வியாழன், 4 ஜூன், 2015

** தோழி **


எங்கே போய் மறைந்தான் தோழி
இங்கே காதல் நோய் பெருகுதடி தோழி
கண்ணில் கருவளை விழுவதேனடி தோழி
காணாது இரவுகள் கொடுவாளாவதேன் தோழி ;


எண்ணி எண்ணி நினைவு மெலிந்ததடி தோழி
மண்ணில் வீழ்ந்த கண்ணீர் கடலானதடி தோழி
தூது சொல்லிடத் தென்றல் துணையில்லையடி தோழி
தூக்கத்திலும் மார் சாய்ந்திட கனவு துழாவுதடி தோழி ;


நாட்கள் ஏக்கத்திலே கரைதல் ஞாயமில்லையடி தோழி
பூக்கள் பார்க்கையிலே அது ஏளனம் செய்யுதடி தோழி
கை சேர்த்தல் பிரிப்பதிங்கு தூரம் பெரும் துயரமடி தோழி
பிறிதொரு இன்பம் சூழ்ந்திப்பினும் அது சுகமில்லையடி தோழி ;


முகம் பாராது நிதம் படும்பாடு நீ எடுத்துக் கூறடி தோழி
பாவலன் எழுதா ஏடிங்கு பாலாய் போவதையும் சொல்லடி தோழி
நேசத்தை வைத்தேன் வேறென்ன தீங்கிழைத்தேன் தோழி
எந்நேரமும் அருகினில் அவனது வாசமது போதுமடி தோழி ;


அஃதில்லையேல் இவ்வாழ்வது மரணமடி தோழி ~~~

- வித்யாசன்

** புல்லாங்குழல் **

அவ்வாசுதேவன் இதழ்களுக்கு மட்டுமே புல்லாங்குழல்
ஏனையோருக்கு பெரும் மூங்கில் காடு ~~~

- வித்யாசன்

** காட்சி தந்தாள் காளி **



காலை தூக்கி ஆடி நின்றாள் காலையில் காளி
இந்நாளை நல்வேளை ஆக்கிடுவாள் எம் தேவி
இருளை தூளாக்கி பெரும் சுடரானவள் சூலி
அனலை விழிகளில் சூடி எதிர் நின்றாள் யாதுமாகி ;

மோகம் குடித்து மோட்சம் அருள்வாள் ஆதி சிவனின் பாதி
கருமேகமென உருவெடுத்து தன் கோவம் தீர்த்து பொழிந்திடுவாள் மாரி
பூதகணம் சூழ நாகமென நா நீள நல் வாக்கு தந்திடுவாள் ஓம்காரி
பாதகம் செய்வோரை பாராது நின் பாதங்களால் நசுக்கிடுவாய் பரா சக்தி ;

மண்டை ஓடு அணிந்து மாயை யாவும் கொன்று மகிழ்ந்திடுவாள் மாயி
தொண்டர் தம்மை நாடி வந்து தொழுவோருக்கு இம்மை நீக்குபவளே நீலி
அன்பை ஆயிரங் கரங்களில் அள்ளிக் கொடுக்கும் ஆனந்த ஜோதி
ஆணவம் எங்கும் தலைகாட்டினும் அதனை கொய்யும் அகோரி ;

வானெங்கும் படர்ந்து எம் நாவில் நிறைந்து நிற்கும் வாணி
தீதெங்கு நிகழினும் தானங்கு தயங்காது உதிரம் நனைக்கும் மேனி
பாரெங்கும் கேள் ஒலிக்கின்றது பராசக்தி நின் பெயரை ஓயாது மணி
யாரென்று எனை அறிந்து நின் தாள் பணிந்தேன் தாயே நீயே எனதவனி ;


- வித்யாசன்

** வீணனென **

நீ விட்டெறியும் சில்லறைக்கு தலை கவிழ்ந்து
பொறுக்கிடும் வீணனென நினைத்தாயோ
வீழ்ந்தே ஆயினும் எழுந்திடும் ஆதவன் ஆவேன்
ஒவ்வொரு விடியலிலும் ~~~



- வித்யாசன்

** கெஞ்சேன் **

கையிலே திறமிருக்க
நெஞ்சிலே துணிவிருக்க
காலமே அஞ்சேன்
கடைவரை நின் தாள் பணிந்து கெஞ்சேன் ~~~


- வித்யாசன்

** சுடர் விட்டு **

நின் சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைத்திட எண்ணி பின் சட்டென எரிந்து சாம்பலாகி
பட்டென வீழும் பாமரனே
எட்டுத்திக்கும் என் சொல் சுடர் விட்டு நிற்கும் வந்துபாரேன் ~~~



- வித்யாசன்

** கிழக்கு - மேற்கு **

நீ கிழக்கு
நான் மேற்கு
கோபத்தில்
முதுகு காட்டட்டுமே
வீழ்வதும்

எழுவதும்
நெருக்கத்தில்
நேர் நேர் முகமே ~~~


- வித்யாசன்

** ஞாலமே **

காரிருள் கலைந்திட்டு பேரொளி கனிந்த ஞாயிற்றே
நினைவு யாவிலும் திண்ணமாய் ஞான ஒளி பரவிடச் செய்வாய்
தானென ஆணவம் முழுதாய் சுட்டெரித்தே
ஆனது யாவிலும் நின் அருளென ஆனந்தம் அடையச் செய்வாய்
வீணெனப் பொழுதுகள் வீழ்ந்திங்கு கழிந்திடாது

வீணை நாதமாய் எமை மீட்டி நல் கானம் பூட்டி களிப்படையச் செய்வாய்
காலமே தின்றென்னை கரைத்திடாது
என்றும் மங்காது எங்கும் நிறைந்திடச் செய்வாய் ஞாலமே ~~~



- வித்யாசன்

** பேரன்பு **

பிரித்திட முடியா ப்ரியத்தினை அளந்து பார்க்கும் மனத் தராசில் சமமாக வீற்றிருப்பதில்லை நம்மிருவரின் பேரன்பு ~~~

- வித்யாசன்

** துள்ளிச் சிதறி **

நறுபட்ட நூலிலிருந்து அவிழும் மழைத்துளியாய் நழுவி
தரை மீது மோதி துள்ளிச் சிதறி மனமெங்கும் பரவிச் சுழலும்
நின் நினைவுப் பாசிமணிகளை ஒவ்வொன்றாய் கோர்க்கின்றேன்
சூடுவதற்கல்ல மார்பில் சுமப்பதற்கு ~~~


- வித்யாசன்

** சாகாது சிவப்பொருள் **

உள்ளத்தில் உறுதி கொள்
உடைந்தால் உயிரைக் கொல்
வெள்ளமென கோபம் பொங்கிடின்
பள்ளமென பொறுமை கொள் ;

தெள்ளத் தெளிவுடன்
வார்த்தை சொல்
கள்ளமற்ற நெஞ்சத்துடன்
கனிவோடு கேள் ;

நல்லனவற்றுக்கு நயமுடன்
கொடு தோள்
எதிர் எவரெனினும் தயங்கிடாது
மார் நிமிர்த்தி நில் ;

யாவிலும் பற்றற்று
இன்புற்று ஆள்
அன்பது வைத்தாயின்
அடிமையாகாது மீள் ;

கொடுமை காண்பின்
உயர்த்திடு வாள்
வறுமை உடுப்பினும்
நெறி மாறாது வாழ் ;

சுதந்திரக் காற்றாய்
நாளெல்லாம் சுழல்
சுவர் மோதும் பந்தாய்
வேண்டும் மீண்டும் எழல் ;

மரமென உருமாறி
நித்தமும் கொடு நிழல்
மனமது மலிவாகாது
சூட்சமம் அவிழ் ;

முயலுதல் முடங்காது
தொடர்ந்திடும் அலை கடல்
அதுபோல் அடங்கிடாது
அனுதினமும் வீழ் ;

எது நேர்வினும் வேண்டி
நிகழ்ந்திடாது பிறர் தொழல்
வையத்தில் அழியா அழகது
இயற்கையின் எழில் ;

யாவுமது விலகினும்
துணையிருக்கும் தமிழ்
சிதை மூட்டி சாம்பலாகினும்
சாகாது சிவப்பொருள் ;

ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்

** அழகு அழகு **


காரிருள் அழகு
அதிகாலைக் கதிரொளி அழகு
கூவும் குயில் மொழி அழகு
உதிரும் இலையாவும் அழகு

தேயும் நிலவழகு
பாயும் நதி பல அழகு
சேயின் முகமது அழகு
தாயின் அன்பது அழகு

வாய்மையின் சொல் அழகு
நேர்மையின் வாழ்வது அழகு
வீரத்தின் நடையழகு
நேயத்தின் நிழல் அழகு

வேதத்தில் பொருள் அழகு
சோகத்தில் இறைவன் அழகு
வாதத்தில் தமிழ் அழகு
மோகத்தில் கவியழகு

வானத்தில் மழை அழகு
வனத்தில் மயில் அழகு
தானத்தில் கல்வி அழகு
தாகத்தில் தழுவல் அழகு

பூமியில் பச்சை அழகு
பூவினில் வண்டழகு
பூங்காற்றது புது அழகு
புல்லாங்குழல் மாதவன் அழகு

காமத்தில் காதல் அழகு
சாமத்தில் அல்லி அழகு
மாதத்தில் மார்கழி அழகு
மஞ்சத்தில் பெண் அழகு

ஞானத்தில் உண்மை அழகு
கானத்தில் கடல் அலை அழகு
மானத்தில் மாதர் யாவரும் அழகு
இவ் வையத்தில் பாரதம் மாத்திரம் அழகு

அழகு .... அழகு ... அழகு ...

- வித்யாசன்

நெற்றித் திலகம்

பெரும் சுடரினை நெற்றித் திலகமெனயிட்டு
எழும் பேராசையினை புன்னகையில் புதையிட்டு
நல் ஞான ஒளியதனை நின் திருமுகத்தில் படரவிட்டு
மேன்மையது மெய்யது நின் நாமம் உரைத்திட்டு
வீழும் ஆவியதனை பொய்யற்று நிரை பொருளிட்டு
யாவிலும் பற்றற்று நின் பாதமே எப்பொழுதும் பற்றிட்டு
கெட்டொழியும் தீயதோர் நினைவினை விலக்கிட்டு
முற்றும் நீயென என்பதனை முழுதாய் உணர்திட்டு
விடியும் ஒவ்வொரு காலையிலும் சுடர் விளக்காய் என்னில் எரிந்திட்டு
சூட்சமங்களின் மாயையை சுகமென அனுகாதிருக்கவிட்டு
ஆதி சக்தியே நின் அடிதொழும் மலரென எனை ஏற்றிட்டு
அடியனை துன்பம் பீடிக்காது காத்திடுவாய்
செங்கதிரவனாய் மன வானெங்கும் நிறைந்து அருளிடுவாய்
அன்னை பராசக்தியே என்னில் ஒளிர்ந்திடுவாய்

ஓம்.... ஓம்.... ஓம்....

-வித்யாசன்

** கண்ணா நினக்கு சமர்ப்பணம் **



போயொளிந்தாய் பொறுக்கவில்லை நெஞ்சம் பொசுங்குதடா
தேடியலைந்தேன் வெறுக்கவில்லை மனம் விரும்புதடா

முன்னே வாராது என் கண் மூடி நின்று
தலை பின்னே திரும்பி இமை திறந்திட அதன் முன்னே
நீ மறைந்திட - இதுபோல்
தீராது செய்தல் முறையாகாது
தீயென உள்ளம் எரிகிறது நினைக் காணாது...

ஓவெனச் சிறு குழந்தையாய் அழுகிறேன்
ஓயாது நின் நினைவால் வாடுகிறேன்
புல்லாங்குழல் இசை கேட்டால் எழுந்தோடுகிறேன்
புரிந்தும் நின் மனம் கல்லாகிட நான் கரைகின்றேன்

அன்றொரு நாள் அருகினிலமர்ந்து சொல்லிய சொல் எல்லாம் சொல்லி உளறுகிறேன் ;
ஆசை தீர அணைத்து நானழைக்கும் போதெல்லாம் வருவேனென நீ உரைத்த உறுதி இழக்க கலங்குகிறேன் ;

தோழி எள்ளி நகையாட விடுதல் நலமோ
நினை நம்பி தந்தென்னை வந்து பாராதிருத்தல் தகுமோ
நின் சொல்லில் பொய்யிருத்தல் நியாயமோ
பூவையரைக் கிள்ளி மயிற்பீலியென சூடுதல் வழக்கமோ

என் நிலை சொல்லி தூதுவிட ஆளில்லையே
நான் செய்த பிழை என்ன நீ கூறவில்லையே
நிலைமாறி ஓர் நாளும் நான் போகவில்லையே
நின் மீதுக் குறையொன்றும் சாடவில்லையே

எதுவாயினும் என்னிடம் முறையாக முகம் காட்டிப் பேசிடு
கண்ணா...
அது முடியாது வாராது போவேனென மௌனித்தால்
கண்ணா... இனி
ராதையெனக் காத்திருக்கலாகாது
கோதையென பூத்திருக்கலாகாது
வேதனையது தாங்கிடலாகாது
வந்திடுவேன் இக்கணமே என்னுயிர் நினக்கு சமர்ப்பணமே ~~~


- வித்யாசன்

தேட

மதிப்பெண்கள் பட்டியலில் தொலைத்த
பாலியத்தை எந்த தெருவில் தேட ;

பாடம் மனப்பாடம் ஆக
பட்டாம் பூச்சி சிறகினை உதிர்த்த இடத்தை எங்கே தேட ;

புழுதி விளையாட்டை புதைத்த புத்தகத்தை
எந்த வகுப்பறையில் தேட ;

பட்டங்களுக்கான பாரங்களை பிஞ்சுகள் முதுகில் சுமக்க
இளமையில் முதுமை தேட

கனவுகள் காம்பஸ், கேம்பஸாக கான்வெண்ட் சுவர்களுக்குள்
சில்லரையில் சீட்டுகள் தேட ;

கோர்ட், டை, ஷி வுக்குள் மேலே முகம் சுடச்சுட வீற்றிருக்க
சாக்ஸ் அரிப்பு தடத்தில் ஆங்கிலம் தேட ;

சம்பாதிப்பு , மதிப்பு இவையே கல்வியாக
சரஸ்வதி தாயே நின் அருளை எவ்வாறு தேட ;

முதலை மட்டும் கொண்டாடும் முட்டாள் உலகில்
கடைசியை எப்படித் தேட ;

நீலத்தில் மீள முடியாது மூழ்கிய மீன் குஞ்சுகளின் உயிர்
சிவப்புச் சுழிக் கயிற்றில் ஊசலாட ;

எந்த காகிதப் படகில் மிதந்து
எங்களுக்கான கரையை எங்கிருந்து தேட ~~~


- வித்யாசன்

ஆசை

நிறைவேறா ஆசை ஒன்று
நிதானமாய் வானில் நின்று
நித்தமும் தேய்ந்து வளர்கிறது
நம் நேசம் தின்று ~~~


- வித்யாசன்

மழை

எழுதி வைத்துவிட்டேன்
நீ வந்து ...
பார்த்தால் ஓவியம்
வாசித்தால் கவிதை
கிழித்தால் கண்ணீரல்ல
மழை....

ஓம்...

தீதென்னைத் தீண்டிடாது
கந்தவேல் நிதம் காத்திடும்

நோய்மை வந்தென்னை நெருங்கிடாது
முருகன் நாமம் மருந்திடும்

ஆணவம் அண்டிடாது
ஆண்டியன் அடியது அருளிடும்

வேண்டியது தந்திட மாமயிலோன்
மனமது உடனே இறங்கிடும்

ஆசைப் பற்றது அற்றிட
ஆறுமுகனின் பன்னிரு விழியது சுட்டிடும்

நேசமது நிறைந்திட
நெற்றிப் பிறந்தோனை உள்ளமது ஆழத் தழுவிட விளைந்திடும்

போகமது மோகமது நீங்கிட
ஓம் எனும் மந்திரத்தை ஓதிட அது ஓடிடும்

வடிவேலன் அழகன் எழில் மேனிதனைக் கண்டால்
தனை மறந்து தமிழ் காதல் கொண்டிடும்

ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்ன

ம்...ம்...

வார்த்தையின் வண்ணங்களில் மூழ்கிடும்
எண்ணங்களின் ஒளிச் சிதறலில் மின்னிக் கொண்டிருக்கும் விழிகளிடம் இமைகள் முளைப்பதில்லை

இருளைத் துளைக்கும் மெல்லிய புள்ளிகளின் வளைவு நெளிவு கோலத்தின் விரல் முத்தம் நிசப்தமாய்
அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் மழைத்துளியின் மன்மதப் பார்வையில் மயங்கும் ஈரத்தை எப்படி உணர
வாடா வண்ண மலரெடுத்து சாய்ந்திடா மார்மீது மாலை சூடி வெட்கத்தில் வீதியெல்லாம் சிவந்ததென்ன
கோடிக்கணக்கான கண்கள் வேடிக்கை பார்க்கையில்
கோவில் திருவிழாவில் ஜோடியாய் நீயிருந்து
தனித்திருக்கும் என்னை கேலி செய்யும் காரணம் என்ன

ம்...ம்...

- வித்யாசன்

பரத்தி

தனித்து துரத்தி வந்தேனென கறுப்பு நிறம் காட்டி
முள்ளுடைய அள்ளி மகளென முன்றானை சூட்டி
தள்ளி நின்றே முகத் திரையிட்டு நகை பூட்டி
பல்லினைக் காட்டிடுவோர் மத்தியில் நிறுத்தி
மத்தளம் தட்டி பதம் பார்க்கும் மலைக் குறத்தி

வில்லினது அம்பு வீழ்வதில்லை வீழ்த்திடுமே
சொல்லினில் சூதிருப்பின் பகடைப் பசியாற்றி
கொல்லடி பாதகமேதுமில்லையடி பாலைவன பரத்தி~~~

- வித்யாசன்

சீ.. - நீ

அகல விரித்து இதழ் நீட்டி
பூப்பெய்ததை காற்றினில் பறைசாற்றி
வண்டினை மகரந்தப் பொடியினில் குளிப்பாட்டி
காரணம் நானல்ல என ஏளனம்பூட்டி
மாலையில் வாடி மீண்டும் காலையில்
வா என அழைக்கும் பெரும் போதை கூட்டி
பெயரை தொலைத்த பூ ஒன்று
மெல்லென தலையாட்டி
காம்பினை மறைத்ததென்ன
ஆசையற்றவளா
ச் சீ.. சீ.. - நீ
பாலைவன பனிக்கட்டி ~~


- வித்யாசன்

ஆச்சர்யக்

இருள் கூட்டில் ஊர்ந்து மிதக்கும் நினைவின் இறுதியில்
நிச்சயிக்கப்படா கீழ், மேல் முடிச்சவிழும் துளிச் சிதறலில்
ப்ரியம் பெயர் சூட்டி குலாவுகிறது ஆடையற்ற ஆச்சர்யக் குறியாய் !!


- வித்யாசன்

இறந்ததை

அவ்வளவு எளிதாய் அந்த உயிர் பிரியவில்லை
தொடர்ந்து அனைந்து எரிந்து இறுதியாய் அமைதியாய்
தனது இருண்ட பக்கத்தை ஒளிரச் செய்ய சொன்னது
தான் இறந்ததை ~~~


- வித்யாசன்

ஞானமே

நெஞ்சிலே தெளிவும்
சொல்லிலே வலுவும்
கண்ணிலே கனிவும்
கசடு அழிந்த நல் நினைவும்
உள்ளத்தில் பேரன்பும்

உண்மையில் உறுதியும்
மனக் குளத்தினில் குழப்பம்
ஆகாயத்தாமரை என மறைத்திடாது
ஆதவன் விழிப் பார்வையில் மலர்ந்திருக்கும்
மலரென எமை விரிந்திருக்கச் செய்வாய் ஞானமே ~~~


- வித்யாசன்

மௌன ஒளி

குடைக்கு கீழிருந்து தேடும் விழியின் பார்வை எங்கும் பரவிக்கிடக்கிறது நினைவின் மௌன ஒளி ~~~


- வித்யாசன்

** முரசு கொட்டு **

வெற்றி வெற்றி என முரசு கொட்டு- இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு - இனி
எந்நாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

முற்றும் கற்றறிந்த மூடர் முகத்தை முட்டு
சற்றும் வளைந்திடாது நேர் நின்று கர்வம் தட்டு
கத்தும் கடல் அலையென எழுந்து வானம் தொட்டு
கீறும் மின்னல் வாள் எடுத்து பகைவர் தலை வெட்டு ;

கொடுமை நேரிடின் ஒடிந்திடாது பெருங்குரல் போரிட்டு
வறுமை எதிர்வரினும் கை ஏந்திடேன் என சபதமிட்டு
மடமை உரைப்பின் உண்மை ஒளி நேர் கண்பட்டு
வாய்மை இழந்திடாது உழைப்பினில் திறமை காட்டு ;

நடை எட்டு வைக்கும் இடமெல்லாம் விரல் நீட்டி சுட்டு
மார் நிமிர்த்தி அடிமை எங்குமில்லை என கை கட்டு
ஏர் பிடித்து தாய் நில மண்ணை நெற்றியில் திலகமிட்டு
ஏழ்மை பேதமை எங்குமில்லை படி புதுப் பாட்டு ;

கோழை எவருமில்லை புருவம் உயர்த்தி மீசை சுருட்டு
கோ மகனே ஆயினும் நேர் வழியில்லையேல் உயிர் விரட்டு
பார் எங்கள் புவனம் யாவும் பாசத்தின் தேர் எனப் பூச்சூட்டு
அதில் பாவையரே பாரதத்தின்  தாயென எங்கும் நீ பறைசாற்று ;

வெற்றி வெற்றி என முரசு கொட்டு - இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு- இனி
எந்தநாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

- வித்யாசன்

தென்படும்

மூடன் முன் வரிசையில் வீற்றிருந்து
கடை கோடி பாமரனைச் சாடுகிறான்
நரம்பில்லா நாவால் வார்த்தை சாட்டை சுழட்டுகிறான்
பாவம் கூடிழந்த பறவைகள் என்ன செய்யும்
கூனிய முதுகில் இனி வறுமைக்கோடுகள் ஒவ்வொன்றாய் தென்படும் ~~~


- வித்யாசன்

தள்ளி நின்று

எஞ்சிய எச்சில் சோற்றினை தூக்கி வீசிய குப்பையில்
தள்ளி நின்று கிளறி நக்கும் நாயின் பசியாய் ஆனது நமதன்பு ~~~


- வித்யாசன்

கண்ணனே

பள்ளமெல்லாம் காற்றால் நிரப்பி
புது ராக வெள்ளம் காதினில் பரப்பி
சிறு புல்லாங்குழலில் பூங்கோதையை மயக்கி
மனம் நில்லாது ஆடும் பொல்லாத அலையென
தன்னாலே நின் பின்னாலே வர வைத்தாயே

கரு நீலக் கார் மேக கள்வனே என்


கண்ணனே ~~~


- வித்யாசன்

கடுகும் கலங்கேன்

காலமே கடுகும் கலங்கேன்
வேதனைகள் சூழ்ந்து
வெந்தென்னைச் சாம்பலாக்கினும்
சோதனைகள் புரிந்து
சோக சூட்சமங்கள் சூடினும்
பல காரணங்களாய் எழுந்து
சோர்ந்திட்டு பேரிருளில் சாய்த்திடலாம்
மிகச் சாதாரண மனிதன் - இவன்
என்றெனை நினைத்தாயோ
தமிழ் ஈன்றவனை ஒருபோதும்
கவலைகள் தின்னாது
என்பதனை மறந்தே
என் முன்னே வந்து நீ நின்றாயோ
மாயனேப் போய்விடு; மார் பிளக்கும்
நரசிம்மனாய் எனை மாற்றிடாது ~~~


- வித்யாசன்

நாவறுத்துக்கொள்

சொல் ஒன்று
செயல் ஒன்று
நகைக்கின்றது
நிலைக்கண்ணாடி முன்
நின்று முகம் பார்க்கையில்

நாவறுத்துக்கொள் என்று ~~~


ச்சியஷ்

இரவு கோப்பையில்
உருகும் பனி கட்டி மேகம்
தள்ளாடும் விண்மீன்
தாராளம் வெள்ளை ஒயின்
பருகி மயங்கும் விழிகள்

