தொலை தூரத்தில்

கம்பன் வர்ணிக்க முடியாத அழகு
செல்லி கண்டிராத அற்புதம்
எப்படி சொல்வது
எழுத்துக்கள் அணிவகுத்து
வெட்கம் கொள்கிறது
உன்னை வர்ணிக்கும் வேளையில்...

இயற்கையை குழைத்து
செய்யப்படவளா நீ...

வானவில்லில் நூல் எடுத்து
பிண்ணப்பட்டவளா நீ...

அய்யோ....
என்று உனை காணும் பொழுது எல்லாம்
என் மனதுக்குள் ஆவல் எனும் ஆறு பாய்கிறது....

கைகளை முட்டி,முட்டி
கவிதை சொல்கிறது
உனது...
கண்ணாடி வளையல்

நிலவு வெட்டி ஒட்டி வைத்தாற்
போன்று எனை குத்துகிறது
உனது மூக்குத்தி...

கூர் மழுங்காத கத்தியா ?
உன் கண்கள்..

கவிழ்ந்த குடையா ?
உன் இமை

கடல் இல்லாத அலையா ?
உன் இதழ்

மூங்கில் காடா ?
உன் கழுத்து

குலையும் மலையா ?
உன் மார்பு

அப்பப்பா...
நீ.. ச்சீ ... என்று
இசை மீட்டும் போது
என் உயிர் கரையில்
எத்தனை எத்தனை ஓசை

இது வரை...
விடை எழுத முடியவில்லை
கோடிட்ட உனது இடையில்...

மடி என்று நினைத்துதான்
துயில் கொண்டேன்

மடையன் நான்...

மடி அல்ல மடி அல்ல
மயில் காட்டில் அல்லவா கண் அமர்ந்தேன்...

காற்று தீண்டி கரைந்திருக்கிறேன்
கவிதை தீண்டி மறைந்திருக்கின்றேன்
கானம் தீண்டி நனைந்திருக்கிறேன்
மழை உரசி உடைந்திருக்கிறேன்...

எப்படி சொல்ல

உன்...
விரல் தீண்டிய அந்த நிமிடத்தில் மட்டுமே
எல்லா வற்றையும் ஒன்றாக உணர்ந்ததை....

மழை பெய்யும் நேரத்தில்
உன் இமை தேடுவதுண்டு
நான் நனையாமல் ஒதுங்கிக் கொள்ள
எனக்கான குடை அதுவென்று...

இன்னும் உன்னை ரசிக்க ருசிக்க
அலாதி ஆசை

என்ன செய்ய...

தாவி தழுவும் நினைவோ பக்கத்தில்
லகிக்க முடியாமல் தவிக்கிறேன்

நீயோ...

தொலை தூரத்தில்!!


விரல் பிடித்து

  • உன் விரல் பிடித்து
    நடப்பது என்றால்
    என் கைரேகையும்
    நெடுஞ்சாலையாக மாறும் !!

  • மு.வித்யாசன்

பெண்-6

பெண்-5

பெண்-4

பெண்-3

பெண்-2

பெண்-1

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எனக்கு தெரியும்

மர நிழலில் நிற்பதை விட
உனது நிழலில் நிற்கவே விரும்புகிறது
எனது பாதம்...


இளநீரும்,பழச்சாறும் பருகுவதை விட
உனது கைவிரல் பட்ட தண்ணீருக்கே காத்திருக்கிறது
எனது உள்நாக்கு...

தங்க மோதிரம், வைர ஆபரணம்
நீ அணிந்தால் அழகு என்று சொல்வதுண்டு
எனக்கு மட்டும்தான் தெரியும் மிகச்சிறந்த அழுகு
மருதாணி பூசி சிவந்திருக்கும்
உன் விரலென்று...
மழை,தென்றல்,வெயில்

எது எதுவிற்கோ காத்திருப்போர் மத்தியில்
உனது வருகையில் எழும் காலடி ஓசைக்காக
காத்திருப்பது நான் மட்டும் அல்ல உன் கொழுசும்தான்...

எப்பொழுதெல்லாம்
தூரல் சொட்டுமோ
அப்போதெல்லாம் என் மனது மாபெரும் கவலையை சுமக்கும்
எங்கே... மழையில் நீ நனைவாய் என்றல்ல
ஒரு குடையாய் நான் பிறக்கவில்லை என்று...

குருவிகளின் சத்தம், அருவிகளின் முத்தம்
முதல் மழைத்துளியின் தழுவல் இப்படி எல்லாவற்றையும்
ரகசியமாக உன்னுள் இருப்பது தெரிந்தும்
எப்படி நான் ரசிக்காமல் கடந்து செல்வது...

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும்
உயிர்ப்புகளும்,பொய்ப்புக்களும் ஏராளம்தான்
அது அத்தனையையும் ஒட்டு மொத்தமாக
ஓரப் பார்வையில் சொல்லிச் சென்றது நீ தானே...

பகல்,இரவு,வெண்ணிலா,விண்மீன்
உணவு,கனவு,கற்பனை,எதிர்காலம்
தூரம்,நிமிடம்,பாதை,பயணம்,வாழ்கை
எல்லாம் நீயே என்று சொல்ல வைத்தாய்
என்னருகில் அமர்ந்த அந்த ஒற்றை நிமிடத்தில்...

நேசிக்கவே தெரியாதவன் என்று
நெருங்கியவர்கள் சொல்லியது
வெறும் கதையயன்று எல்லாவற்றின் மீதம்
காதல் கொள்ள வைத்து கவிஞனாக்கினாய்...

இந்த பிரபஞ்சத்தில் பஞ்சாய் பறந்து
திறிந்த என்னை விளக்கில் சுடர் விட்டு
எரியும் திரியாய் மாற்றி வெளிச்சத்தின்
வாசற் கதவு அருகில் நின்று ரசித்தது நீ...

பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...

முதுமையில் சாய என் மார்பு
பாச தீண்டலின் மெய்சிலிர்ப்பு
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பு
மரணம் வரை உள்ளங்கை சேர்ப்பு
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும் எதிர்பார்ப்பதில்லை என்று !!


மு.வித்யாசன் .