திங்கள், 18 அக்டோபர், 2010

நீ வந்த தருணத்தில்

பனித் துளிகள் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் காலையில்...
மர இலைகள் எல்லாம் இதயமாய் மாறுது
எந்தன் சாலையில்....

மழைத் துளிகள் எல்லாம் பூவாய் ஆனது
எந்தன் வானத்தில்....
ஒவ்வொரு நிமிடமும் தீவாய் மாறுது
எந்தன் கடிகாரத்தில்...


தொடரும் அலைகள் போர்வையானது
வானவில்லில் வண்ணம் கூடியது
மின்னல் நின்று புன்னகைத்தது
ஜன்னல் தீண்டி தென்றல் வியர்த்தது !

சுடும் சூரியன் சுருங்கிப் போனது
தொடும் தூரத்தில் மேகம் போகுது
வின்மீன் எல்லாம் இமைத்து பார்த்தது
தண்ணீர் எல்லாம் தவழும் குழந்தையானது!


புல்லின் நுனியும் கத்தியானது
பூமி, வானம் இடம் மாறுது
இரவு இன்று மயிலிறகானது
இருளும் கூட ஓவியமானது !

பூமி சுற்றும் திசை மாறுது
பூங்காற்றும் இசை மீட்டுது
ஓரப்பார்வை உயிர் வேரை அசைத்தது
தேக அசைவு இதயம் தேய வைத்தது !

மாலை நேரம் வெட்கம் கொண்டது
மலைகள் யாவும் பூங் கொத்தானது
கை ரேகை எல்லாம் பாதையானது
பொய் கூட உனக்கென்றதும் கவிதையானது !

இது எல்லாம் எப்படி நடந்தது
நீ வந்த தருணத்தில் நிகழ்ந்தது !
சேர்ந்திசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக