சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;



குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்

இது சடுதியில் நிகழட்டும்;



உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு

அழுவதே என்ற நிலை மாறட்டும்;



இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்

இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;



காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்

எழும் தோல்விகள் தோற்கட்டும்;



துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்

நம் துன்பங்கள் மூழ்கட்டும்;



மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்

நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;



வானம் எட்டி கிழியும் அளவு

கைகளில் வெற்றிகள் குவியட்டும்;



பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்

இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;



எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று

இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!