வியாழன், 25 ஜூன், 2015

அறுத்திடு

ஆடையற்று அருவியில் நீராடிட
ஆசையற்று குருவியாய் பறந்திட
அமைதியில் நல் ஞானம் விளைந்திட
கேட்டது யாவும் கைகளில் கிட்டிட
பார்ப்பது யாவும் பரம் பொருளாகிட
நோய்மை வாட்டா வாழ்வது வாழ்ந்திட
பொய்மை சூட்டா வாய்மை பேசிட
பேதமைக் காட்டா பேரன்பு பெருகிட
பெரியவர் தம்மை தாழ்ந்து வணங்கிட
வஞ்சகம் கூட்டா நெஞ்சகம் பண்பட
வறுமை தீட்டா வளமது பொங்கிட
புண்படும் சொல் இதழ் சேராதிருந்திட
பயன்படும் செயல் ஆற்றல் நிறைந்திட
பிறர் குறை கூறா ஒருமனதாகிட
திரையிடா முகமது நேர் ஒளிபட
புகழது தேடா பொழுதுகள் பூத்திட
பகையது வளரா மன்னித்தருளிட
பசியது அறியா பண்டங்கள் கிடைத்திட
பாரினில் யாவரும் ஒன்றென நேரிட
படைத்தவனே மேலது அருளிட முடியாதென உரைத்திட
இவை அனைத்தும் மறந்து உனை தொழுதிட வரமிடு
அஃதில்லையேல் இக்கணமே இப்பிறவிப்பிணியை அறுத்திடு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக