செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தத் தரிகிட

தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா
தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா


நம் தேசமது தேசமது எங்கே போகுது பார்
எங்கும் வேசம், எதிலும் மோசம் என்றே ஆனது கேள்
வஞ்சம் பேதம் சூட்சம் பிஞ்சு மனதில் விதைத்தது யார்
நெஞ்சம் கொந்தளித்து கேவுகிறது காமப் பந்தில் நாம் ;


அஞ்சி கெஞ்சி அடிபணிந்தது இன்னும் மாறவில்லை
பெண்ணடிமை விலங்கு மண்ணில் வேரோடு சாயவில்லை
கொன்று குவிக்கும் பேதமை கொஞ்சமும் சாகவில்லை
பசி தீர்க்க கை யேந்தும் அவலம் எங்கும் நீங்கவில்லை ;


நாடி வருவோர் நன்று செய்ய நல்லோர் கையில் நாடில்லை
கேடு புரியும் காது கேளாதவர் வேந்தராதல் நியாயமில்லை
பாசம் அறுத்தெடுக்கும் பிரசவமாகிட நேசமெங்குமில்லை
யாவும் பணம் பறிக்கும் புதை குழியாக நேர்மை எதிலுமில்லை ;


அண்டம் முழுதும் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை
நேரும் அநீதிகளைத் தட்டிக்கேட்க சட்ட ஒழுங்குமில்லை
ஏடுநிறைந்தும் ஏற்றத்தாழ்வு எள்ளவும் நின்றபாடில்லை
ஏழை அழுகை சப்தம் அவர்தம் வீட்டுக் கூரை ஏறுவதில்லை ;


மானிடர் உள்ளமெங்கும் மாற்றமது வேண்டும் உடனே
அன்பு மலிந்தால் வாழிடம் வேட்டையாடும் காடாகிடும் மனமே
நல் ஓட்டமில்லா ஓனாய் வாழ்க்கை எனில் ஒவ்வாமை மிகுந்து
நாம் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொள்ளும் காலமது கையில் ;


தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா
தத் தரிகிட தத் தரிகிட தத் தரிகிட தா


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக