புதன், 8 செப்டம்பர், 2010

இன்று

மர இலைகளின் கைதட்டல்,
கொடிகளின் கைகோர்ப்பில் வரவேற்ற சாலை:
செல்போன் டவர்களாகவும்,
மின் இணைப்பு வயர்களாகவும் உருவெடுப்பு...

ஆற்றங்கரை குளிர்காற்றிலும்,
குருவிகளின் சத்தத்திலும் குதூகலித்த நிமிடங்கள்:
புழுதிகளின் முகமூடியிலும் ,
வாகன இரைச்சல்களின் பிடியிலும் நகர்கிறது...

மலை பாங்கையும்,
விளை நிலங்களையும் சுமந்த பசுமை
அடுக்குமாடி குடியிருப்பாகவும்,
தொங்கும் பூந்தொட்டிகளாகவும் புதுமை...

குளக்கரை துவையலும்,
கிணற்று குளியலும் நனைத்த சுகங்கள்:
சவர் பாத்ரூமிலும்,
வாசிங்மிசன் சலவையிலும் சுமைகளாக...

உரலில் இடித்து,
அம்மியில் அரைத்த மருந்து உணவு:
மிக்சியில் நுரைத்து,
ஃபிரிஜ்ஜில் விரைத்து விசமானது உண்மை...

பாட்டி விற்ற நெல்லிக்காயும்,
மாங்காய் வடுவும் ருசித்த வாய்:
பீசா, பிரட்டும்,
வண்ண சருகையில் லாலிபாப்புமாய்...

ஊற்று நீரும்,
மண்பானை தண்ணீரும் சுவைத்த நாக்கு:
ஃபில்ட்டர் பாட்டிலும்,
பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் குடிநீர் விலைக்கு...


வெயிலில் ஆடி,
மழையில் நனைந்தபடி கழிந்த காலம்:
புத்தகம் பாதி, அலைபேசி,
தெலைகாட்சி,கணினி என மீதியில் கரைகிறது...


வெண்ணிலாவும்,
வின்மீனும் ரசிக்க வேண்டுமாயின்:
பொட்டை காட்டைத் தேடியும்,
மொட்டை மாடி ஓடியும் நின்றால்தான் தெரியும்...

காதலும்,வீரமும்
மானமும், ஈகையும் கலந்த கலாச்சாரம்
துட்டுக்கு ஓட்டும்,
துடிக்கும் நிமிடத்திற்கு ஒரு காதலும்,
ஏழை மீது ஆதிக்கமும்,
உழைப்போரை ஏய்ப்பதுமாய் ஆனது...

மாறிப்போனது யாவும்
தேடி பார்க்க வேண்டியிருக்கிறது
 இன்று !! அன்பு மலர் 

---------Mvidhyasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக