வியாழன், 28 ஜனவரி, 2016

எனை மன்னிப்பாயா ?


பெரும் ப்ரியம் என் மீது கொண்ட நீ...
சட்டென பிரிந்தது சரியன்றோ ?
உன் அளவு எனை புரிந்தவர் வேறு எவருமில்லை. உன் இருதய பாசை அறிந்தவன் நான் அன்றோ...

நம்பிக்கை அற்ற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம்... எள் அளவும் எப்போதும் குறையா நம்பிக்கை என் மீது வைத்தது நீயல்லவா...

வீட்டு கேட்டினில் நீ தலை நீட்டி அப்படி என்னதான் பார்ப்பாய்... நான் அதை ரசிப்பேன் உன்னைப் போலவே இனி நீயின்றி ....

என் பேச்சு கேட்கும் உன் பேச்சு நின்றதில் மயான நிசப்தம் என் உலகில். அதிகாலை நின் ப்ரிய முகத்தினை தரிசிக்க இவ்விழிகளுக்கு இனி பாக்கியமில்லை...

எப்படி எனை விட்டு பிரிய துணிந்தாய். என் கால்களை சுற்றி சுற்றி நான் உனதான பூமி என்பதை சொல்வாயே. என் சிநேகம் சிதையாது தேகம் நுகர்ந்து நாவால் வருடும் பேரின்பம் கிட்டாது எனும் போது பெரு நீர் விழியாகிறது...

இறுதியில்... எனைத் தேடி தள்ளாடி ஓடோடி வந்தாய்.. சில நொடியில் துடிதுடித்து பரிதவிக்கப் பறந்தாய்...

நீவி விடும் விரல்கள் யாவும் தேடுகிறது. இன்னும் உன் சப்தம் என் காதுகளை துளைக்கிறது. எல்லாம் முடியும் எனும் நம்பிக்கை உன் முடிவில் சிறகொடிந்தது...

எந்நாளும் எனை காத்த உனை காக்க இயலா கரங்கள் கொண்டு மண் மூடி உனை மறைத்தேன். மறக்க இயலுமோ .... என் மனக் குழி யாவும் நின் நினைவு வால் ஆட்டியே எனை அழ வைக்கிறது.

உறங்கா உன் தூக்கத்தின் மொத்த கனவும் நானாவேன்...
எனை மன்னிப்பாயா ?

உருளும் கண்ணீர் உனதான பிழையற்ற ப்ரியம்...

ஐ லவ் யூ
ஐ மிஸ் யூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக