சனி, 7 நவம்பர், 2015

நல் ஞானம் கொடுத்தாய்

நல் ஞானம் கொடுத்தாய்
அதில் மானம் வைத்தாய்
சொல் ஈரம் நனைத்தாய்
பகை நடுங்கும் வீரம் விதைத்தாய்
ஏதுமில்லையென யாவும் அளித்தாய்
அது என்னது என்போரை தூற்றிப் பழித்தாய்
காயும் நிலவுடன் பெருங் காதல் வைத்தாய்
ஓடி ஆடும் கடலிடம் உழைப்பை உடுத்தாய்
மேகம் தொடும் மலையானபோதும் மேனியில் பச்சை வளர்த்தாய்
மேன்மை பல கண்டதாயினும் எங்கள் ஏழ்மையில் சிரித்தாய்
பாயும் நதி தந்து அதிலெதிரே மோதும் கயலானாய்
பாவையர் புருவமது விழியுமதுயென்று புரியவைத்தாய்
பேதமையற்று ஓர் வழி தன்னில் பிறப்பு வைத்தாய்
பின் ஏனதனில் பிரிவுவைத்து பித்தர்களாய் உலவ வைத்தாய்
பெண் மானம் காத்திடவே கரமதனில் பலம் வைத்தாய்
அதுவே காட்டு நரியென ரத்தம் ருசிக்க ஏன் காமம் கொடுத்தாய்
பார்த்து ரசிக்கவே யிங்கு பலயிருக்க பாவம் தனை புகுத்தாய்
நின் நோக்கத்திற்கு ஏற்றதாய் ஏன் ஒவ்வொன்றையும் படைத்தாய்
நல் ஆக்கமது மண்ணில் நிகழ்ந்திட தின ஊக்கமது தந்தாய்
பொய் அக்கறை காட்டிடாது மெய்யென தேன் மாரி பொழிந்தாய்
என் உள்ளிருந்து உலகதனை எண்ணி எண்ணி நொந்தாய்
அதற்கு உண்மை மறந்ததே இவ்வுலகம் என்றாய்
கூவும் குலாவும் இனங்களை மெல்லக் கொன்றாய்
அட கூறுகெட்டவனே நாளை கூடுவார் யாருமின்றி அழிவாய் என்றாய்
நாடும் நாமும் செழித்திட நல்லவை மட்டும் செய்வாய் என்றாய்
அதை நாடாது நன்றி மறந்திட்டு நடந்தால் நரகம்தான் என்றாய்
கூடாது கூடாது புதுமை பெருங்குற்றமாகும் மறப்பது நம் பழமை என்றாய்
மாறாது மாறாது வேளாண் வயல் வரப்பு மேன்மையென நின்றாய்
காணாதுபோன கூட்டுக் குடும்பத்தோடு எங்கள் உள்ளக் களியாட்டம் தொலைந்தாய்
ஆறாது ஓடிய இன்பபாலினிலே விசம் தனை கலந்தாய்
சுடர் ஒளி காற்றினிலும் குந்தகம் விளைய துணிந்தாய்
இந்நிலை நீண்டிட இனியது மாய்ந்திட நின்றதை நானும் பார்ப்பேனோ
தீமை கொன்றதனை நன்மை செய்வே அன்றி நான் விடுவேனோ~~~


- வித்யாசன்

வானளாவி மேவுதே கண்ணம்மா~~~

பேரன்பு வைத்தேன்
அதுவே உலகில் பெரிதென்று நினைத்தேன்
ஓர் நாளது பிரியுமென்பது அறியாது
ப்ரியங்களை புற்றாய் வளர்த்தேன்


எந்நிலையிலும் மறவேன் என்றுரைத்தேன்
எனை மீறியது வழி மாறிப் போகதென்று சுகித்தேன்
வானவெளியது பரந்ததென்று அறியாது கிளியினை இருதயக் கூட்டினில் அடைத்தேன்


நேர்வது எனதில்லை என்பது புரியாது நிகழ்ந்தது பேதமை
பாலென பார்த்தவை யாவுமே கள் என ஆனதே வேதனை
கோபமுள்ளது வீசவே காதல் மெல்லென கசந்ததே
வாழ்வே நீயின்றி என்றது நீங்கியே நீயாரோ நான் யாரோ என்றானதே


அங்கமது தீண்டியதும் மனமெங்கும் உலாவியதும் மாயையென்று ஆகியதே
மங்கள நாளதனில் துன்பமதை நின் ஞாபகங்கள் தந்ததே
சிந்தையிலே சிந்தியபடி பல காலம் உருண்டோடியதே
தேகமது தோய்திங்கு சடமாகினும் நாளும் நின் நேசமதைத் தேடுதே 


மாறிவரும் யாவையும் கடந்து மறந்திங்கே வாழ்வினும்
பொய் பேதமைத் தாண்டியே நம் மெய் அன்பு வானளாவி மேவுதே

கண்ணம்மா~~~

- வித்யாசன்

கண்ணபிரான் கால்பற்றுகிறது;

துளையெல்லாம் நா துழாவும் கோரப் பற்களாயின் குருதி சுவர் நிழலாய் படிகிறது;
வெறி பற்றிய விழியில் குட்டை பாவாடை அளவறியாது குத்திக்கிழிக்கும் வாளாகும் ஆண்குறி அலறல்களில் அபிசேகம் செய்கிறது;
எட்டி பார்க்கும் மொட்டின் மடு நசுக்கும் நகங்களின் வேகத்தில் வேதனை ஒலி பெண்பால் சுயமறுத்து பேச்சற்று மூர்ச்சையாகிறது;
நம்பிக்கையின் கூடாரங்களில் அம்மண வாசனை பிடிக்கும் மோப்ப நாய்களின் வாயில் ஒழுகும் மதநீரில் கண்ணீர் பிசுபசுப்பு கரைவதில்லை;
சிறகுமுளைக்கா பட்டாம் பூச்சிக் கூடொன்று வெந்நீரில் நூலாவதைபோல் வதை செய்யப்படும் வெற்றறைகளில் ஆடை கண்ணபிரான் கால்பற்றுகிறது;
கற்றுக் கொடுக்கும் பிரம்புகள் அங்கத்தின் மர்மங்களை கழற்றும் அந்தரங்கமாகையில் ஏடுகளின் எழுத்துக்கள் அழுகிறது;
சவங்களைப் புணரும் யுகங்களின் கைரேகைச் சாலையில் எதை போர்த்திக் கொண்டு கழுகின் மாடங்களைக் கடப்பது;
இப்படித்தான் பிஞ்சிலே பழுக்கின்றன யாருக்கும் தெரியாது நம் வீட்டுச் சின்னஞ்சிறு பொம்மைகள்~~~

** இந்து மதம் மதமற்றது 2 **



கல் மீது எனக்குள் எப்போதுமே ப்ரியம் வற்றுவதே இல்லை. ஒரு காலத்தில் கல்தான் எல்லாமே. அது ஆயுதம் முதல் ஆண்டவன் வரை. ஆனால் இன்று கல் கடவுளாக மட்டுமே இருக்கிறது.

கல் மனம் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் அது கடவுள். உண்மையும். என்னடா இப்படி சொல்கிறான் என்று எண்ணத் தேவையில்லை. உங்கள் மனதையே கேட்டு பாருங்கள் நமக்கு வெளிச்சம் கொடுப்பினும் எளிதில் உருகும் மெழுகை நேசிப்பதை விட அதைத் தாங்கும் மண்ணுக்கடியில் தூங்கும் கல்லறை மீதே காதல் கொள்கிறோம்.

இதை எளிமையாக விளக்கினால் இளகிய மனதுடையவர்களை காட்டிலும் கல் மனதுடையோரையே நாம் அதிகம் பேசுவது ஏசுவது சிந்திப்பது அவர் மனதில் இடம் பிடிப்பது என எல்லாமே அங்கு அதிகப்படியாய் நிகழும். கல் கடவுளாயிற்றே...

பூமியில் கடும் பஞ்சம் வந்தபோதும் இந்து மதத்தில் கடவுளுக்கு பஞ்சமில்லை. ஆலயம் சென்றால் அய்யோ என்று சுற்றோ சுற்று என்று என்னை பெற்றோர்கள் அழைத்துச் செல்வதை பார்த்து என்னடா கல்லுக்கா இப்படி என்று கடிந்து திட்டியதும். பின்னொரு நாளில் அந்த கல் முன்னே கண்கலங்கி அத்துன்பம் வெகு தூரம் சென்றதும் வேறு உண்மை...

கடவுள் எத்தனை உருவம் கொண்டாலும் கல் என்னவோ ஒன்றுதான். அது நிலத்திற்கு நிலம் மாறுபடினும் அனைத்து அடர் கல்லும் சிலை செய்ய உகந்ததே... இதிலும் சிறந்த கல் என்று ரகங்கள் உண்டு. அதற்குள் சென்றால் ஆராய்ச்சி அதிகப்படும். யாவருக்கும் தெரிந்தது கல் தானே...

சரி இந்த கல்லை வணங்க ஏன் நாளும் கோடிக் கணக்கான மக்கள் அலைகிறார்கள். பல கி.மீ தாண்டி பயணம் கொள்கிறார்கள். எதற்கு மாலை, தீ மிதி, தீ சட்டி, பொங்கல், மாவிளக்கு, மொட்டை, பூஜை, அபிசேகம், பட்டு சாத்துதல், வீதி உலா, சப்பரம், பலி கொடுத்தல் அப்பப்பா...இதுவெல்லாம் எதற்கு? ஏன் ? பதில் சொல்லா கல்லுக்கா குழம்பி இருந்திருக்கிறேன். ஆலயம் சென்றாலே இந்த கேள்விதான் என்னை ஆளும்....

மகிமை என்ற ஒரு சொல் உண்டு. அது இந்த கல்லுக்கு பொருந்துவதுண்டு. தஞ்சை கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அங்கிருக்கும் சிவலிங்கமும் அப்படி ஒரு காட்சியானது. மிகப் பெரியது. சிறிது காலம் தஞ்சையில் வசித்த நேரம் யாவும் ஆலயம் செல்லாத நாள் மிகக் குறைவு. அந்த ஆலயம் எனக்கு இன்றளவும் இறை பக்தியை நிறையச் செய்வதுண்டு. அது தஞ்சை பெரிய கோவில் அல்லவா...

கல் மிகிமை என்னதானென அதன் மீது லகிக்க அது கடவுளானது எனக்குள். நிறைய பேச ஆரம்பித்தேன் மற்றவரை போலவே. ஆனால் அது பேசவில்லை. நிறைய அழுதேன் அது உடனடியாக கண்ணீர் துடைக்கவில்லை. நிறைய சிரித்தேன் அறிவுரை வழங்கியது. நிறைய கடிந்தேன் என்மீது கோபம் கொள்ளவில்லை. போ என துரத்தினேன் தொடர்ந்து வந்தது. சீ வெறும் கல் என்றேன் கடவுளாகியது...

நம் மனதுக்கு எதுவெல்லாம் உகந்ததோ அதுவாக இக்கல் அமைவதே கடவுளாகக் காரணம். குறை நிறை எதுவாகினும் அதற்கு மறுப்பு கூறாமல் சம்மதம் சமாதானம் தருகிறது. அதனால் தான் கொலைகாரனும், கொள்ளைக்காரனும் ஆலயம் செல்கிறான். எவரிடமும் அது வாக்குவாதம் செய்வதில்லை. பலன் கேட்பதில்லை. நம் பலவீனத்தை சொல்லி பயம் காட்டுவதில்லை. மாறாக இருளிலும், இயலா நிலையிலும் பெரும் துணையாகவும், பேரொளியாகவும் விளங்குகிறது....

கல் எல்லாம் கடவுள் ஆகுமா? அப்படியாயின் காலில் மிதிபடுதல் எங்ஙனம் அதை குறிப்பிடுவது. அதுவும் கடவுள்தான். நமக்கு கைகள் உண்டு ஏனைய ஜீவ ராசிகளுக்கு அது இல்லை. அதற்கு கால்களே கை. அப்படித்தான் நம் பாதங்களும் கைக்கு ஒப்பாகும். அதனால்தான் பாதமிதியும் பகவானை தொழுதலுக்கு சமமாகும். சுருக்கமாக புரியும் படி சொன்னால் சிலர் காலடி பட்ட மண்ணை திருநீராக பூசிக் கொள்கிறோமே அப்படித்தான். ராமன் பாத ரட்சகை நாட்டை ஆண்டதும், கல் பாதம் பட்டு அகலிகை ஆனதும் தொழுவதே....

நாம் பார்ப்பது, தொடுவது, மிதிப்பது, நினைப்பது என கல் யாவும் கடவுளாகிறது. அது இந்து மாதத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. இது பொய் எனில் ஆலயம் சென்று கேள்~~~

- வித்யாசன்

** இந்து மதம் மதமற்றது **



மதம் சார்ந்து எதையும் என் மனம் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மதம் தான் ஒவ்வொரு மனிதனையும் பக்குவப்படுத்துகிறது. அவர்களது உள்ளங்களுக்கு ஒழுக்க ஆடைகளை கட்டி விடுகிறது.
மதம் தீவிரமாகும் போது மட்டுமே மதம்பிடித்த யானையாகி பலமான மரங்களையே சாய்த்து விடுகிறது. மும்மதங்கள் இந்தியாவில் உள்ளது. நான் இந்து மத்தத்தைச் சார்ந்தவன். கிறிஸ்துவ மத போதனைகள் எனக்கு போதை தரும் வார்த்தைகள். குரான் குறித்து பெரிதும் அறியாதவன். ஆயினும் முஸ்லீம் மத கட்டுப்பாடு என்னை கதி கலங்க வைத்துள்ளது.
எனக்கு கிறிஸ்தவ நட்புகளே அதிகம். சர்ச் செல்லும் பழக்கம் உண்டு. இவர்களின் மதக் கோட்பாடும் பழகும் விதமும் ஒத்தே அமைந்த ஒன்று. முஸ்லிம் நட்பு மிக சொற்பமே. தாமரை இலை தண்ணீர்போல். எனக்கு நோன்பு கஞ்சி மீது பெரும் ஆசை என் அம்மா அருகிலிருக்கும் பள்ளிவாசல் வழங்கப்படும் அதனை பிறர் மூலம் வாங்கித் தருவார்கள். இன்புற்று ரசித்து பருகியதுண்டு. என் இல்லத்தின் அருகில் இரு பள்ளிவாசல் தினமும் விழித்தால் தென்படுவதுண்டு. தொழுது பழக்கமில்லை. ஆசைஉண்டு.
ஆலய மணியாக இதயத்தில் ஒலித்துக் கொண்டிருப்பது இந்து மதம். என் அப்பா முருக பக்தர். சதா முருகனையே வேண்டி வாழ்வில் நிறை கண்டவர். பால்ய வயதிலிருந்தே அதை பார்த்தே முருகன் மீது முழு அன்பானேன். அப்பாவிற்கு மூட பழக்கம் முழு நம்பிக்கை அற்றவர் ஒரு நாளும் மாலை அணிதல், உணவருந்தாமல் இருத்தல் வேல் குத்துதல் தீ மிதித்தல் என எதன்மீதும் பற்று அற்றவர். மென்மையான பக்தி.
இதுவெல்லாம் எனை இந்து மதத்தின் மீது சவாரி செய்ய வைக்கவில்லை இதை எல்லாம் தாண்டி நிறைய எனக்கு நேர்ந்ததே அதன் மீதான பெரும் ப்ரியம்.
எனக்கு திருநீர் சந்தனம் குங்குமம் சவ்வாது பூக்கள் ஊதுபத்தி இவைகளென்றால் நாளெல்லாம் அதன் நறுமணத்தில் மயங்கியிருப்பேன். இது அத்தனையும் இந்து ஆலயத்தில் உண்டு...
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்த அனுபவம் மட்டுமின்றி அதன் உண்மைகள் பிடித்தமைக்கு காரணம். நிறைய கற்று கொடுக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும். எப்படி பழக வேண்டும் என்பதை. ஏன் என்றால் சிலருக்கு எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. சமீபத்தில் அப்படி ஒரு அழைப்பு. அது வளர்பாகவும் பழக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இந்து மதம் அதை எந்நேரத்திலும் பண்பினை அறிவுறுத்த மறுப்பதில்லை.
இந்து மதத்தின் பேரின்பதை ஒருமுறையில் கூறிவிட முடியாது. அது அன்பின் சந்நிதானம். நிதானம். பிரதானமாகும். ஒரே மூச்சில் சொல்லிடலாகும்... படித்திட முடியாது... அது கடலை குடித்திடும் முயற்சியாகும்~~~
-தொடரும்....

- வித்யாசன்

சாய்த்திடு இன்று

பயம் கொன்று
பரசுராமனென்று
சாதி , மதங்களை வெட்டிச் சாய்த்திடு இன்று ~~~


- வித்யாசன்

தீ மூட்டுகிறாய்

மௌனங்களில் தீ மூட்டுகிறாய்...
வார்த்தைகள் ஒவ்வொன்றாக உடன்கட்டை ஏறுகிறது ;

உனக்காக நேந்துவிட்ட சொற்களில் ஆசை ஜடை ஜடையாய் ...
மழிப்பதற்கு இச்ஜென்மம் போதாது ;

குறுக்கு நெடுக்கு கோடுகளில் உனக்கான குடிசை கட்டிவைக்கின்றேன் ...
நீ வசிக்க வேண்டாம் வாசித்திடு கோயிலாகும் ;

நகர முடியாத சவப்பெட்டியாக எழுத்துக்கள் ஆனால் என்ன ...
நீ எப்போது திறந்து பார்த்தாலும் உயிர்ப்புடனிருக்கும் ;

ம்....
உன்னிதழுக்குத் தெரியாது உச்சரிக்கும் போதெல்லாம் எச்சில்பட்டு உடம்பெல்லாம் வெட்கத்தில் தொப்பெலாக நனையுமென்பது~~~

- வித்யாசன்

ஆயர்பாடி அழகா

ஆயர்பாடி அழகா
மாயம் புரியும் மாதவா
பிருந்தாவனம் தேடுகிறது வா வா...

கங்கை கரை மன்னா
காதல் கள்வன் கண்ணா
கோகுலம் அழைக்கிறது வா வா....

நின் புன்னகை கொண்டு
மனப் புண்ணதனைக் கொன்று
என் எண்ணம் மீது ஏறி நின்று குழல் ஊத வா வா~~~


- வித்யாசன்

** அனுபவ ஆசான் 2 **


சில விசயங்களை என்னால் தூக்கி எறிய இயலவில்லை. வெள்ளை ஆடையில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு போன்றது. அது சித்ரவதை செய்தபோதும் அதனை சிரத்தையுடன் சிந்திக்கிறேன். அதற்காக பலரையும் சீறியிருக்கின்றேன்.
இது தொட்டில் பழக்கம் அல்ல இடையில் ஒட்டியதுதான். மனம் ஆலயம் என்றபோதும் அங்கும் நூலாம்படை இருக்கத்தானே செய்யும். அடிக்கடி ஒட்டடை அடித்தாலும் மீண்டும் மீண்டும் வளை பின்னல் எழும். அப்படித்தான் நினைவின் பல் சக்கரத்தில் சிக்குகிறது ஞாபகங்கள்.
எதை நான் மறக்க வேண்டும் நினைக்க கூடாது என்று எண்ணுகிறேனோ அது ஒரு காலத்தில் மறைந்தாலும் முழுவதுமாக நீங்குவதில்லை அது அவ்வப்போது வதைக்காமல் விடுவதில்லை. இதற்கு காரணம் அதுவெல்லாம் மனத்தீங்கான செயல்.
தவறு அற்ற வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அப்படி வாழ்வதும் பெரும் தவறாகும். சில தவறை உணர்ந்தால் ஒழிய அதை பிறர்க்கு எடுத்து கூற இயலாது. சிலவற்றை நாம் அனுபவமின்றி உணர்ந்து அதற்கு தக நடந்தால் துன்பம் தூக்கிலிடாது. என்ன செய்வது பலவும் எனக்கு அனுபவமாகவே நிகழ்ந்து விடுகிறது.
இடுகாட்டில் எரியும் உடலுக்காக அழுகும் உயிரைப் போல் முடிந்ததை எண்ணியே புலம்பும் பலவீனமான மனதை எப்படி பலப்படுத்தி வேறு எண்ணங்களை உடுத்தி பார்த்தாலும் கடைசியில் அழுதே ஆறுதல் அடையும். அது போதாது என்று மீண்டும் அதே சந்தர்ப்பம் இனி வாய்க்காதா என்று ஏங்கிடும்.
எல்லாம் இருந்தும் அதன் கூட குறையும் இருக்கும். அது அவரவர் மனங்களை பொறுத்து மாறியிருக்கும். கிடைக்காததை பெறவே பெரும் தவம் புரியும் மனதில் எழும் ஆசை புற்றின் நீளத்தை குறைக்கவும் முடியாது. அதனை புதைக்கவும் முடியாது.
ஏன் முடியாது முடியும் அதற்கு தன்னை முழுவதுமாக நம்பினால் போதும் என்றால் முடியும். ஆயினும் தவறியவை தரும் வலியை தாங்கவே அது நேரும். வாழ்வின் பிரதானமாக அனுபவம் ஆட்கொள்ளும் போதெல்லாம் அதை கடிவதில்லை அதற்கு கடிவாளம் இடுவதுமில்லை. அலையும் மனக்குதிரை ஓய்வதுமில்லை ....
மனம் ஒரு கடல் என்பேன்... அதில் நாம் எதைத் தூக்கி எறிந்து மூழ்கடிக்க நினைத்தாலும். அது ஓர் நாள் அலையென நினைவதை கரை சேர்த்துவிடும்~~~

- வித்யாசன்

என்ன தவம் யான் செய்தேன்

இரு புருவம் நிமிர்த்தி
வில் உயர்த்தி
விரல் அழுத்தி
விடும் அம்பின்
அவ்வழகு கண்டு
இது போதாது போதாது
போர்க்களம் மறந்தேன்
ராமா....
என்ன தவம் யான் செய்தேன்
ராவணனாய் அவதரிக்க
நினது கரத்தால் வதம் முடிக்க~~~


- வித்யாசன்

யாழினை நீ இசைக்க

யாழினை நீ இசைக்க
யாவையும் நான் மறக்க
நேர்வது ஏனோடி;
காற்றென நீயிருக்க
அதில் கலந்து நானிருக்க
காரணம் ஏனோடி;
அன்றது நிகழ்ந்தது
இன்றது நடந்ததாய்
ஞாபகம் வருவதேனடி;
ஆயிரம் வாதங்கள் ஆயினும் உள்ளன்பு குறையவில்லை பொங்குவதேனடி;
தோழி...
இதுதானோ உண்மைக் காதல்
உண்மை சொல்லடி... தோழி~~~


- வித்யாசன்

நின் அருளது வேண்டும் தாயே

நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே;


மலையது துயரது நேரிடினும்
அது மழையென தூரிட துணை புரிவாய்;
நிலையது கவலை ஆயினுமே
அது களைந்திடும் மேகமென ஆகிட தயை புரிவாய்;
கலைமகள் மலரதனில் வீற்று வீணையது மீட்டிடவே;
நிதமதை காண்பதுவே உளமது தெளிவது நாளும் அடைந்திடுமே;


பொருளது அழிவது புகும் ஆசை தந்திடாது காப்பாய்;
வெறும் சிலையிது என்றாகிடாது விழியதனில் உயிராவாய்;
மலைமகள் நிலவென சுடர் ஒளி ஆகையிலே;
மனமது மயங்கிடாது மதியது மலர்ந்திடுதே;


பெரு வானமெனவே ஞானம் தருவாய்;
நல் கானமது நாவினில் வர வரமருள்வாய்;
கோலமகள் எழில் முகம் பார்க்கையிலே;
எழும் மனக்கோபங்கள் அனைந்திடுதே; 


நின் திருவுரு அழகினைக் காண்கையிலே;
மனவுருகுது மலரடி தாழ் பணிந்திடவே;
மலரிதழ் புன்னகை பூத்திடவே;
பெரும் மனக்குழப்பங்கள் மறுகணம் நீங்கிடுதே;


அலைமகள் நீங்கிடா தொடர்ந்திடும் பேரன்பே;
இவ் அண்டத்தில் அடைக்கலமானேன் நின் திருவடி தினமே;

நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே~~~


- வித்யாசன்

அனுபவம்

அழுகிடும் பழமெனினும் அதற்குரித்த நாளில் இனித்தே இருந்திடக்கூடும்
அதுவன்றோ வாழ்வின் அனுபவம் ~~~


- வித்யாசன்

கண்ணன் வந்தான் - கண்கள் திறந்தான் ;

கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;


மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ;

பின்னல் ஜடையை பிடித்து இழுத்தான்
யாரென கேட்கும் முன் இதழினை நனைத்தான் ;


கன்னம் சிவக்க வெட்கம் பறித்தான்
காரணம் அறியேன் காவலை மறந்தேன் ;

பின்னிடை பிடித்து தன்னுடன் அனைத்தான்
மாரினில் சாய்த்து மர்மங்கள் அவிழ்த்தான் ;


மெல்லனெ காற்றாய் மேனி படர்ந்தான்
சொல்லொன்னோ சுகம்தனை சொல்லிக் கொடுத்தான் ;

சிறு பிள்ளைபோலே எனை அள்ளி எடுத்தான்
முன்னிரு மலையினில் மூழ்கா முத்தெடுத்தான் ;


எல்லையில்லாது எனைக் கொள்ளை அடித்தான்
ஏனெனக் கேட்காது தானாக கொடுக்க வைத்தான் ;

கலையும் மேகமென மோகம் களைத்தான்
கைகள் பற்றியே கவலை போக்கினான் ;


புல்லாங்குழல் எடுத்து புது ராகம் இசைத்தான்
பொழுதது போகவே நிலவதை மறைத்தான் ;

என் முகம் பார்த்தே ஏதேதோ பேசினான்
மடியினில் சேர்த்து உறங்க வைத்தான்
கண் விழித்து பார்த்தேன் காணாது தவித்தேன்
என் விழி ஓரம் நீர் வர சிரித்தே ரசித்தான் ;


ஒரு துளி விழுந்திட ஓடோடி வந்தான்
ஆறென அழுதிட ஆறுதல் தந்தான்
பாரென நீரது துடைத்து புன்னகை பொழிந்தான்
நீயே என் ராதையென நீங்காது தொடர்ந்தான்


கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;
மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ~~~


- வித்யாசன்

கண்கள் அங்கே

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே...

கோடி அழகு கோபாலன் என்பேன்
நிதமும் தேடியே நிலையாய் அகலியாவேன்
பிருந்தாவனத்தில் பூக்களாய் பூப்பேன்
கங்கை நதியினில் இரு கரையாவேன்
என்னை.....
கண்ணன் வந்து கைத்தலம் பற்றும் வரை கன்னியாக காத்திருப்பேன்....

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே ~~~


- வித்யாசன்

பழித்ததாம்

கல் மனமென்று ராமனை பழித்ததாம்
எல்லா கல்லும் தன்னை அகலியென்று எண்ணிக் கொண்டு ~~~


- வித்யாசன்

ஆப்பிள் நிறம்

நம் பேய் ப்ரிய பற்களில்
ஆதாம் ஏவாள் ஆப்பிள் நிறம் வழிகிறது~~~


- வித்யாசன்

கண்ணா....

புல்லாங்குழல் இசை கேட்குதடா
கண்ணா....
புல்லின் பனித்துளியெல்லாம் துளையாகி உன் இதழ் கேட்குதடா
கண்ணா....
பொல்லாத இரவென்னைக் கொல்லுதடா
கண்ணா...
நின் பெயர் சொல்லாது விடியும் என் பொழுதேதடா
கண்ணா....
நான் முன்னே வந்தால் கற்சிலையாகி நிற்பாயோடா
கண்ணா....
காதலை மொழிந்தாலும் கள்வனென ஒளிவாயாடா
கண்ணா...

வா.... வா....
கண்ணா...
மயிலிறகு
மன்னா....


- வித்யாசன்

ராமா .....

வில் ஒன்று
அம்பு கொண்டு
சூரன் கொன்று
எதிரியை வீழ்த்தினோமென்று
கர்வம் கொள்ளாதே
ராமா .....

மறந்திடாதே கண்ணயர்ந்து
இலங்கேஸ்வரன் பெயர் கொண்டு
ராவணன் மீதமுண்டு
பெருகும் வீரமுண்டு
பயமின்றி பத்துதலை கண்டு
எதிரிலே போரிட்டு நின்று
வெல்லும் பலமுண்டு ?

கேட்டு வா காட்டில் வாழும் ராமனை இன்று ~~~

- வித்யாசன்

சிறகுதிர்க்க

மதம் பார்ப்பதில்லை மாடங்களில் கூடுகட்ட
அங்கேயும் மனித அச்சமுண்டு சிறகுதிர்க்க ~~~



- வித்யாசன்

ஜங்ஃபுட்

உழுபவனுகில்லை நிலம்
வலுத்தவனுக்கு விளைச்சல்
அழ மறுக்கும் வானம்
விசமாகும் விவசாயம்
எதிர்காலம் என்னவாகும் ?
ஜங்ஃபுட் உலகமாகும் ~~~


- வித்யாசன்

ஞாபகங்கள்

இரவுப் படியில் அமர்ந்து
வெள்ளிக் குளத்தில்
விண்மீன் கல்லெறிந்து ரசிக்கின்றேன்
எழும் வளைவுகள் எங்கும் நின் நினைவுகள் ததும்பிட


ஞாபகங்கள் வெளிச்சமாகிறது ~~~

- வித்யாசன்

எங்கே கண்ணா

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா...

நெஞ்சமெனும் ஆலயத்தில் சாந்தியில்லை நீ வாராய் கண்ணா
கெஞ்சவிட்டு தள்ளி நில்லாது ஓடி வாராய் கண்ணா
மன சஞ்சலங்கள் தீர்த்து வைக்க வாராய் கண்ணா
நின் சன்னதியை சரண்டைந்தேன் பாராய் கண்ணா...

எங்கும் எதிலும் நீயே நிறைந்தாய் எந்தன் கண்ணா
என் எண்ணம் யாவிலும் கலந்தாய் நீங்கா கண்ணா
கண்ணிரண்டும் நீராகி வழியுதடா விரல் தாராய் கண்ணா
மண்ணில் இந்த பிறவி போதுமடா தீர்க்க வாராய் கண்ணா....

பொங்கும் சோகம் பொய்யாக்கிடு ராதை கண்ணா
எங்கும் ஏழை இல்லை என்றாக்கிடு யசோதை கண்ணா
அங்கமெங்கும் துடிக்கிறது அனைத்திட வாடா கண்ணா
எனக்கு நீயின்றி ஆறுதல் கூற வேறு யாறுமில்லையடா கண்ணா...

கண்ணா.... கண்ணா....
கண் திறவாய் கண்ணா...

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா ~~~


- வித்யாசன்

சுதந்திரமற்ற

சுதந்திரமற்ற வாழ்க்கையடா
இங்கே யாவரும் சூழ்நிலைக் கைதியடா
பணம் மட்டும் யாவையும் ஆளுதடா
அதுயில்லாது போனால் உயிரிருந்தும் பிணமடா
குணம் கெட்டு குறுக்கு வழியில் போகுதடா
இங்கே தரம் கெட்ட மனிதருக்கே உலகம் தலைப்பாகை அணியுதடா
நிறம் மாறும் மாந்தர் மனதினில் நீதியில்லையடா
ஏழையின் ஆசைக்கு எந்நாளும் பஞ்சமில்லையடா ~~~


- வித்யாசன்

அலைவரிசை

பைட்டுகளில் துவங்கி
ஜிஹாபைட்டாக மாறி
ஃபைபர் ஆப்டிக்கல்லை தின்று
வைஃபை வலம் வந்து
கேபி, எம்பி, ஜிபி கடந்து
அணு அணுவாய் சிதைந்து
அதனடியில் நாமிருவரும்
ஆதாம் ஏவாளாய் வாழ அழைப்பு விடுக்கிறது
அகண்ட அலைவரிசை ~~~


- வித்யாசன்

நித்திரை

உனக்கும் எனக்குமான ப்ரியத்தை அளக்கும் மௌனத்தை இடைவெளியில்லாது கட்டிக்கொண்டு கதை பேசி முகம் பார்க்கிறது இமை மூடிய நித்திரை ~~~

- வித்யாசன்

கண்ணனிடம் கேட்டேன்

கண்ணனிடம் கேட்டேன்
கண் கலங்கி நின்றேன்
என்னருகில் வந்தான்
என்னவென்று கேட்டான்

மனப் புண்ணதனை சொன்னேன்
பதிலறியாது பயந்தேன்
விண்ணதிரச் சிரித்தான்
மறு கணம் வேதனைகள் தீர்த்தான்
இவனை என்னவென்று சொல்வேன்
கைக் குழந்தையென தூக்கி கொஞ்சிடுவேன் ~~~


- வித்யாசன்

இல்லாமல்

இல்லாததை கேட்கும் இதயத்தை இல்லாமல் செய்தால் என்ன


- வித்யாசன்

சிலுவை

முள்
ஆணி
சாட்டை
சிலுவை
சாத்தான்
இவைகளுக்கு மட்டுமல்ல
நம் அனைவருக்கும்
பாவ மன்னிப்பு
முத்தங்களை பருகத் தருகிறார்
கர்த்தர் அங்கியிலிருந்து ஒழுகும் குருதி இதழில்

ஆமென் ~~~

- வித்யாசன்

ஆமென்

வேண்டுதலின் கண்ணீர் தேவனவனின் ரத்த துளியில் பரிசுத்தமாகி பாவ ஆணிகளில் படிந்திருக்கும் துயரம் பிரார்த்தனை சிலுவையில் நீங்கி வெளிப்படுதல் ஒளி வெப்பமல்ல பகிர்ந்தளிக்கும் ஊழிய அப்பமாகும் ....
ஆமென் ~~~

- வித்யாசன்

ஈர பிசுபிசுப்பில்

வார்த்தைகளின் வழித்தடங்களில் மௌனம் காத்திருக்கும் பிழைகளற்ற எழுத்துகளில் ப்ரியம் பிரகாசிக்கிறது பின்னிரவில் முன்னம் சொன்ன இதழ் மொழியின் ஈர பிசுபிசுப்பில் ~~~

- வித்யாசன்

அன்பது ஊறிடுமோ

சொல்லது வலுவற்றுச் சிதறலாகுமோ
நேர்மை இல்லாது நேயம் தோய்ந்து குன்றலாகுமோ
வில் எடுத்தவரெல்லாம் வீரன் ராமனாகுமோ
வீழ்வதனால் நதி நீரது உடைந்து உருக்குலையுமோ
ஏடெடுத்து பயில்வதனால் நினைவில் ஞானம் ஏறுமோ

வண்டு துளையிட்ட யாவும் புல்லாங்குழல் ஆகுமோ
நல் விசமுள்ள நாகமது தீண்டினால் நன்மை விளையுமோ
நாம் நம்புவோர் என்றும் நமக்குரியர் என்றாகிடுமோ
சில்லறை இல்லாதோரை கல்லறைதான் சேர்த்திடுமோ
சீரது நாளும் பாரினில் நிகழ்ந்தால் சிறுமை நெருங்கிடுமோ
மாதர் யாவரும் தம் உயிரென ஓம்பினால் ஒழுக்கம் ஒழுகுமோ
மெய்யது திரியா நாவினில் பொய்யது நிஜமென நின்றிடலாகுமோ
கையது கற்றது போதுமாயின் அது பெருங்கடலை கடந்திடலாகுமோ
ஐய்யமது அழிந்தே போயின் அந்நெஞ்சினில் அன்பது ஊறிடுமோ
இறப்பிங்கு இல்லாது இருப்பின் அடுத்த பிறப்பிங்கு ஆனந்தமாகுமோ ~~~


- வித்யாசன்

அ..... ஃ

அன்பெனப் பார்த்தாய்
ஆசையது தந்தாய்
இன்பமது இதழில்

ஈரமற்ற முத்தம் கொடுத்தாய்
உண்மை நேசம் மறைத்தாய்
ஊமையாகி நடித்தாய்
எண்ணம் யாவும் நிறைத்தாய்
ஏளனமாய் நகைத்தாய்
ஐம்புலனும் கலந்தென்னை
ஒன்றாக்கி கவிதை பொழிந்தாய்
ஓயாது காதல் அலையில்
அவ்வை மொழியாய் இனித்தாய்
அக்கென்ற முப்புள்ளியும் எழுத்தென தமிழே நீ மட்டும் உரைத்தாய் ~~~


- வித்யாசன்

அதிகாலை

அதிகாலை சூரியன் அனல் தேனடையாகிட
சிறகுள்ள தேனீக்கள் மொய்குதே
சிறு காம்பு பூக்கள் தேடியே ~~~



- வித்யாசன்

மழை

அட்டணமிட்டு அமர்ந்திருக்கும் கிளையின் மீது அம்மணமாய் ஆடும் இலையின் வளைவில் சறுக்கி விளையாடி மகிழ்கிறது மழை~~~


- வித்யாசன்

வெண் தாமரை தாயே

வெண் தாமரை தாயே அருள்வாயே
விண் யாவுமே நீயே நிறைந்தாயே
வீணையின் ஒலி நீயே
மெய் ஞானம் தருவாயே
என் நாவினில் வீற்றிருக்கும் கலை மகளே
நாளெல்லாம் தொழுதேன் நின் பாதம் பணிந்தே ...


பேரெழில் புன்னகை சிந்திடுவாய் - ஒன்றென
பேதமை நீக்கி போதனை செய்திடுவாய்
கூர் விழி பார்வையிலே - நித்தம்
நேர் வழி பாதை காட்டிடுவாய்
நல் ஓசையின் வடிவுடையாள்
மேகமதனை உடுத்த சிறு இடையாள்
தேனழகு மலர் மகளே
நின் தேகமது மென் சுடர் நிலவே...


பேரானந்தம் நெஞ்சம் கொள்கிறதே
நின் பெயர் சொல்லி சிந்தை மகிழ்கிறதே
வேறென்ன யிங்கு எனக்கின்பம்
எந்நேரமும் நின் திருமுகம் காணும் வரம் வேண்டும்
வானமும், வையமும் பெரும் ஏடாகும்
நின் வடிவின் அசைவதுவே அழியா எழுத்தாகும்
நானென ஏதுமில்லை நீயெனத் தந்தாயே
நான்முகன் தந்தையெனில் நீயென் தாயே ....


கோ மகன் நானில்லை ஆயினும் குறையில்லை
நீ மனக் கொலுவினில் வீற்றிருப்பதனால் துயரில்லை
தானென மனப் புண் வந்தபோதும் நிலைப்பதில்லை
தாவிடும் நீராய் பண் இசைப்பது நின் கருணை
ஊன் உயிர் உனையன்றி உருகுதல் வேறொன்றிலில்லை
தானெனும் அகந்தையிடம் தாள் பணிவதில்லை


தந்தனத் தாள லயம் தரும் சுரம் நீயே

சந்தங்களின் சங்கீத சங்கதி சரசுவதியே

- வித்யாசன்

செல்லம்மா

உன்னை நானறியேன்
என்னை நீயறிந்த காதலென்ன சொல்லம்மா
கண்ணை இமை மறப்பதாய் நானிருப்பவன் செல்லம்மா
நீ காணும் யாவிலும் நானிருப்பதென்ன சொல்லம்மா
எங்கும் பொய்மை வீற்றிருக்குதடி செல்லம்மா
என்னில் உண்மை அன்பு வைப்பது ஏன் சொல்லம்மா ...

செல்லம்மா

ஓடும் மேகமாய் என் வாழ்வது போகுதடி செல்லம்மா
அதில் வானமாய் உடன் நீ வருவதென்னடி சொல்லம்மா
வெறும் தேகமிது தீயினில் வேகுமடி செல்லம்மா
வெந்தபின்னும் சாம்பலாய் நானிருப்பேனெனச் சொன்னதேன் சொல்லம்மா
காத்திரமில்லாதது என் காதலடி செல்லம்மா
நீ காலமெல்லாம் என் காலடியில் கிடப்பதேன் சொல்லம்மா....

கண்ணீர் மாத்திரம் நிறைந்த பாதையடி செல்லம்மா
அதில் தனந்தனியாய் உடன் துள்ளிவர துணிந்ததேன் சொல்லம்மா
வேதனை வேரென நீளும் வேளையடி செல்லம்மா
வேறென ஆகிடலாகாது வேண்டுமென வேண்டுவதேன் சொல்லம்மா
ஆண்டு பல இங்கு யாரும் ஆள்வதில்லை செல்லம்மா
ஆயினும் வேண்டும் உடன்வர வாழ்வெல்லாம் வரம் கேட்பதேன் சொல்லம்மா....

கையில் ஏதுமில்லை கானகன் செல்லம்மா
என் காதல் ஒன்றே போதுமென்று காதினில் சொல்வதேன் சொல்லம்மா
தேவை ஏதும் பூர்த்தியாகிடாது செல்லம்மா
அது ஏதும் தேவையில்லை சேவை செய்ய காத்திருப்பதேன் சொல்லம்மா
ஆசை யாவிலும் ஆடையில்லை அம்மணம் செல்லம்மா
பாசமதில் ஆலயம் கண்டேனென கை தொழுவதேன் சொல்லம்மா
நேசமது நிலைமாறும் பொருள் இல்லையடி செல்லம்மா
நின் நேயமதில் என் நெஞ்சிழந்ததேன் சொல்லம்மா...
எந்தன் செல்லம்மா ~~~

- வித்யாசன்

தீ

என் வெறுமை விறகினை மூட்டி தீ வைத்தேன்
பற்றிக் கொண்டது நாற்புறமும் நம் ஞாபககாடு ~~~


- வித்யாசன்

இதுதான் சுதந்திரமா

இதுதான் சுதந்திரமா
என் இதயம் கலங்குதம்மா
நேர்மை எரியுதம்மா
என் நெஞ்சம் எரிமலை ஆகுதம்மா
பொல்லாதோர் நிறைந்த பூமியம்மா
போகும் வழியெங்கும் பேதமை பள்ளம் உள்ளதம்மா


இல்லார்க்குச் சட்டம் இரும்பானது
அதுவே செல்வம் உள்ளோர்க்குத் துரும்பானது
எல்லோருக்கும் பொதுவென்பது பொய்யானது
பொய்யர்க்கே சுழலும் பூமி மெய்யானது 


கற்றறிந்த கள்வர் கூட்டத்திலே கேட்டிட லாகுமோ நியாயத்தையே
கற்பிழந்த கயமை பார்வையிலே கண்டிட லாகுமோ கண்ணியத்தையே
வெறும் பேச்சுக்கள் மட்டுமே இங்கு தீர்வதில்லை பெண்ணடிமை
பெரும் மோகத்துலே சிறு பூக்களுக்கும் பாதுகாப்பில்லை 


ஆண்மை மூர்க்கத்திலே ஆதிக்க நோக்கத்திலே அறமிங்கே அழிகிறதே
அதிகார வர்க்கத்திலே
ஆணவ மலத்தினிலே
அஞ்சாமை அடங்காதே 

 
நரிகள் நடமாடும் நாடானது
குயில்கள் அழிந்த காடானது
அடிமைச் சங்கிலி படரும் கொடியானது
ஆலமர விழுதென சாதிகள் வேர் தாங்குது 


எங்கும் கொடுமை நாகமென படமாடுது
ஏனெனக் கேட்டிட நாக்குகள் நடுங்குது
கொன்று குவித்திடும் குணம் நாடாளுது - உண்மை
கொஞ்சமும் இல்லை இதை எப்படிச் சுதந்திர நாடென்பது ~~~


- வித்யாசன்

தனல்

விழிகளுக்குள் தனல் கொதிக்கையில் உறக்கம் எப்படி உயிர்ப்பிக்கும்
பொய்களுக்கான மேடையில் உண்மை தூக்கிலிடப்பட்ட துயரம் துப்பாக்கிகளை துடைத்து வைக்கச் சொல்கிறது
நம்பிக்கை பாத்திரத்தின் ஓட்டையினில் ஒழுகிய எண்ணற்ற கண்ணீர் துளிகளில் இதுவும் ஒன்று
நியாயங்களுக்கான கோப்பையில் விசம் நிரப்பி நீதி கேட்பது விசாரணையின் விலாஎலும்பில் மதமதப்பு மட்டுமே மிஞ்சிடும்
அதிகாரத்தின் நுனியில் அவமான எழுத்துக்கள் எந்த கோப்பிலும் பதிவிடப்படுவதில்லை அது அனாதையாக ஆதாரமற்று மூடப்படுகிறது
எல்லாம் கனவாகிடும் என்ற காரணமோ என்னமோ களவுகள் காக்கப்படுகிறது அதி நுணுக்கமாய்
இன்னும் சீலையின் கேள்விகளுக்கு பலியாக காத்திருப்பது சீதைகளின் கழுத்து மட்டுமே ~~~

- வித்யாசன்

சுதந்திரக் காடு அழிந்து

என் சுதந்திரக் காடு அழிந்து
அடுக்குமாடிச் சுவராகையில் எங்ஙகனம்
அமர்ந்து அம்மணம் மறந்து
பறக்கச் சிறகு விரிப்பது ~~~