சீக்கிரம் சொல்ல வா
ஒரு ச்சியஷ் ~~~

- வித்யாசன்

தனத்தந்தோம்

பூவினில் தேனாய் ஆடுகிறாய்
பூப் பந்தாய் துள்ளி ஓடுகிறாய்
பூலோகம் யாவும் நீ ஆகுகிறாய்
பூ மழையாய் என்னில் தூறுகிறாய் ;l

வானம் நிமிர்ந்து மேகம் பார்த்தால்
உந்தன் முகமாய் மாறுது ;
பூமி சாய்ந்து இமைகள் மறைத்தால்
உந்தன் ஞாபகம் கீறுது ;

பொய்யென ஆன பின்னும்
பெய்யெனப் பெய்ந்து - நெஞ்சம்
மெய்யென இனிக்குது
தனத்தந்தோம் ~~~


- வித்யாசன்

தோகை

நின் வருகையின் ஆவலில் என் மனதானது ஆவதேன்
மழைக்கு முந்தி தோகை விரித்தாடும் மயிலென ~~~


- வித்யாசன்

சிவக்க

ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்து இழுக்க
இரவு முழுவதும் பொழிந்த பாலினை குடித்து விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~


- வித்யாசன்

வான் மழை

எனதற்ற எதுவாகினும் அதன் மீது மோகம் கொள்ளுதலானது
கடலில் கலக்கும் வான் மழையானது ~~~


- வித்யாசன்

இரையாவாய்

சிற்றெறும்பென
சீரிய நரித்தனம் புரிகின்றாய்
கற்றுணர்ந்த கர்வமற்ற மனதிடம்
கள்ளத்தனம் செய்கின்றாய்
முற்றுணர்ந்தோனென

முட்டாள் ஆக நினைக்கின்றாய்
காலம் கற்பித்த பாடம் தனை மறந்து
காதினில் பூ சுத்துகின்றாய்
உழைப்பினை உணராது
ஊதியத்தில் ஊனமாகிறாய்
உண்மையினை உணராது
உன்பாட்டிற்கு உளறுகின்றாய்
இனியும் தப்பாட்டம் ஆடினால்
தப்பிடாது தலை மாட்டுவாய்
உன்னுடன் மழைக்கு மட்டுமே துள்ளியாடும்
தவளைகளை கூட்டு சேர்த்து நிச்சயம் பாம்புக்கு இரையாவாய் ~~~


- வித்யாசன்

ஆழ உழுதினை

நல் காலப் பொழுதினை
ஆழ உழுதினை செய்து
அங்கே நாம் அன்பை விதைப்போம் ;

பேதமற்ற நீர் ஊற்றி
உறவெனும் உரமேற்றி
நம்பிக்கை வேரிட்டு இலை நீட்டுவோம் ;

உண்மையின் கிளை விட்டு
உரிமையின் உயரம் தொட்டு
நாளைய மரமாவோம் ;

பேராசைப் புயல் காற்று
பெயர்த்திட வரினும் அசையாது
அடை மழையின் குடையாவோம் ;

நம்மினத்தவர் வந்திங்கு
கனியுண்டு இளைப்பாற
நம்மாலான நிழலும் கொடுப்போம் ~~~


- வித்யாசன்

சூல்

எனக்கானது யாவும்
உனக்கானதில் சூல் கொண்டு சுடர்விட்டெரிகிறது ~~~



- வித்யாசன்

வெள்ளைச் சுடரொன்று

வெள்ளைச் சுடரொன்று
வெட்ட வெளி வீதியிலே உலவுகிறது
கொள்ளை அழகுண்டு
கோபத்திலே தனித்து முகம் திருப்பியிருக்க - அன்பு
இல்லையென நம்புவதற்கில்லை
இரவு முழுவதும் விழித்திருக்கு - மிகு
ஏழை என்னை வெகு தூரத்திலிருந்து
வேதனை செய்திடலாகாது -ஒரு
கள்வனைப் போல்
ஓர் நாள் காணாது ஒளிந்திருக்க
முள் அதனை விழியெல்லாம்
சொருகியதாய் வலியெடுக்க
சொல் உடனே
என்மீதுண்டானக் காதலை
இல்லையெனை எப்பொழுதும்
நின் எல்லையில் நின்றே வதை~~~



- வித்யாசன்