கண்ட
கனவது விதையாகி, வேர் விட்டு, இலையாகி, செடியாகி, படர் கிளையாகி, பூத்து,
காய்த்து, பழமாகி, தொண்டையில் இறங்க உறங்காது காத்திருக்க ...
கொண்ட கோலமது உண்ண முடியாது போனதடி கோல மயிலே ;
நாம் வாழும் வாழ்கையானது கொண்டு போக ஒன்றுமில்லா சாம்பல் அல்லது சில அடி ஆழமடி ;
இதில் சொந்தமென்ன, பந்தமென்ன உயிர் உடல் விட்டு சுடுகாட்டில் வெந்து
தணிந்த பின், சுயநலமும் சுயமும் சுகமும் வேறு கூட்டில் ஒலியும் மாயமென்னடி ;
மண்ணில் புழுத்துப்போகும் தேகமது இதற்கு பூரண அழகு ஏதடி; புத்திக்கு
எட்டிய இது பூமியில் அடங்கும் வரை ஓய்வதில்லை; கத்தியே சொன்னாலும் ஆசையின்
செவிட்டுக் காதினில் ஏறுவதில்லை ;
சத்தியமாய் சொல்லுகின்றேன்
சாவதற்கு அச்சமில்லை; எவனாக இருப்பினும் எமனுக்கு பேதமில்லை; சுற்றும் இந்த
பூமியிலே முற்றும் கற்றவர் ஒருவருமில்லை ஆதலால், தொற்றிய கவலையை தூற்றித்
தொடர்ந்து பற்றிடுவாய் பாதகமற்ற பாதையை ;
பத்திரம் பத்திரம் மனப்பாத்திரம் அது நிறையா நிலையில்லா காத்திரமற்ற கோத்திரமடி ~~~
- வித்யாசன்