- வித்யாசன்

கருவறை கோலமிது

கருவறையில் துவங்கிய
கண்விழிக்கையில் காண்பதில்லை நல் ஞானமது
நாளும் வளர்வதில் வேறில்லை பிரிவில்லாது
கருத்தது புரிகையில் கவலையும் கை ரேகையாகுது
பருவம் பூக்கையில் காதல் தேன் சிந்துது
அது கைகூடாது என்கையில் தேனீயாய் கொட்டுது
வருத்தம் மறைந்தே புது மண வாசல் திறக்குது
காமம் கருத்தறித்து கடன்காரனாய் மறு ஜென்மம் ஆகுது
பொருத்தம் இல்லையோ என்று மனமது புலம்புது
எடுத்ததற்கு எல்லாம் கோபம் பொங்குது
குடும்ப பாரம் சுமக்கையில் கழுதையே மேல் எனத் தோனுது
அடுத்தவன் சிரிப்பினில் நம் அடி வயிறு எரியுது
எண்ணியது ஈடேற மனம் என்னென்னமோ நினைக்குது
விதைத்தவன் இருக்கையில் அதை சொந்தமென
ஆக்கிக் கொள்ள வெறுமன வந்தவன் நெஞ்சமது துடிக்குது
முதலில் அடிக் கரும்பென யாவும் இனிக்குது
அதுவே கடந்த பின் முற்றிய வேப்பிலையாய் கசக்குது
நல்லவன் என்று தனைக் காட்டிட
நாளெல்லாம் பொதுவினில் தலை நடிக்குது
யாவரையும் நம்பிட முடியாது நயவஞ்சகரோ என்று
அஞ்சியே நாவது பல சொல் மறைக்குது
கஞ்சிக்கு வழியில்லாது நிலை போயினும்
பிறரைக் அண்டியே சுக வாழ்வது தேடுது
மண்டியிட்டு எவர் முன் நிற்பதில்லை எனும்
மாய வார்த்தையில் மர்மத் தேவை இருக்குது
அள்ளி வீசும் காசுகளுக்கே எந்நாளும் கூட்டம் கூடுது
அது அழகென்றும், அழுகலென்றும் வசனம் பேசுது
தேவைக்கு யாவரையும் பழகிடுதல் முறையாகுது
தேவனுக்கும் வல்லோன் வருகையே பெருமையாகுது
கெட்டென நல்லென மொத்தமும் அறிந்தவன் நானெனும்
மெத்தன நடையது சக்தியின் வாள் உடையது
கற்றென அனைத்தும் கரைத்தே குடித்தேன்
என்முன்னே சற்றும் நிற்க எவர்க்கும் தகுதி ஆகாது
முற்றும் உணர்ந்த முனிவரெல்லாம்
பற்று துறப்பதொன்றே கற்றுணர்ந்தது - அறியாது
துன்பம் பட்டும் உணரா பக்குவமற்ற நிலையது
கெட்டே போன பின் கேள்விக் குறியாய் தவிக்குது
விட்டே கொடுக்க இயலாது
விலகிச்செல் உலகம் என்னது
எதையும் தொட்டே பார்க்க இளமை துள்ளுது
ஏமாற்றம் அடைந்த பின் விதி என விம்முது
பட்டென மின்னிடும் தேயா வாழ்வது
மேனி பட்டே சுருங்கி வயதாகிடும் பொழுது
விடும் மூச்சும் மலையேறும் பாரமாகிடுதல் தாங்கிடாது
உயிர் விட்டே போகும் நாளை எண்ணிடும் காலமது
அட அற்பனே நீ யாராகினும் வெறு சடலம் அப்போது ~~~

கோலமிது

- வித்யாசன்

** சுருக்கக் கோடுகள் யாவும் வாழ்வின் சூத்திரங்கள் **



இளமையின் செலவு முதுமை. பழுத்த இலையை பறிக்கத் தேவையில்லை. நிதானமாய் தீண்டும் காற்றின் ஒரு தடவுதல் போதுமானது...
வாழ்கையின் ஆணிவேர் நரையாகும் நிலையில் பக்குவம் வார்த்தைகளை மென்று கொண்டிருக்க விரிசல் விழுந்த உதடுகள் எழுத்துக்களை கோர்ப்பதில்லை. மேனி வறட்சியில் அனுபவ அறுவடை மட்டுமே சாத்தியமான ஒன்று...
துயரம் துருபிடிக்கும் கறையான் நாட்களில் தனியொரு கவலை தின்பது இயலாத இளமையின் கூன் வளைவாகும். தடி கொண்டு தாங்கி கடப்பது வீழ்த்திடும் மூப்பை பிரம்பது பிறப்பதன் ரகசியத்தை நீளெனச் சொல்லும்....
மூச்சும் பாரமென திணறுகையில் திருகும் ஞாபகங்களின் நினைவு சாலையில் அழைக்கும் பயணத்தின் இழுபறி சுவாசத்தின் கதை யாவும் காலத்தின் மிகப்பெரும் கடிதமாகும்...
பொக்கிஷமான யாவும் பொக்கை வாயில் மெல்ல முடியாது ஜீரணிக்காத ஓசைகளின் எட்டா தூரத்தை கட்டிக் கொண்டு தடம் பதிக்கிறது செரிமானக் கூட்டில் சேமித்து வைக்கப்பட்ட சுருக்கு பையின் சில்லரையாய்...
எண்ணங்களின் குவியல் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட நிராசை ஒன்று எரியும் சடலமீது எழுந்தாடுகிறது பெரும் சர்ப்பமாய் சாம்பலாகி சந்ததிகளின் முதுகெலும்பு ஜன்னலாய் வேகாது மீள் இளமையாய் ~~~

- வித்யாசன்

மாதவா

வேதவா மாதவா
வேண்டுதலற்றக் காதல் எனதல்லவா
ஆடவா பாடவா
புல்லாங்குழல் இசைப்பது எனக்கல்லவா
வெட்கத்தில் பூச்சூடவா
பக்கத்தில் பாய்போடவா
பால் நிலா எனை எடுத்துப் பந்தாடவா ~~~ 


- வித்யாசன்

ஆசை மொய்க்குதடா

ஆசை மொய்க்குதடா
கண்ணா...
நின் அழகென்னை கட்டி இழுக்குதடா

பாசை திக்குதடா
கண்ணா...
என் பார்வை திக்கெல்லாம் தேடுதடா

மோகம் கூடுதடா
கண்ணா....
நின் ஞாபகம் மெதுவாய் தின்னுதடா

ஏக்கம் விம்முதடா
கண்ணா...
மார்க்கம் யாவும் நீயென நீளுதடா

புல்லாங்குழல் எடுத்து ஊதிடடா
கண்ணா...
அல்லாது போனால் என் பொழுதது புலராதடா

கண்ணா ~~~

- வித்யாசன்

அடிபணிந்து போவதில்லை

பெரும் பஞ்சம் வந்து பசி தின்றபோதும் எவர்க்கும்
அடிபணிந்து போவதில்லை
நெஞ்சு கூடு நெருப்பினில் வெந்தபோதும் நேர்மையது மாறுவதில்லை
உடலினை கூறுபோட்டு கொன்றபோதும் குந்தகம் செய்வதில்லை
வானகமும் வையகமும் தந்தபோதும் வாய்மை தவறுவதில்லை
ஆதவனே நேரில் வந்து நின்றபோதும் அஞ்சுவதில்லை
காரியமது ஆகவே இரு கை கூப்பிக் கெஞ்சுவதுமில்லை
மாயையே ஆசை தந்து எனை ஆள்வதென்பது ஆவதுமில்லை
ஆகையால் நீ வந்த வழி சென்றுவிடு
நான் அழியா தமிழ் பிள்ளை ~~~ 


- வித்யாசன்