வியாழன், 25 ஜூன், 2015

ஓர்நாளும்

வாழ்க்கை எனும் பெரும் கடலில்
ஓயாது அலையென எழுவேனே அன்றி
ஓர்நாளும் நுரையென கரை ஒதுங்கேன் ~~~


- வித்யாசன்

உன்னை

நான் உன்னை காதலிப்பதால்தான்
தமிழ் என்னை காதலிக்கிறது


- வித்யாசன்

தந்திடாது

முன்னது புகழ் பேசியே இந்நாள் கழித்திடும் கூட்டத்தின் நடுவினில்
தன்னிலை மறந்து துதிபாடும் அவநிலை எனக்கென்றும் தந்திடாது
தனி ஒரு வையகம் படைத்திட பெரும் சக்தி அளித்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

ஞாபகங்கள்

நொறுங்கியப் பின் சிதறிய சில்லரைகளை உடைபட்ட உண்டியலில் சேமித்துவைக்க இயலாததாய் முறிந்த ப்ரியங்களின் உணர்வினை எங்கே சேர்த்து மீண்டும் மூடிவைப்பது என்பது கேள்விக்குறியாகிட பெரும் பாரம் வந்தமரும் நேசத்தின் உடலெங்கும் ரணங்களின் தீராக் காயங்களில் ஞாபகங்கள் முள்ளாய் சொருகிட வலியும் உவர் குருதி மெழுகாய் உரைந்திட நிலை தவறிய நிமிடங்களில் பெருக்கெடுத்த வார்த்தையின் கீழ் பகுதியில் பீறிட்டழுகும் புலம்பலனின் தனிமை மெளனம் நீடித்திட இருள் கவ்வும் வெளிச்சத்தின் சொற்பம் சர்பமாகிட சொற்களின் விசம் வீரியமாகி விழுங்கி குதூகலிக்க இயலாது கிடைபொருளாய் செயலிழந்து செரித்தல் மறந்திட்ட காலத்தின் கட்டமற்ற காய்களற்ற தாயமற்ற ஆட்டத்தின் மத்தியில் நிறுத்தி பேரன்பே இழப்பின் பெரும் காரண முகம் காட்டி பின் இருளில் தாளிட்டு தலை சாய்த்து சாய்ந்திருக்கும் சடலமதில் சவமாய் தவமிருக்கும் நினைவு மெல்லமாய் கழுவேற்றி துயில் குடிக்கிறது அறையின் நாற்புறமும் நீளும் நரக நாகமாய் ~~~

- வித்யாசன்

ஓம்...

பெரு ஞாயிறு ஒளி முகமே
அருள் தரும் திரு உருவமே
எம் நாக்கினை மெய்யாக்கிடு
நல் வாக்கினைத் தந்திடு
உலகில் உள்ளது யாவும் அறியேன்
உள்ளம் தெளிந்து நின் திருவடி தொழுதேன்
கள்ளம் மறந்து கனியாய் மாறிடவே
கசந்த வேப்ப மரத்தினில் இனிப்பானவளே
சிந்தை மறந்து நின் செவ்விதழ் காண்கையில்
சிரித்தெனைச் சேர்த்தனைத்திடும் செந்தமிழ் தாயே
சொல்லும் செயலும் சிறப்பாகவே
இந்நாள் செய்வது நின்னாள் ஆகுவதே
ஓம்.... ஓம்... ஓம்...


- வித்யாசன்

குரைக்கும் அனாதை

பொழுது கவிழ்ந்த இருள் முகத்தின் வனாந்திர மடியினில் தொலைந்துபோன வேகம் யாவும் கூட்டிற்குள் அடைபட்டிருக்க வீதி எங்கும் வெளிச்ச முகாமிட்டிருக்கும் உறக்கமற்ற விழியின் நிழலில் அடங்கிய ஒலிகளின் குறுக்கெலும்பில் அமர்ந்து கூர்ந்து பார்வை வீசும் எச்ச ஓசைகளின் மிச்சங்களில் நிகழும் புணர்தலின் கலைந்த கூந்தலில் அவிழ்ந்த மலர்களின் மங்கிய வண்ணமதில் தோய்ந்தாடும் ரசனையின் பெருவெளியில் முகம் அலசி தடவுகிறது சதுரங்க பெட்டியில் நிர்வாண பாசையை மென்றுவிட்டு அந்தரங்க பாடம் வாசித்த புத்தகம் திறந்த நிலையில் தீராதுப் பரவிக்கிடக்கும் வெற்றிடத்தில் மழித்த நினைவுக் காம்பிலிருந்து விரிகிறது முன்னதனின் முதத்தங்களும் முடிவில்லா சப்தங்களும் எல்லா வரைமுறையும் கோடுகளற்ற பாதையாவதன் தடையங்களை அழித்த பின்னும் சிந்திச் சிதறி ஞாபக் கதவின் ஓரத்தில் குத்தவைத்து அமர்ந்த புலம்பிக் கொண்டிருக்கும் பேரன்பின் பேசமுடியா மெளனங்கள் ஆடைகளற்று ஒவ்வொரு இரவிலும் குரைக்கும் அனாதை நாய்களின் அழுகையாய் ~~~

- வித்யாசன்

அறுத்திடு

ஆடையற்று அருவியில் நீராடிட
ஆசையற்று குருவியாய் பறந்திட
அமைதியில் நல் ஞானம் விளைந்திட
கேட்டது யாவும் கைகளில் கிட்டிட
பார்ப்பது யாவும் பரம் பொருளாகிட
நோய்மை வாட்டா வாழ்வது வாழ்ந்திட
பொய்மை சூட்டா வாய்மை பேசிட
பேதமைக் காட்டா பேரன்பு பெருகிட
பெரியவர் தம்மை தாழ்ந்து வணங்கிட
வஞ்சகம் கூட்டா நெஞ்சகம் பண்பட
வறுமை தீட்டா வளமது பொங்கிட
புண்படும் சொல் இதழ் சேராதிருந்திட
பயன்படும் செயல் ஆற்றல் நிறைந்திட
பிறர் குறை கூறா ஒருமனதாகிட
திரையிடா முகமது நேர் ஒளிபட
புகழது தேடா பொழுதுகள் பூத்திட
பகையது வளரா மன்னித்தருளிட
பசியது அறியா பண்டங்கள் கிடைத்திட
பாரினில் யாவரும் ஒன்றென நேரிட
படைத்தவனே மேலது அருளிட முடியாதென உரைத்திட
இவை அனைத்தும் மறந்து உனை தொழுதிட வரமிடு
அஃதில்லையேல் இக்கணமே இப்பிறவிப்பிணியை அறுத்திடு ~~~


- வித்யாசன்

இறகு

பெரும் கூடுடைக்க சிறகுகள் தேவையில்லை
சிறு இறகு போதும் ~~~


-வித்யாசன்

கூழாங்கற்கள்

பெரும் இரைச்சலைப் பிழிந்து காதுகளின் நரம்பு வழியாக செலுத்தி மூளையின் பாதைகளில் நிரம்பியிருக்கும் மூங்கில் காடுகளில் ஓங்கி வளர்ந்திருக்கும் கிளைதனில் துளையிட்டு வண்டு சென்றதை பின்தொடர அது ராகமென உருமாறி உடலெல்லாம் உணர்ந்து பூத்தலின் பின் அதிலிருந்து வெளிப்படும் வாசத்தின் மயக்கம் கள் விட கடு போதை தலைக்கேறி காண்பது யாவும் கற்பனைக் குதிரையின் கடிவாளமற்ற வேகத்தின் மீதமர்ந்து பயணப்படும் தூரங்களின் நுழைவாயில் புதிர்களைச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் எதிர் காலத்தின் தேய், வளர் பிறை பிம்பங்களின் இருள் முடிச்சுக்களை கட்டவிழ்க்கும் மெல்லிய விரல் தொடுகையின் சுகம் யாழினை மீட்டும் நரம்பென மேவிப் பரவும் மன ஆற்றில் மூழ்கி கசிந்துருகும் நீரின் தழுவலானது நின் வண்ணக் கூழாங்கற்கள் ~~~

- வித்யாசன்

அடிமாடாய்

அதீத சுமை இழுக்கும் பொதி வண்டியின் முன்னில் வாயில் நுரை ஒழுகும் எண்ணங்களைக் கடந்து செல்லும் நடை பாதையின் இடையில் நில்லாது நகர்ந்தபடி சிறுநீர் கழிக்கும் சுடுவெயில் தகிப்பில் பிரார்த்தனையின் செரிமான அசைவுகளை சுழற்றும் சாட்டை அடியின் வலி அடங்கும்முன் வால் திருகி விரைந்திடச் செய்யும் நீங்காத் திமில் ரணங்களின் இழுவையில் இரு விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் புழுதிக் காற்றின் பிசுபிசுப்பில் அசையும் கழுத்து மணியின் ஓசையின் நன் இசையில் லகித்திருக்க இயலாது எதிர் வரும் பள்ளங்களில் முகம் விழுங்கி கடந்திட அடுத்தடுத்த மேடுகளின் பெருத்த செங்குத்துக் கோடுகள் தாழ்வினை சுட்டிக் காட்டி தலை தொங்க விடுவது இயல்பாகையில் நிழல் மிதக்கும் மரங்களின் இடைவெளியில் துளியும் கிட்டாத ஓய்வின் நிலையதனை தழுவிடும் ஊமையின் சொற்கள் எந்த வடிவினில் மொழி பெயர்ப்பதென்பது புலப்படாத நீள் பயணத்தின் இரு கைகோர்பின் பிடியில் பங்கிட்ட தூரங்களின் சிலுவை வடிவினை தொழுவதற்கு மனமிறங்கிடா ஐந்தறிவுக் கூற்றில் ஆறறிவு கூட்டில் அடைப்பட்டு அளவற்ற வியர்வையறியா இளைப்புற்ற பெரும் மூச்சு சப்தத்தில் முனக்கும் மூக்கணாங்கயிற்றின் எரிச்சலின் துயர் களையாது தூக்கிச் சுமந்த எல்லையின் முடிவில் அவன் கையிலிருந்து அவன் கைகளுக்கு அடிமாடாய் ~~~

- வித்யாசன்

பரம்பொருளே

பரண் மேல் வீற்றிருக்கும் பயனற்ற பொருளாய் பாழாகிடாது
பரவிக்கிடக்கும் பகலவனாய் எங்கும் சுடர்விட்டு பிரகாசிக்க
பலம் தருவாய் பரம்பொருளே ~~~


- வித்யாசன்

** கண்ணனுக்கு சமர்ப்பனம் **

ஓடோடி வருவாயடா
கண்ணா....
ஓடோடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ;

நீராடும் போதினிலே
பொய்கையில் நீராடும் போதினிலே
கள்வனாய் ஆடை கொய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


சபை முன்னிலே
பெரும் சபை முன்னிலே துகிலுரிகையிலே
பெண்ணவள் மானம் காக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;

நிலை மாறிப்போகையிலே
மனம் நிலை மாறிப்போகையிலே
சிறு பிள்ளையாய் என்னுடன் விளையாட
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


சிலை போல நிற்கையிலே
செய்வதறியாது சிலை போல நிற்கையிலே
பக்கத்தில் மலைபோல துணையாக
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


பிழை செய்து பிசைகையிலே
அறியாப் பிழை செய்து கையைப் பிசைகையிலே
நிலையறிந்து துயர் துடைக்க
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


கவலை மீளாது நேர்கையிலே
தீராக் கவலை மீளாது துன்பம் நேர்கையிலே
குழல் ஊதி மனம் குளிரவைக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


காதல் பொங்கிப் பெருகுகையிலே
காணாது காதல் கண்ணில் பொங்கிப் பெருகுகையிலே
மாயவனாய் மறையாது கடல் அலையாய்
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;

கோபத்தில் நானிருக்க
கடும் கோபத்தில் வார்த்தை போர்தொடுக்க
கட்டியணைத்து இதழ் காயம் செய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


மோகத்தில் மூழ்குகையிலே
பருவ மோகத்தில் தேகம் தீயாய் சுடுகையிலே
கருமேகமென உருவெடுத்து மழையாய் நனைத்திட
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா

 
போ எனச் சொன்னாலும்
பொய்யன் என வசைபாடினாலும்
கள்வன் என நிந்தித்தாலும்
மனம் கல்லெனக் கடிந்துரைத்தாலும்
மறந்தேன் என மறைத்தாலும்
ஒரு கணம்
நான் அழைக்க மறுக்காது
மறு கணம்...
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ~~~


- வித்யாசன்

அவன்

அவன் என்பதால்
அவனால் நிகழ்ந்தது என்று
அறியாதவர் கூறிடலாம்
அவ்வியங்குதல்
அனைத்தும் அறிந்த
அவனால் அன்றோ ~~~


- வித்யாசன்

ஏதுமுண்டோ

என் எழுத்து என்று தனித்து
ஏதுமுண்டோ
நின்னகத்தே காதல் கொண்டே யாவும் பிறந்ததிங்கே
பின் தேடியும் பிரிவினைக் கிடைப்பதுண்டோ
தன்னகத்தென்று சொல்வது தகா தவறிங்கே
முன்னகத்து முகர்ந்து மூர்ச்சையாகுவதுண்டோ
பெண் மனது பித்தென்று மறைந்தாய் அறிந்திங்கே
எண்ணகத்தில் எனைவிடுத்து வேறு யாருமுண்டோ
விரைந்திங்கு நேர்கொண்டு சொல்லடா கண்ணா
வேதனை தாராது பேதையை தோளினில் தாங்கடா ~~~


- வித்யாசன்

எம் கண்ணா

சூதென்பது யாதென்பது
நானறியேன் மதுசூதனா
அது கவ்வினும் நின்னை
சுழலும் என்னைச் சூழாது
நிழலென நீங்காது இன்பக்
குழல் ஊதுவாய் எம் கண்ணா ~~~


- வித்யாசன்

அழியேன்

பெரும் பகலவனாய் எழுவேன்
ஒரு பொழுதும் பாழாய் அழியேன் ~~~


- வித்யாசன்

சுடு... சுடு...

பெருத்த பலமானவன்
பகுதறிவுப் பாவலன்
கனமற்றக் கலைஞன் ;

நிகழும் போரினிலே
ஒவ்வொரு குண்டாய்
ஒரு சேர உடைத்தான் ;

கையிலிருப்பதோ கடைசி...
நடுக்கமில்லை
சுடு... சுடு...

துளைக்கும் தோட்டாவில்
சத்தமற்றுச் சாகப்போவது
முன்னவன் போல்
ஓர் பாமரன்தான்

சுடு... சுடு...

- வித்யாசன்

கூண்டுக் கிளி

இரவில் குதிக்கும் விண்மீன் மழைத்துளி
மெல்ல விரிக்கும் குடையென நிலவொளி
குளிர் மூடி மறைக்கும் மேகம் நாண மொழி
எங்கும் கூட வருவதேன் கூடா கூண்டுக் கிளி ~~~



- வித்யாசன்

மடல் காகிதமாய்

வான் பார்த்த மழையாய்
நீ வந்தாய் சுகமாய்
இருள் சேர்த்த நிலவாய்
நீ இருந்தாய் துணையாய் ;

ரயில் ஜன்னலாய்
என் அருகினில் அமர்ந்தாய்
குளிர் போர்வையாய்
என் உடலினில் இணைந்தாய் ;

கடல் சங்கொலியாய்
காதினில் நிறைந்தாய்
மடல் காகிதமாய்
மனதினில் பதிந்தாய் ;

எனக்குள்ளே நான் இல்லையடி பெண்னே
தனக்குள்ளே பேசிடும் இன்பம் தந்தவள் நீதானே ~~~


- வித்யாசன்

நீள் கனவு

நிரந்தரமாய் நிறைந்திருக்கும் நினைவுகளில்
நீந்திடும் கயலாகையில் அலம்புவதில்லை நீள் கனவுகள் ~~~


- வித்யாசன்

பராசக்தியே

மேடென்று பள்ளமென்று பாராது வீசிடும் தென்றலாய்
நாளென்றும் பேதமையன்று நான் நடந்திட
கேடொன்றும் நிகழ்ந்திடா நன்மைக் கேட்டதும் கிட்டிடும்
நல்லதோர் பாதை வகுத்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

ஞாபக பொம்மை

என் நினைவுகளின் அலமாரியில்
நீயே நிரந்தர ஞாபக பொம்மை ~~~


- வித்யாசன்

காதல் கண்ணனுக்கு

அழகிய அதிகாலை தாள் பணிந்து
வாடா வண்ண மலர் கொய்து
விரல் படா இதழ் நாரெடுத்து
வாசம் மாறா சரம் தொடுத்து
கட்டிவைத்தேன் பா மாலை ஒன்று
அனுதினமும் கருத்தினில் சூடி ஆடி மகிழ்ந்திட
எம் காதல் கண்ணனுக்கு என்று ~~~


- வித்யாசன்