சனி, 17 மார்ச், 2012

தீரா-மீரா -13

நிலா...
உடை களையும் நேரம்
பொழுது புத்துணர்வு பெறும்!

வானம்...
கண் மை யை கழுவும் நிமிடம்
பூமி பிரகாசமாகும்!

தீரா - மீராவின்
உரசலில்...
இயற்கை தன்னை
சருகுகளாக உதிர்த்து கொண்டிருந்தன!

நதிக் கரையின்
இடைவெளிக்கு பின்
கரைகளின் வார்த்தைகள் எழுதப்படும்!

மழைத் துளியின்
இடைவெளிக்கு முன்
வானவில் அர்த்தங்களை பொறிக்கும்!


உளி முனையின்
இடைவெளிக்கு இடையில்
சிந்தனையின் சிலை புலப்படும்!

தீரா - மீராவின்
உரசலின் நீள் இடைவெளிக்கு
முன், பின், இடையில்
மெளனங்கள்!


ஒரு கணம்
உரைந்த பணி
உருகியதாய்
உதடு திறந்து
ஆரம்பித்தான் தீரா!


சுற்றும்முற்றும்
பார்த்தான்
சூழ்நிலைகளை
சுழற்றி போட்டுக் கொண்டு
கற்பனைகளை
கழற்றி கொண்டிருந்தான்
மீராவிடம், தீரா!


மலையை பார்...
அசையாத கருப்பு நதியாய்
நீள்கிறது!

வானை பார்...
விதவிதமாய் ஓவியங்களை
வரைகிறது மேகம்!

காற்றை உணர்...
தீண்டலின் ஆழத்தை
சொல்கிறது!

உன்னை கண்ட நிலா
முகம் காட்ட
மறுக்கிறது!

வண்டுகள்
தேன் குடித்து
பூ இதழ் மடியில் நீந்துகிறது!

நதிக் கரைகள்
நீரில் கால் கழுவி
சுத்தம் செய்கிறது!

விரல்களா ?
இல்லை
புல்லாங்குழலா ?
என் உதடுகளுக்கு
சந்தேகம்!

அசையும்
தீபமாய் நீ!
வெளிச்சத்தின்
ஈரமாய் நான்!

அதோ...
பறக்கிறது பறவை
எப்படி?
ஒரு பழம்
அமர்ந்திருக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்!


அதோ...
அலைகிறது முகில்
எப்படி?
வானவில்
மண்ணில் முகாமிட்டுக்கிறது
என்ற தடுமாற்றத்தில்!

அடிக்கொரு முறை
இமைக்காதே!
துடிக்கின்ற
இருதயத்தை நறுக்காதே!

தொடர்ந்தான்
விடாது
கற்பனையை
பொழிந்தான்!

கடல்
வெப்பம்
அலை
கிளை
குளிர்
அழகு
சிலிர்ப்பு
சிரிப்பு
உயிர்ப்பு
தவிப்பு
கதகதப்பு
என
எல்லாவற்றையும்
எல்லையில்லாது
இறுதியில்
இளைத்து
பார்த்தான்
தீரா - மீராவை !


ஆண்
எப்போதுமே
அழகை கண்டதும்
ஆழ விழுந்து அமிழ்ந்திடுவான்!

பெண்
அப்படி இல்லை
எதிர்மாறானது!

தீரா
விழுந்து
வார்த்தைகளில்
மூழ்கி
விழுங்கிக் கொண்டிருநதான்!

இத்தனையும்
கேட்ட மீரா
ஒரே
வார்த்தை
ம்.......


தீரா
திகைக்கவில்லை!
நகைக்கவில்லை!
பரிதவிக்கவில்லை!
பரவசபடவில்லை!
கோபபடவில்லை!

மாறாக...
ரசித்தான்!

எத்தனையோ
கற்பனைகளை விதைத்தேன்
அத்தனையும்
அர்த்தமில்லை என்று அறிந்தேன்

ம்...
என்ற ஒரு வார்த்தைக்கு முன்
மொத்தத்தையும்
சமர்ப்பனம் செய்தேன்
என்றான் தீரா!

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக